Movie review : களத்தில் சந்திப்போம் -களத்தில் கண்டது வெற்றியா!? தோல்வியா!?
களத்தில் சந்திப்போம்- திரை விமர்சனம்
சென்னை: ஜீவா, அருள்நிதி, பிரியா பவானி சங்கர், மஞ்சிமா மோகன் நடிப்பில் இந்த வாரம் திரைக்கு வந்த படம் களத்தில் சந்திப்போம்.
இந்த படத்தை N. ராஜசேகர் இயக்கியுள்ளார், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சூப்பர் குட் பிலிம்ஸ்-ன் 90வது படைப்பாக களத்தில் சந்திப்போம் திரைப்படம் அமைந்து சிறப்பித்துள்ளது.
கபடி கதைக்களம்
கதையின் இரட்டை நாயகர்களான ஜீவா - அருள்நிதி கபடி போட்டியில் எதிர்ரெதிர் அணியில் களத்தில் மோதுபவர்கள். களத்திற்கு வெளியில் இணைப்பிரியா நண்பர்கள். இவர்களுடைய வாழ்க்கை, இவர்களுக்கு இடையில் காதல், திருமணம் போன்ற விஷயங்களால் ஏற்படும் குழப்பங்கள் அதில் இருந்து மீண்டு வருவதே இந்த படத்தின் கதை. இப்படி பல கதைகள் சினிமாவில் பார்த்தாச்சே என்று சொன்னாலும் கூட திரைக்கதையில் சுவாரஸ்யம் கூட்டுகிறார் இயக்குனர் .
ஈர்க்கும் கதாபாத்திரம்
ஜீவா எப்போதுமே மகிழ்விக்கும் வகையில் நடிக்க கூடியவர், அது போல அருள்நிதியும் எதார்த்தமாக தன் பங்கை சிறப்பாக அளிக்க கூடியவர். இருவரின் நடிப்பும் இந்த படத்தில் குறை கூறும் விதத்தில் அமையாமல் அவர்களின் கதாபாத்திரம் ஈர்க்கும் வகையில் சரியாக அமைந்துள்ளது. சண்டை, சேட்டை, காமெடி, காதல் என இருவருக்கும் கதாபாத்திரம் பொருந்தியிருந்தது.
சரியான பங்களிப்பு
ஜீவாவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகனும், அருள்நிதிக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கரும் தன் பங்கை சிறப்பாக அளித்துள்ளனர். கதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு மஞ்சிமா காரணமாக அமைகிறார். சொல்லிக்கொள்ளும் விதத்தில் கதாபாத்திரம் அமைந்துள்ளது. பிரியா பவானி சங்கர் சில இடங்களில் வந்தாலும் மனதில் தங்குகிறார். கதாபாத்திரமும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
கச்சிதமான நடிப்பு
குணச்சித்திர நடிகர்களாக ராதா ரவி, ஆடுகளம் நரேன், இளவரசு, ரேணுகா என மூத்த நடிகர்கள் அனைவருமே கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். ராதாரவியின் நடிப்பு படத்திற்கு கூடுதல் சிறப்பு. நகைச்சுவை நடிகர்களாக ரோபோ சங்கர், பால சரவணன் சிறப்புற மகிழ்வித்தனர்.
யுவனின் இசை
படத்தின் நாயகர்கள் இருவருக்குமே சரி சமமான முக்கியத்துவம் கொடுத்து காட்சியமைப்புகளாலும், திரைக்கதையினாலும் பாராட்ட வைக்கிறார் இயக்குனர் ராஜசேகர். கபடி போட்டியின் போது தினேஷ் பொன்ராஜின் படத்தொகுப்பு பாராட்டிற்குரியது. யுவனின் இசையில் பாடல்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் பின்னணி இசை சோபித்துள்ளது.
குடும்ப ரசிகர்களுக்காக
சில மாதங்களுக்கு முன்னரே வெளிவர வேண்டிய படம் கொரோனா தொற்று காரணத்தினால் இந்த தை மாதம் வெளியானது. படத்தில் லாஜிக் கேள்விகள், குறைகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது நல்ல பொழுதுபோக்கான படமாக அமைந்துள்ளது. குடும்ப ரசிகர்களை கவர்ந்து களத்தில் வென்றுள்ளது.
அசோக்
படத்தில் மிகவும் பாராட்ட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் அது மனதை ஈர்க்கும் வசனங்கள் தான் . காட்சிகள் மூலம் சொல்லுவதை விட , சரியான நேரத்தில் நல்ல வசனங்கள் மூலம் மிகவும் அழகாக பதிய வைக்கிறார் இயக்குனர். இந்த படத்திற்கு பக்க பலமாக இருக்கும் வசனகர்த்தாவாக அசோக் மிகவும் மெனக்கெட்டு காமெடி மற்றும் எமோஷனல் வசனங்கள் மூலம் மிகவும் கவனம் ஈர்க்குறார் . களத்தில் சந்திப்போம் வசூல் ரீதியாகவும் தயாரிப்பாளர் சௌத்ரிக்கு பல வெற்றிகளை மீண்டும் சந்திக்க உத்வேகம் கொடுக்கும் என்று மிகவும் நம்ப படுகிறது .


Click it and Unblock the Notifications











