காலங்களில் அவள் வசந்தம் விமர்சனம்: மணிரத்னம் டச்.. ஹாசினி சிண்ட்ரோம்.. இளைஞர்களை கவர்ந்ததா?
நடிகர்கள்: கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி
இசை: ஹரி எஸ். ஆர்
இயக்கம்: ராகவ் மிர்தாத்
சென்னை: இந்த வாரம் புதுமுக நடிகர்கள் நடித்து புதுமுக இயக்குநர் இயக்கிய பழைய பாடல் டைட்டில் கொண்ட காலங்களில் அவள் வசந்தம் படம் வெளியாகி இருக்கிறது.
பிரின்ஸ் படத்திற்கு தியேட்டர்கள் குறைந்த நிலையில், இந்த படத்துக்கு கிட்டத்தட்ட 120 தியேட்டர்கள் கிடைத்துள்ளதே மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில் அறிமுக நடிகர் கெளசிக், அஞ்சலி நாயர், ஹிரோஷினி நடிப்பில் உருவாகி உள்ள படம் டார்கெட் ஆடியன்ஸான இளைஞர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பது குறித்து விரிவாக இங்கே அலசுவோம்..
என்ன கதை
அஞ்சலி நாயர் நாயகன் கெளசிக்கை பார்த்த மாத்திரத்திலேயே அவர் மீது காதல் வயப்பட்டு திருமணமும் செய்து கொள்கிறார். ஆனால், ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் ஆசையில் அலைந்து வரும் நாயகனுக்கு ஹிரோஷினியுடன் காதல் ஏற்படுகிறது. காதலிக்காக மனைவியை பிரிந்தாரா? அல்லது மனைவியின் காதலை புரிந்து கொண்டு சேர்ந்து வாழ்ந்தாரா? என்பது தான் இந்த படத்தின் கதை.
மணிரத்னம் டச்
அறிமுக இயக்குநர் ராகவ் மிர்தாத் இளைஞர்களை கவரும் விதமாக படத்தை நல்லா கலர்ஃபுல் ஆகவும் இளமை ததும்பும் படியும் இயக்கி உள்ளார். இயக்குநர் மணிரத்னத்தின் தீவிர ரசிகர் தான் இயக்குநர் என்பது தெளிவாகவே தெரிகிறது. படத்தில் ஏகப்பட்ட இடங்களில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான மெளன ராகம் படத்தின் பாதிப்பு அதிகளவில் உள்ளது. ஒரு இடத்தில் மெளனராகம் படத்தில் கார்த்தி பேசிய வசனத்தையே அழகாக வைத்திருப்பது இயக்குநரின் திறமை என்று தான் சொல்ல வேண்டும்.
அறிமுக நாயகன் அசத்தல்
ஹீரோவுக்கு தேவையான அத்தனை தகுதிகளையும் வளர்த்துக் கொண்டு அறிமுக நாயகன் கெளசிக் இந்த படத்தில் சினிமாவில் ரொம்பவே ஆர்வமுள்ள ஷியாம் எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை சினிமா படங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பது எல்லாம் ரொம்பவே புதுசாக உள்ளது. காதலனாகவும் கன்ஃபியூஸ் கணவனாகவும் நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கிறார். ஹீரோவை பார்த்ததுமே அவரது கேரக்டரில் மயங்கி அஞ்சலி நாயர் திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு இவரது நடிப்பு படத்தில் ரொம்பவே இயல்பாகவும் எதார்த்தமாகவும் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. ஹிரோஷினியின் ஹாசினி சிண்ட்ரோம் படத்தில் பெரிதாக ஒட்டவில்லை என்பதை படத்திலேயே வசனமாக வைத்திருப்பது சிறப்பு.
காதலியா? மனைவியா?
இந்த மாதிரி படங்கள் இதற்கு முன் பல முறை வந்திருந்தாலும் இதுதான் ஃபர்ஸ்ட் என சொல்லப்படும் அளவுக்கு தெரிந்த கதையில் எங்கெல்லாம் திரைக்கதையில் சுவாரஸ்யத்தையும் காதலையும் கொட்ட முடியுமோ இயக்குநர் கொட்டித் தீர்த்து இருக்கிறார். நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரங்களுக்கு நேர்மையாக நடித்து கொடுத்துள்ளனர். அறிமுக நாயகி ஹிரோஷினி காதல் செய்யும் இடங்கள் எல்லாம் அருமை.
பிளஸ்
குறைவான பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு நல்ல ரிச் லுக்கை கொடுத்துள்ள கோபி ஜெகதீஸ்வரனின் ஒளிப்பதிவு தான் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. ஹரியின் இசையும் அந்த பப்பாளி பாடலும் ரசிகர்களை இளமை ததும்ப வைத்துள்ளது. புது டீம் என்பதே தெரியாத அளவுக்கு இளைஞர்களையும் குழப்பத்தில் இருக்கும் காதலர்களையும் இந்த படம் நிச்சயம் மகிழ்விக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
மைனஸ்
முதல் பாதி நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், தேவையில்லாமல் இரண்டாம் பாதியில் வரும் அந்த பெங்களூரு போர்ஷனும் கன்னடர்கள், தமிழர்கள் பிரச்சனையும் இந்த படத்துக்கு எந்த இடத்திலும் கைகொடுக்காத நிலையில், இயக்குநர் அதை தவிர்த்து இருக்கலாம். சிம்பிளாக சொல்ல வேண்டிய கதையை ரொம்பவே சுத்தி வளைச்சு சொல்லி இருப்பது சற்றே நெருடலாக உள்ளது. மற்றபடி டார்கெட் ஆடியன்ஸான இளைஞர்களை இந்த படம் நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலங்களில் அவள் வசந்தம் - காதல் நினைவுகள்!


Click it and Unblock the Notifications











