DSP Review: வாரியர் படத்தை மறுபடி எடுத்து வச்சிருக்காங்களே.. விஜய்சேதுபதியின் டிஎஸ்பி விமர்சனம்!
நடிகர்கள்: விஜய்சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ், ஷிவானி
இசை: டி. இமான்
இயக்கம்: பொன்ராம்
சென்னை: வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படத்தை இயக்கிய பொன்ராம் இயக்கத்தில் விஜய்சேதுபதி, அனுக்ரீத்தி வாஸ், பிரபாகர் மற்றும் ஷிவானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள டிஎஸ்பி திரைப்படம் இன்று வெளியானது.
சிவகார்த்திகேயனின் சீமராஜா படமே சொதப்பிய நிலையில், பொன்ராம் கூட்டணியில் இருந்து நைசாக சிவகார்த்திகேயன் நழுவிக் கொண்டார்.
சசிகுமாரை வைத்து எம்ஜிஆர் மகன் படம் எடுத்தும் எடுபடாத நிலையில், விஜய்சேதுபதியின் டிஎஸ்பி படம் எப்படி இருக்கு என விரிவாக இங்கே அலசுவோம்..
டிஎஸ்பி கதை
லிங்குசாமி இயக்கத்தில் வெளியான வாரியர் படத்தில் டாக்டர் ஹீரோ எப்படி ஏரியாவையே ஆட்டிப் படைக்கும் வில்லனை எதிர்க்க போலீஸ் அதிகாரியாக திடீரென மாறுகிறாரோ கிட்டத்தட்ட முட்டை ரவியை அடக்க சாதாரண வாஸ்கோடகாமா டிஎஸ்பி வாஸ்கோடகாமாவாக மாறுவது தான் டிஎஸ்பி படத்தின் அரைத்த மாவை அரைப்போமா.. துவைச்ச துணியை துவைப்போமா என்கிற கதை.
வீணடித்த பொன்ராம்
விஜய்சேதுபதி எனும் அருமையான நடிகர் வில்லனாக படங்களில் எப்படி மிரட்டி வருகிறார். இந்த ஆண்டு வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் கூட ரொமான்டிக் நாயகனாக நயன்தாரா, சமந்தாவை காதலித்து நடித்திருப்பார். ஆனால், இந்த படத்தில் பாவம் அவரது ஒட்டுமொத்த நடிப்பையும் இயக்குநர் பொன்ராம் வீணடித்து விட்டதாகவே தெரிகிறது.
உலக அழகி நான் தான்
மிஸ் இந்தியா, மிஸ் சென்னை பட்டங்களை வென்ற அனுக்ரீத்தி வாஸ் இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஹீரோயினாக நடித்துள்ளார். டப்பிங் பிரச்சனை இருந்தால் கூட பரவாயில்லை, நடிப்பிலேயே நிறைய பிரச்சனை இருப்பதால் ரொம்பவே அவரது கதாபாத்திரம் செயற்கைத் தனமாக தெரிகிறது. எங்கேயும் எடுபடவில்லை.
மருந்துக்கு கூட சிரிப்பே வரல
விஜய்சேதுபதி திடீர் போலீஸ் அதிகாரியான பின்னர் அவரது போலீஸ் ஸ்டேஷன் என காட்டும் இடத்தில் காமெடி காட்சிகள் வொர்க்கவுட் ஆக வேண்டும் என ஏகப்பட்ட காமெடி நடிகர்களை போட்டிருந்தாலும், மருந்துக்கு கூட சிரிப்பே வராத படு மொக்கையான காமெடி வசனங்களை வைத்திருக்கிறார் இயக்குநர் பொன்ராம். இவர் படத்துக்கா அப்போ எல்லாம் அப்படி விழுந்து சிரித்தோம் என ரசிகர்கள் தியேட்டரில் அடிக்கடி நெளிவதை பார்க்க முடிகிறது.
முட்டை ரவி
பாகுபலி படத்தில் நடித்த பிரபாகர் என்பவர் இந்த படத்தில் முட்டை ரவி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வழக்கமான அதே டெம்பிளேட் வில்லன் கதாபாத்திரம் தான். ஆனால், கொடுத்த போர்ஷனை சரியாக இந்த படத்தில் சீரியஸாக எடுத்துக் கொண்டு நடித்த ஒரே ஆள் பிரபாகர் மட்டும் தான் என்றே சொல்லலாம். வில்லன் ஸ்ட்ராங்கான மட்டும் போதும் என யாரோ இயக்குநருக்கு தப்பா சொல்லிக் கொடுத்துட்டாங்க போல.. திரைக்கதையும் வேண்டும் தெய்வமே என மீம் ட்ரோல்கள் பறக்கின்றன.
பிளஸ்
விஜய்சேதுபதி முடிந்த வரை படத்தை தாங்கிப் பிடிக்க முயற்சி செய்கிறார். அவர் வரும் காட்சிகளில் டி. இமான் போட்டுள்ள ஸ்பெஷல் பிஜிஎம் அருமை. கேமரா ஒர்க் திண்டுக்கல்லை ரொம்பவே அழகாக காட்டி இருக்கிறது. சில இடங்களில் சில காமெடிகள் லேசாக வொர்க்கவுட் ஆகி உள்ளன.
மைனஸ்
நாயகி அனுக்ரீத்தி வாஸின் நடிப்பு மற்றும் இயக்குநர் பொன்ராமின் பலமில்லாத திரைக்கதை படத்திற்கு பெரும் பின்னடவை ஏற்படுத்தி விட்டது. இமான் இசையில் பிஜிஎம் நல்லா இருந்த அளவுக்கு இந்த படத்தில் நல்லா இரும்மா பாடலை தவிர மற்ற பாடல்கள் ஏதும் பெரிதாக கைகொடுக்கவில்லை. விஜய்சேதுபதியின் தீவிர ரசிகராக இருந்தால் தாராளமாக படத்தை ஒரு முறை பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications











