பாகன் - திரைப்பட விமர்சனம்

By Shankar

Rating:
3.0/5
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், ஜனனி, கோவை சரளா, பரோட்டா சூரி, பாண்டி
இசை: ஜேம்ஸ் வசந்தன்
ஒளிப்பதிவு: லட்சுமணன்
பிஆர்ஓ: ஜான்
தயாரிப்பு: விபி புரொடக்ஷன்ஸ்
எழுத்து - இயக்கம்: அஸ்லம்

பொதுவாக ஒரு திரைப்படத்தில் ஹீரோ தன் கதையைச் சொல்வார். அல்லது அவ்வப்போது இயக்குநர் குரல் எட்டிப்பார்க்கும். ஆனால் பாகனில் ஒரு சைக்கிள் தன் வரலாறு கூறுகிறது...!

கேட்கவே சுவாரஸ்யமாக இருக்குல்ல... படம் முழுக்க அந்த சுவாரஸ்யத்தைக் காப்பாற்றியிருக்கிறார் புது இயக்குநர் அஸ்லம்!

மொபெட்கள், பைக்குகள் என்று காலங்கள் மாறினாலும், சைக்கிள் பயணங்கள் தனி சுகமானவை.

சுப்பிரமணிக்கு (ஸ்ரீகாந்த்) சைக்கிள் என்றால் அப்படி ஒரு பிரியம். நினைவு தெரிந்த நாளிலிருந்து தன் குடும்பத்தில் ஒரு அங்கமாக அவன் பார்க்கும் அந்த சைக்கிளை தந்தை விற்றுவிட, துடித்துப் போகிறான். நட்ட நடு ராத்திரியில் அந்த சைக்கிளை வாங்கியவரின் வீட்டுக்குப் போய் அதை ஒருமுறை தொட்டுப் பார்த்துவிட்டு திரும்புகிறான். அதைப் பார்த்துவிட்டு, மீண்டும் சைக்கிளை சுப்பிரமணியிடமே விட்டுவிட்டுச் செல்கிறார் வாங்கியவர்.

அன்றுமுதல், அந்த சைக்கிள்தான் சுப்பிரமணியின் முதல் நண்பன், உறவு... எல்லாமே. வாழ்க்கையில் எப்படியாவது சீக்கிரம் பணக்காரனாகிவிட வேண்டும் சுப்பிரமணியின் பேராசை. அதற்காக நண்பர்களுடன் சேர்ந்து அவன் தொடங்காத பிஸினஸ் இல்லை. போடாத ஐடியா இல்லை. அவன் நேரம், தக்காளி பிஸினஸ் ஆரம்பித்தால் லோடு லாரி கவிழ்ந்து போகிறது... கோழிப் பண்ணை வைத்தால், கோழிகளுக்கு சீக்கு வந்து பண்ணைக்கு சீல் வைக்கும் நிலை.

கடைசியில் ஒரு மாஸ்டர் பிளான். பொள்ளாச்சி பக்கத்திலேயே பெரிய பணக்கார வீட்டுப் பெண்ணை உஷார் செய்து, பணக்கார மாப்பிள்ளையாகி செட்டிலாவது!

அந்த பணக்கார வீட்டுப் பெண் மகாலட்சுமி (ஜனனி). அவன் திட்டப்படியே எல்லாம் ஒர்க் அவுட் ஆகிறது. ஆனால் காதல் விவகாரம் வீட்டுக்குத் தெரிந்து, அவள் சுப்பிரமணி வீட்டுக்கு கட்டிய தாவணியோடு வந்து நிற்க, 'அய்யய்யே... நீ மட்டும் எதுக்கு வந்தே... உன் சொத்து எங்கே.. அதுக்காகத்தானே உன்னை காதலித்தேன்,' என சுப்பிரமணி தன் சுயரூபத்தைக் காட்டுகிறான். காதல் டமாலாகிறது.

பெண்ணைத் தேடி வரும் பணக்கார தந்தையும் அவர் அடியாட்களும் சுப்பிரமணியைத் துரத்த, அவன் தன் சைக்கிளிலேயே திருப்பூருக்கு தப்பிச் செல்கிறான். மகாலட்சுமி டைரி யதேச்சையாகக் கையில் சிக்கும்போதுதான், அவள் சின்ன வயதிலிருந்தே சுப்பிரமணியை காதலிப்பது தெரிய வருகிறது.

தவறை உணர்ந்து, உழைத்து முன்னேற பல வேலைகளைச் செய்கிறான் சுப்பிரமணி. அதிலெல்லாம் கூடவே பயணிக்கிறது அவன் சைக்கிளும். தன் முயற்சிகளில் அவன் ஜெயித்தானா... அவனும் மகாலட்சுமியும் சேர அந்த சைக்கிள் எப்படி உதவியது.. போன்றவற்றை தியேட்டரில் பார்த்துக் கொள்ளுங்கள்.

வாகன வசதிகள் எவ்வளவோ வந்துவிட்ட இந்தக் காலத்தில், சைக்கிளைப் பற்றி இத்தனை சிலாகிப்பதில் லாஜிக் இல்லையே என சிலர் நினைக்கக் கூடும். ஆனால் சைக்கிள்கள் கோலோச்சிய எண்பதுகளைப் பார்த்தவர்களுக்கு இந்த பிணைப்பின் அர்த்தம் புரியும்.

படத்தின் ப்ளஸ்கள்.. கொஞ்சம் நீளம் என்றாலும் சீராகப் பயணிக்கும் திரைக்கதை, ஸ்ரீகாந்தின் இயல்பான நடிப்பு, படம் முழுக்க வரும் பரோட்டா சூரி, பாண்டியின் திணிக்கப்படாத நகைச்சுவை. கோவை சரளாவின் தேர்ந்த நடிப்பையும் விட்டுவிட முடியாது.

ஸ்ரீகாந்த்துக்குப் பொருத்தமான வேடம். உணர்ந்து நடித்திருக்கிறார். நண்பர்களை தன் பேச்சில் வீழ்த்தும் லாவகம், ஜனனியிடம் உண்மைக் காதலைச் சொல்லி உருகுவது, திருப்பூரில் கிடைத்த வேலைகளைச் செய்யும் பக்குவம்... இப்படி கிடைத்த இடங்களிலெல்லாம் ஸ்கோர் செய்திருக்கிறார்.

காதலியாக வரும் ஜனனி ஓகே.

வெங்கடேஷுக்கு பெரிய பில்ட் அப் கொடுத்து பொசுக்கென்று விட்டுவிடுகிறார்கள்.

படம் முழுக்க தக்காளி பாளையம், பொள்ளாச்சி, திருப்பூர் என்று நேட்டிவிட்டியோடு பயணிப்பது பார்க்க இதமாக உள்ளது. கேமராமேன் லட்சுமணன் பாராட்டுக்குரியவர். வழக்கம்போல சிச்சுவேஷனுக்கு ஏற்றமாதிரி இளையராஜா, டைட்டானிக் பாடல்களையெல்லாம் ஜெராக்ஸ் எடுத்திருக்கிறார் ஜேம்ஸ் வசந்தன்!

முதல்படம் என்ற தடுமாற்றம் ஏதுமில்லாமல், ஒரு அனுபவத்தை இயல்பான நடையில் சொன்ன விதத்தில் ஜெயித்திருக்கிறார் புதியவர் அஸ்லம்!

-எஸ் ஷங்கர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X