Movie Review: நாளைக்கு என்ன ஆகும்ன்னு இன்னைக்கு தெரியும்... ஜாங்கோ திரைவிமர்சனம்
நடிகர்கள்
சதிஷ்
மிர்னாலினி ரவி
கருணாகரன்
டைகர் தங்கதுரை
வேலு பிரபாகரன்
தீபா
ரேட்டிங் :3/5
சென்னை : "சாகுற நாள் தெரிஞ்சிட்டா வாழ்ற நாள் நரகமாகிடும்" என்ற சிவாஜிபட வசனத்தை யாரும் மறக்க முடியாது. ஆனால் நடக்கப்போவது எல்லாம் முன்னரே தெரிந்துவிட்டால் வாழ்க்கை எப்படி இருக்கும்? அதுவே திரைப்படமாக வந்து உள்ளது .
இயக்குனர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ் குமார், மிர்னாளினி ரவி, கருணாகரன், ரமேஷ் திலக் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் ஜாங்கோ.
திரில்லர் மற்றும் அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படைப்பு இன்று வெள்ளிக்கிழமை ரீலீஸ் ஆகி உள்ளது . வழக்கமான கதையாக இல்லாமல் வித்யாசமான கதைக்களத்தை விரும்பும் ரசிகர்களுக்கு, இது மிக சிறப்பான விருந்தாக இருக்கும்.
மறக்க முடியாமல்
கடந்தகாலத்திற்கு சென்றுவரும் படங்கள் தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்திருந்தாலும், இந்த திரைப்படம் அதிலிருந்து மாறுபட்ட விறுவிறுப்பான படமாக அமைந்து உள்ளது. வாழ்க்கையில் வேலை தான் முக்கியம் ,உத்தியோகம் ஒரு பெண்ணுக்கு மிக முக்கியம் என்று நினைக்கும் கதாநாயகி மிர்னாலினி சில பல மன கசப்புகளால் குடும்ப வாழ்க்கையை இழக்கிறாள். கதாநாயகனோ மருத்துவ பணியில் மும்முரமாக இருந்தாலும் தனது மனைவி மீது கொண்ட காதலை மறக்க முடியாமல் தவிக்கிறான் .இதற்கு நடுவே
டைம்-லூப் மூலம் இழந்த வாழ்க்கையை அவன் எப்படி மீட்கிறான். மனைவிக்கு எதிரிகளால் ஏற்படும் பிரச்னையை எப்படி கையாளுகிறான் என்பதுதான் ஜாங்கோ படத்தின் மீதி கதை.
அதிரடி சரவெடி
இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளருமான சி.வி. குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்ய, சான் லோகேஷ் எடிட்டிங் செய்துள்ளார். கருணாகரன், டைகர் தங்கதுரை, தீபா வேலுபிரபாகரன் போன்றோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். அறிவியலும், கற்பனையும் கலந்த வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக ஜாங்கோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. ஜாங்கோவில், முதல் 40 நிமிடங்களுக்கு, பார்வையாளர்களாகிய நாமே டைம் லூப்பில் இருப்பது போல் உணர்கிறோம். சாதுவான நடிகர். நல்ல நகைச்சுவை, வலிமிகுந்த காதல், என்று முதல் பாதி இப்படித்தான் செல்கின்றன.
ஒரு நாள் முழுவதும் ரிப்பீட் மோடில்
டைம் லூப் என்ற ஒரு விஷயம் ஏற்படுவதால் ஒரு கதாபாத்திரம்( கதாநாயகன் சதிஷ் ) ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் சிக்கிக் கொள்கிறார் , ஒரு நாள் முழுவதும் ரிப்பீட் மோடில் மீண்டும் மீண்டும் நடந்தவையே நடக்கிறது . ஒவ்வொரு முறையும் அவர் வீட்டில் - காலை அலாரம் அடித்து எழுந்திருக்கும்போது அதே நாளில்,அதே சம்பவங்களுடன் கடந்து செல்கிறார், அவர்களைச் சுற்றியுள்ள அனைவரும் முந்தைய நாள் செய்ததையே செய்கிறார்கள். மேலும் அவர்கள் இதை நிறுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிக்க வேண்டும், இதனால் விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும்.இந்த எல்லா பிரச்சனைகளையும் எப்படி சமாளித்தார் ஹரோ என்பது இரண்டாம் பாதி கதை .
கோவம் ,பயம் ,வேதனை
சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் மிருணாளினி. தீபாவளி சரவெடியாக, எனிமி, எம் ஜி ஆர் மகன் திரைப்படங்களில் நாயகியாக நடித்த பின் ஜாங்கோ படத்தில் மிகவும் போல்டான ஒரு மீடியா பெர்சனாலிட்டி கதாபாத்திரம் . கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்து கொடுத்துள்ளார் . கோவம் ,பயம் ,வேதனை என்று எல்லா உணர்ச்சி பூர்வமான காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார் . கதாநாயகன் சதிஷ் முதல் படம் என்றாலும் ஹான்ட்சம் அண்ட் டிக்னிஃபைடு லுக் மூலம் அசத்தி இருக்கிறார் . சில காட்சிகளில் முதல் படம் என்று சொல்லும் அளவுக்கு அவர் நடிப்பில் தயக்கம் தெரிகிறது.இன்னும் கொஞ்சம் மெனக்கெடல் தேவை படுகிறது.
வில்லத்தனமான விஞ்ஞானி
வேற்றுகிரகவாசிகளின் விண்கலங்கள், செயற்கை இதயங்கள், விஞ்ஞானி செய்யும் வில்லத்தனம் , மோசமான போலீஸ்காரர்கள், சும்மா வந்து போகும் மிலிட்டிரி என்று காட்சிகள் நாம் பார்க்கும் போது பல லாஜிக்கல் கேள்விகள் வர தான் செய்கிறது . வழக்கமான சதித்திட்டம் மற்றும் கதை என்பது தான் இரண்டாம் பாதியில் ஏற்படும் சொதப்பல் . ஒரு கட்டத்தில், ஹரீஷ் பேரடி நடித்த வில்லத்தனமான விஞ்ஞானி கதாபாத்திரம் மீது கொஞ்சம் எரிச்சல் தான் ஏற்படுகிறது ,ஸ்டீபன் ஹாக்கிங்கின் பாதுகாவலர் என்று அழைக்கப்படுகிறார், விண்கல் தாக்கம், நகரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தைப் பற்றியும் அவர் செயற்கை உறுப்புகளை உருவாக்குவதைப் பற்றியும் என்ன தான் பேசினாலும் மனதில் பெரிதாக ஒட்டவில்லை .
Recommended Video
கொஞ்சம் சரி செய்திருந்தால்
"செத்தவங்களே திரும்பி வரும் போது,ஒரு சின்ன புல்லட் வராதா" என்று கருணாகரண் சொல்லும் வசனம் சிரிப்பலையை ஏற்படுத்தும். படத்தில் ஏகப்பட்ட இடங்களில் லிப் சின்க் ஆகாமல் காட்சிகள் நகர்கின்றன. இந்த டப்பிங் குளறுபடிகளை இன்னும் கொஞ்சம் சரி செய்திருந்தால் ரசிகர்கள் மனதில் படம் நல்ல ஒரு இடத்தை பெற்றிருக்கும். அடல்ட் கன்டெண்ட் என்று சொல்லும் அளவுக்கு ஜாங்கோ படத்தில் எந்த காட்சியும் இல்லை என்பது மிகவும் ஆறுதலான விஷயம். குடும்பத்துடன் சென்று கண்டிப்பாக இந்த படத்தை தியேட்டரில் பார்க்கலாம். மொத்தத்தில் ஜாங்கோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கும் .இது புரியாத படம் அல்ல புரிந்துகொள்ளக்கூடிய ஒரு புது முயற்சி தான். ஜிப்ரானின் பின்னணி இசை மிகவும் ரசிக்க வைக்கும் . டைம் லூப் என்ற கான்செப்டை மையமாக வைத்து வரிசையாக இன்னும் நிறைய தமிழ் படங்கள் வரலாம், ஆனால் ஜாங்கோ என்கின்ற இந்தப் படம் என்றுமே தனித்துவமாக பேசப்படும் என்பது நிதர்சனமான உண்மை.


Click it and Unblock the Notifications











