அட்லி, ராஜமௌலியுடன் நான் ஏன் மோத வேண்டும்... இயக்குநர் மிஷ்கின் பளிச் பேட்டி
சென்னை: இயக்குநர் மிஷ்கின் இயக்கியிருக்கும் பிசாசு 2 திரைப்படம் கூடிய விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
இயக்குவதை தவிர்த்து பிற இயக்குநர்களின் படங்களிலும் பரபரப்பாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் நேற்று தனது ரசிகர்களுடன் ஒரு நேர்காணலில் அவர்களுடைய கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மிஷ்கின்.

விருப்பமில்லா நடிப்பு
நான் இயக்கி நடிக்கும் படங்களில் என்னை ஒரு சிறிய தொழில்நுட்ப கலைஞனாகத்தான் பார்க்கிறேன். ஆனால் பிற இயக்குநர்களின் படத்தில் நடிக்கும்பொழுது எனது இரண்டு இறக்கைகளையும் வெட்டிவிட்டு அங்கே சும்மா இருப்பதுபோல் தோன்றும். காரணம், ஒரு இயக்குநராக வேலை செய்யும்போது மனதிற்குள் ஆயிரம் எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். பல தடங்கல்கள் வரும், அதனை எப்படி சமாளிக்கலாம் என்று சிந்தித்துக் கொண்டே இருப்போம். ஆனால் நடிகனாக இருக்கும்போது காலை முதல் மாலை வரை சிந்திப்பதற்கான இடம் இல்லை என்றும் அதனால் நடிப்பதில் ஆர்வம் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.

இசையின்றி படம்
வெளிநாட்டு படங்கள் போல் பாடல்கள் இல்லாமல் படம் எடுக்கலாமே என்று கேட்கப்பட்ட கேள்விக்கு எனது ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்தில் பாடல்கள் இல்லை. நானும் பெரிதாக பாடல்களை விரும்பமாட்டேன். ஆனால் வெளிநாட்டு படங்களின் சூழ்நிலை வேறு நமது சூழ்நிலை வேறு. அங்கு படத்தில் இல்லாவிட்டாலும் இசை குழுக்கள் தனியாக இயங்குகின்றன. நமக்கு அப்படி இல்லை இளையராஜாவின் இசை இல்லை என்றால் நம் வாழ்வு நாசமாகியிருக்கும். அதனால் பாடல்கள் இருப்பது தவறில்லை என்று கூறியிருக்கிறார்.

விஷாலும் துப்பறிவாளனும்
விஷாலுடன் மீண்டும் இணைவீர்களா என்ற கேள்விக்கு, துப்பறிவாளன் திரைப்படத்தை அவரிடம் கொடுத்து விட்டேன். இனிமேல் அது என்னுடையது இல்லை. விஷால் அழைத்தால் போவேனே தவிர, நானாக அவனிடம் சென்று கேட்க மாட்டேன். நாங்கள் இருவரும் நட்போடு இருந்தது, சண்டையிட்டது எல்லாமே அழகுதான். எனக்கு இப்போது அவரிடம் கோபம் குறைந்து விட்டது. அவனுக்கு என் மேல் கோபம் குறைந்ததா என்று தெரியவில்லை. தவிர, இருவருமே சேர்ந்து பணிபுரிந்தே ஆக வேண்டும் என்ற அவசியம் இருவருக்குமே இல்லை. நாங்கள் சேர்ந்தால்தான் உலகம் உருப்படுமா என்ன என்று கேட்டுள்ளார்.

தமிழ் ரசிகர்கள்
தமிழ்ப் படங்களை தாண்டி ஏன் பிற மொழிகளில் இயக்குவதில்லை என்ற கேள்விக்கு, எனக்கு தமிழில் படம் எடுக்கத்தான் மகிழ்ச்சி. ஆந்திராவிற்கு சென்று ராஜமௌலியுடன் போட்டி போட வேண்டும் என்றோ அல்லது அட்லீ இந்தி படம் எடுக்க சென்றுவிட்டார் நானும் அவருடன் போட்டிக்காக இந்தி படம் எடுக்க வேண்டும் என்றோ எனக்கு விருப்பம் இல்லை. தமிழ் பார்வையாளர்கள் மிகவும் நேர்மையானவர்கள், அவர்கள் எனக்கு போதும் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











