எக்ஸ் வீடியோஸ்.... யெஸ், இது நீங்க நினைக்கிற மாதிரி படம்தான்!
"ஆமாம் இது ஆபாசப் படம்தான்..." என்று தைரியமாகக் கூறுகிறார் 'எக்ஸ் வீடியோஸ்' படத்தின் இயக்குநர் சஜோ சுந்தர்.
ஆன்லைன் ஆபாச உலகம் பற்றி இப்படி ஒரு பெயரில் தமிழ், இந்தியில் ஒரு படம் உருவாகிறது.

ஆபாசப் படம்தான்
அதன் இயக்குநர் சஜோ சுந்தர் கூறுகையில், "மக்கள் இதை ஆபாசப் படம் என்றே நினைக்க வேண்டும் அதற்காகவே இப்படி பெயர் வைத்தோம். ஏனெனில் படம் அதை பற்றித்தான் பேசுகிறது. பாலியல் கல்வி இல்லாத நம் நாட்டில் பாலியல் சார்ந்த படம் எடுப்பதில் தவறில்லை.
இந்தப் படத்தின் மூலம் நாங்கள் சொல்ல வருவது, ஒரு ரகசியம் கேமராவில் பதிவு செய்யப்பட்டுவிட்டால் அது ரகசியம் இல்லை. அதை எவ்வளவுதான் மறைத்து வைத்துக் காப்பாற்றினாலும் ஒரு நாள் அது யார் மூலமாவது வெளி உலகத்துக்கு வந்தே தீரும். இதுவே படம் தரும் எச்சரிக்கை.

வலையுலக ஆபத்து
இது சைபர் யுகம், கண்ணுக்குத் தெரியாத பிரம்மாண்ட உலகம் நமக்குத் தெரியாமல் இயங்கி வருகிறது. அது நம் கண்ணுக்குத் தெரியவில்லையே தவிர, நம்மை அது 24 மணி நேரமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் அதன் கண்ணில் நமது அந்தரங்கம் சிக்கிக் கொண்டால் எல்லாமே பகிரங்கம்தான்.
அப்படி ஒரு வலையுலக ஆபத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள படம்தான் எக்ஸ் வீடியோஸ்," என்கிறார்.

சஜோ சுந்தர்
சஜோ சுந்தர் இயக்குநர் ஹரியிடம் உதவி இயக்குநராக இருந்தவர். பின்னர் நடிகர் பிரகாஷ் ராஜ், பொம்மரில்லு பாஸ்கர் ஆகியோரிடம் இணை இயக்குநராக பணிபுரிந்துள்ளார்.
இப்படத்தை கலர் ஷேடோஸ் எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் எஸ்.பிரகாஷ் தயாரித்துள்ளார்.

ஏன் இந்தத் தலைப்பு?
"ஆபாச இணைய தளங்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளையும் அதனால் உண்டாகும் சமூகச் சிக்கலையும் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில்தான் இப்படம் உருவாகியிருக்கிறது,'' என்ற இயக்குநரிடம், 'அதற்காக இப்படியா ஆபாசமாகத் தலைப்பு வைப்பது?' என்று கேட்டோம்.
"இது இளைஞர்களுக்கான படம் அவர்களின் பாலியல் தொடர்பான உளவியல் சிக்கல், எதிர்காலம் பற்றிப் பேசும் படம். குறிப்பாக இளம் பெண்களிடம் விழிப்புணர்ச்சி ஏற்படுத்துவதே படத்தின் நோக்கம்.

புதுமுகங்கள்
படத்தின் தலைப்பைக் கண்டு தவறாகக் கணிப்பவர்கள் படம் பார்த்த பின் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். ஏனெனில் இது இந்த உலகில் ரகசியம் என்று எதுவுமில்லை என எச்சரிக்கும் படமே... கதையின் இயல்பு தன்மைக்காக முற்றிலும் புதுமுகங்களை நடிக்க வைத்துள்ளோம்.
சென்னை,பெங்களூர்,மும்பை போன்ற இடங்களில் ஐம்பது நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. படத்தில் பாடல் காட்சிகளோ சண்டைக் காட்சிகளோ கிடையாது.
தமிழ், இந்தி என இரு மொழிப் படமாக இது உருவாகியுள்ளது," என்றார்.

ஜூலை ரிலீஸ்
இப்படத்துக்கு ஒளிப்பதிவு வின்சென்ட் அமல்ராஜ், இசை மெட்ரோ புகழ் ஜோஹன், படத்தொகுப்பு ஆனந்தலிங்க குமார், கலை இயக்கம் கே.கதிர்.
படம் ஜூலை வெளியீடு.


Click it and Unblock the Notifications











