Krishnam Review: அப்பா - மகன் பாசத்தை பற்றி பேசும் 'கிரிஷ்ணம்'! விமர்சனம்
ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படமாகவே இருந்தாலும் வெகுஜன மக்கள் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளது 'கிரிஷ்ணம்'.
Recommended Video

சென்னை: மனித சக்திக்கு அப்பாற்பட்டு நிகழும் ஒரு அற்புதத்தை பற்றிய படம் தான் கிரிஷ்ணம்.
ஒரு நண்பனை போன்று அனைத்து விஷயங்களை பகிர்ந்துகொள்ளும் தந்தை சாய்குமார், கண்டிப்புடன் பாசத்தை பொழியும் தாய் சாந்தி கிருஷ்ணா என சந்தோஷமான பணக்காரக் குடும்பத்து பையன் தான் நாயகன் அக்ஷய். ஆனால் எந்த பந்தாவும் இல்லாமல் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் நண்பர்களுடன் சகஜமாக பழகும் நல்ல குணம் படைத்தவராகவே இருக்கிறார். குறிப்பாக கஷ்டம் என யார் வந்து நின்றாலும் உதவி செய்யக்கூடியவர்.

அதே கல்லூரியில் படிக்கும் ஐஸ்வர்யா உல்லாஸ் மீது அக்ஷய்க்கு காதல் மலர்கிறது. முதலில் மறுப்பு தெரிவிக்கும் ஐஸ்வர்யா, ஒருகட்டத்தில் அக்ஷய் மீது காதல் கொள்கிறார். வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கும் வேலையில், ஒரு அரிய வகை இதய நோயால் பாதிக்கப்படுகிறார் அக்ஷய். அவர் உயிர் பிழைக்க ஒரு சதவீதம் மட்டுமே சாத்தியம் என மருத்துவர்கள் கூற, கிருஷ்ண பக்தரான சாய்குமார் கடவுளின் உதவியை நாடுகிறார். அக்ஷய் எப்படி உயிர் பிழைக்கிறார்? அந்த அற்புதம் என்ன என்பது தான் படம்.
தனது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களின் அடிப்படையில் இந்த கதையை எழுதி, படத்தை தயாரித்திருக்கிறார் பி.என்.பலராமன். படத்தின் ஹீரோவாக அவரது மகனே நடித்துள்ளார். இவர் தான் அந்த அரிய வகை நோயில் இருந்து உயிர் பிழைத்து வந்தவர். தன்னுடையே வாழ்க்கை கதை தான் என்பதால் மிகவும் எதார்த்தமாக நடித்துள்ளார் அக்ஷய். புதுமுக நடிகர் போல் இல்லாமல், நன்றாகவே நடித்துள்ளார்.

உண்மை கதை தான் என்றாலும், பாசம், சென்டிமெண்ட், காதல், நட்பு என அனைத்தையும் சேர்த்து திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் தினேஷ் பாபு. படம் தொடக்கத்தில் இருந்து க்ளைமாக்ஸ் வரை எதார்த்தத்தை மீறாமல் சீராகவும், சிறப்பாகவும் எடுத்திருக்கிறார். பக்தி படம் என்பதற்காக, சதா சாமி புராணம் பாடாமல், வெகுஜன மக்கள் ரசிக்கக் கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார் இயக்குனர். க்ளைமாக்ஸ் காட்சி சிலிர்ப்பை ஏற்படுத்துகிறது.

பக்தி தான் பிரதானம் என்றாலும், படத்தில் காட்டப்பட்டுள்ள அப்பா - மகன் உறவு அனைவராலும் ரசிக்கும் படியாக உள்ளது. அதேபோல், மிகையில்லாமல் காட்டப்படும் ஆன்மீகம் சம்மந்தப்பட்ட காட்சிகளும், திகட்டாத இனிப்பாக இருக்கிறது. அதேபோல், தமிழ் வசனங்களும், டப்பிங்கும், இது ஒரு மலையாள டப்பிங் படம் என்ற உணர்வை ஏற்படுத்தாத வகையில் இருக்கிறது.
நடிகர் சாய்குமார் ஒரு எக்சாம்பிள் அப்பாவாக வாழ்ந்திருக்கிறார். நம்முடைய அப்பாவும் இப்படி தான் இருக்க வேண்டும் என பசங்க நினைக்கும் அளவிற்கு எதார்த்தமாக நடித்துள்ளார். கண்டிப்பான தாயாக வரும் சாந்தி கிருஷ்ணா, நம் அம்மாக்களை நினைவூட்டுகிறார்.

ஹீரோயின் ஐஸ்வர்யா உல்லாஸ் அழகு பொம்மையாக ஜொலிக்கிறார். சமீபத்திய ஹீரோயின்களில் இவ்வளவு நீளமான முடி யாருக்கும் இல்லை. அக்ஷ்ய்யின் நண்பர்களாக நடித்துள்ள பசங்களும், பொண்ணுங்களும், சிறப்பாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் மருத்துவர்களாக நடித்துள்ளவர்களும் மிக எதார்த்தமாக நடித்துள்ளனர்.

ஹரிபிரசாத் இசையில் பாடல்கள் நன்றாக இருக்கின்றன. திலீப் சிங்கின் பின்னணி இசையும் சிறப்பாக இருக்கிறது. தினேஷ் பாபுவின் ஒளிப்பதிவு படத்திற்கு ஓகே. ஆனால் வழக்கமாக மலையாள படங்களில் இருக்கும், இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகள் மிஸ்ஸிங். மிகவும் நிறுத்தி நிதானமாக எடிட் செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் அபிலாஷ் பாலகிருஷ்ணன்.
கதையில் கவனம் செலுத்திய இயக்குனர் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். இன்னும் சிறப்பான திரைக்கதை அமைத்திருந்தால், படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஹீரோயின் பிராமண பெண்ணாக இருந்தாலும், அவரது மதத்தை தூக்கி பிடிக்கும் வகையிலான வசனங்கள் தேவையில்லாத திணிப்பு.

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படமாகவே இருந்தாலும், அதை மிகப்படுத்தாமல் வெகுஜன மக்கள் ரசிக்கும் படியாக உருவாக்கப்பட்டுள்ளதால், 'கிரிஷ்ணம்' கவனம் ஈர்க்கிறது.


Click it and Unblock the Notifications











