Dejavu Movie Review: அருள்நிதியின் அடுத்த கிரைம் த்ரில்லர்.. மிரட்டியதா தேஜாவு.. விமர்சனம் இதோ!
நடிகர்கள்: அருள்நிதி, மதுபாலா
இசை: ஜிப்ரான்
இயக்கம்: அரவிந்த் சீனிவாசன்
சென்னை: கிரைம் த்ரில்லர் கதைகளை விரும்பிக் கேட்டு நடித்து வரும் நடிகர் அருள்நிதியின் பிறந்தநாள் இன்று.
பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட்டாக நாளை ஜூலை 22ம் தேதி அவர் நடித்த தேஜாவு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
சமீபத்தில் வெளியான டி பிளாக் திரைப்படம் சொதப்பிய நிலையில், இந்த தேஜாவு படம் எப்படி இருக்கிறது என்கிற விமர்சனத்தை இங்கே பார்ப்போம்..
என்ன கதை
த்ரிஷ்யம் 2 படத்தில் நடக்கப் போவதை எல்லாம் முன்பாகவே கணித்து ஒரு கதையாக எழுதி வெளியிட்டு இருப்பார் மோகன்லால். அதே சம்பவங்களை நிஜத்தில் நிகழ்த்தி கடைசியில் நீதிமன்றத்தில் போலீஸார் நான் எழுதிய புத்தகத்தை படித்து விட்டு தன் மீது பொய் கேஸ் போட்டு விட்டனர் என சொல்லி தப்பிப்பார். அதே போல, இந்த தேஜாவு படத்தில் வலிமை படத்தில் அஜித்துக்கு அண்ணனாகவும், கேஜிஎஃப் படத்தில் அரசியல்வாதி வில்லனாகவும் நடித்து மிரட்டிய அச்சுத குமார் எழுதும் கதையில் நடப்பது அனைத்துமே நிஜத்தில் எப்படி நடக்கிறது என்கிற குழப்பத்தில் விசாரணை அதிகாரியான விக்ரம் குமார் (அருள்நிதி) குழம்பிப் போய் உண்மையை கண்டுபிடிப்பதே இந்த தேஜாவு படத்தின் த்ரில்லிங்கான கதை.
மீண்டும் மதுபாலா
அழகன், ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகை மதுபாலா, அக்னி தேவி, தலைவி உள்ளிட்ட படங்களில் தலைகாட்டிய நிலையில், இந்த படத்தில் டிஜிபி ஆஷா எனும் கதாபாத்திரத்தில் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். டிஜிபி ஆஷாவின் மகளை ஒரு மர்ம கும்பல் கண்டுபிடிக்க, அந்த வழக்கை விசாரிக்க அன் அஃபிஷியல் அதிகாரியாக வருகிறார் அருள்நிதி.
ஒரே தேஜாவுவா இருக்கு
புதிதாக நடைபெறும் விஷயம் ஏற்கனவே நமக்கு நடந்தது போல தோன்றுவது தான் தேஜாவு. டிஜிபி ஆஷாவின் மகளை கடத்திய கும்பல் அந்த பெண்ணை என்ன செய்தனர், எங்கே கொண்டு சென்றனர் போன்ற அனைத்து விஷயங்களையும் எழுத்தாளரான அச்சுத குமார் எப்படி துல்லியமாக எழுதுகிறார் என்கிற குழப்பத்தில் விசாரணையை எப்படி நடத்துவது என்றே தெரியாமல் குழம்பித் தவிக்கும் அருள்நிதி கடைசியில் உண்மையான குற்றவாளி யார்? அந்த கதைக்கும் இந்த கடத்தல் சம்பவத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது தான் செம ட்விஸ்ட்.
பிளஸ்
விமர்சகராக இருந்து இயக்குநராக அறிமுகமாகி உள்ளார் அரவிந்த் சீனிவாசன். யாரிடமும் உதவி இயக்குநராக இல்லாத அவர் கடைசி வரை சஸ்பென்ஸை தக்க வைத்ததே படத்திற்கு பெரிய பிளஸ் தான். அவருக்கு பக்க பலமாக இசையமைப்பாளர் ஜிப்ரானின் பின்னணி இசை பலமாக அமைந்துள்ளது. முத்தையாவின் ஒளிப்பதிவு கிரைம் த்ரில்லருக்கான விஷுவல்களை கொடுத்து திரையில் மிரட்டுகிறது. அருள்நிதி, மதுபாலா மற்றும் அச்சுத குமாரின் நடிப்பு நல்லாவே படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.
மைனஸ்
அருள்நிதி நடிப்பில் கடைசியாக வெளியான டி பிளாக் படத்திற்கு இந்த படம் பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால், இரண்டாம் பாதியில் படத்தை சில இடங்களில் சொதப்பி விட்டார் இயக்குநர். பிரெடிக்டபிளான காட்சிகள் மற்றும் சமீபத்தில் வெளியான மம்மூட்டியின் சிபிஐ 5 தி பிரைன் படத்தின் கிளைமேக்ஸ் போன்றவை குறையாக மாறியுள்ளது. அதை சற்றே சரி செய்து இருந்தால், வேறலெவலில் வந்திருக்கும். கிரைம் த்ரில்லர் விரும்பிகளுக்கு நிச்சயம் இந்த படம் ரொம்பவே பிடிக்கும். தேஜாவு - தேறிவிட்டது!


Click it and Unblock the Notifications











