நிர்வாகிகள் நியமனம்.. பொங்கலுக்கு அறிவிப்பு.. மீண்டும் கட்சி தொடங்குகிறாராமே எஸ்.ஏ.சந்திரசேகர்?
சென்னை: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், புதிய கட்சியை தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Recommended Video

நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர். பிரபல இயக்குனரான இவர், சில மாதங்களுக்கு முன் அரசியல் கட்சியை பதிவு செய்தார்.
அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் இந்த அரசியல் கட்சியை பதிவு செய்தார்.

எஸ்.ஏ.சி விளக்கம்
அத்துடன் கட்சிக்கான நிர்வாகிகளையும் நியமனம் செய்தார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். 'இந்த அரசியல் கட்சிக்கு, நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என் முயற்சி. இது நடிகர் விஜய்யின் அரசியல் கட்சி அல்ல என்று எஸ்.ஏ.சி விளக்கம் அளித்திருந்தார்.

தொடர்பு இல்லை
இதனிடையே அரசியல் கட்சி விவகாரத்தில் எனக்கும் என் தந்தைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நடிகர் விஜய் திட்டவட்டமாக மறுத்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், எனக்கும் அந்தக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் ரசிகர்கள் யாரும் அந்தக் கட்சியில் சேர வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார்.

பின்வாங்கினார்
பின்னர் அந்தக் கட்சி தொடர்பான முடிவிலிருந்து சந்திரசேகர் பின்வாங்கிக் கொண்டார். இந்நிலையில் விஜய் ரசிகர் மன்ற அதிருப்தி நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார், சந்திரசேகர். அவர் மீண்டும், புதிய அரசியல் கட்சி தொடங்க முடிவு செய்துள்ளார்.

நேரில் சந்திப்பு
அப்போது பேசிய அவர், கிறிஸ்துமஸ் தினத்தன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்ததாகவும் அப்போது விஜய் தன்னை கட்டியணைத்து மோதிரம் அணிவித்ததாகவும் கூறியதாகத் தெரிகிறது. அதன்படி எஸ்.ஏ.சந்திரசேகர் மக்கள் இயக்கம் என புதிய கட்சி ஒன்றைப் பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

எஸ்.ஏ.சி. தலைவர்
கட்சிக்கு 20 மாவட்ட பொறுப்பாளர்களை எஸ்.ஏ.சி நியமித்துள்ளார். இந்தக் கட்சிக்கு அவர் தலைவராக இருப்பார். செயலாளராக விஜய் மக்கள் மன்ற முன்னாள் நிர்வாகி ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியை வரும் பொங்கல் பண்டிகையன்று அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











