இலங்கை அரசை விமர்சிக்கக் கூடாதா..? - குமுறும் லீனா மணிமேகலை

துயரத்தில் தவிக்கும் இலங்கை தமிழர், இந்திய தமிழ் மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை, இந்திய, தமிழக அரசுகளின் நிலைப்பாட்டை விமர்சிப்பதால் செங்கடல் படத்துக்கு தடை விதித்துள்ளது சென்னை தணிக்கைக் குழு. இப்போது படத்தை மறு தணிக்கைக்கு அனுப்பும் முடிவில் உள்ளார் லீனா.
இந்தத் தடை குறித்து 'தட்ஸ்தமிழு'க்கு அவர் அளித்த பேட்டி:
"தணிக்கைக் குழு என்ற ஒன்றே தேவையா என்ற கேள்வி பல காலம் இருந்துவருகிறது. அந்தக் கேள்வியில் உள்ள நியாயத்தைப் புரிய வைத்துள்ளது 'செங்கடலு'க்கு தணிக்கைக் குழு விதித்துள்ள தடை. 1885-ல் ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு எப்படி 2011-லிருக்கும் படைப்பெல்லையைக் கட்டுப்படுத்த அல்லது தணிக்கை செய்ய முடியும் என்று தெரியவில்லை.
எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?
வெளிநாடுகளில் தணிக்கைக் குழு என்ற ஒன்றே இல்லை. இங்கே படங்களுக்கு தணிக்கை என்கிறார்கள்... ஆனால் தொலைக்காட்சிகளில் பேஷன் டிவியில் நிர்வாணத்தை அனுமதிக்கிறார்கள், கடுமையான - மோசமான விமர்சனங்களை அனுமதிக்கிறார்கள். இது எந்த வகைக் கட்டுப்பாடு... அதுவும் சினிமாவுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு?
இன்னொன்று பாருங்கள்... இங்கு பட விழாக்களில் பங்கேற்கும் வெளிநாட்டுப் படங்களுக்கு தணிக்கை இல்லை. ஆனால் இந்தியப் படம் என்றால் தணிக்கை உண்டு. எதற்கு இந்த இரட்டை நிலைப்பாடு?
அரசை விமர்சிக்கக் கூடாதாம்... இந்த நாட்டில் அரசை விமர்சிக்காமலா இருக்கிறார்கள்? அரசியல்வாதிகள், பத்திரிகைகளை எல்லாரும்தானே விமர்சிக்கிறார்கள்... அந்த விமர்சனத்தை ஒரு படைப்பாளி முன் வைத்தால் தவறா.. படைப்பாளிக்கு அந்த சுதந்திரம் கிடையாதா?
நான் பொத்தாம் பொதுவாக ஆதாரமின்றி விமர்சிக்கவில்லை. ஈழ யுத்தத்தின் இறுதி தருணங்கள்... அந்தக் கரையில் இலங்கை யுத்தம் நடக்கிறது... இந்தக் கரையில் 'அரசியல்' நடக்கிறது... இரண்டுக்கும் நடுவில் மாட்டிக் கொண்டு சிக்கிச் சீரழிந்த தமிழரின் வாழ்க்கையை படமாக்கியிருக்கிறோம். அதில் எள்ளளவும் கற்பனை இல்லை. நடந்த உண்மைகளை மட்டுமே எந்த சினிமா பூச்சுமின்றி திரைப்படமாக்கியுள்ளேன். இதை அனுமதிக்க மறுப்பது உண்மையிலேயே ஜனநாயகப் படுகொலைதான். ஒரு படைப்பாளியின் கருத்துச் சுதந்திரத்தை பறிப்பதுதான். ஆட்சியாளர்களின் விக்டோரியா அடிமை மனோபாவத்தின் எதிரொலி இது.
அரசை விமர்சிக்கும் உரிமை அதன் மக்களுக்கு இருக்கிறது. அதுதானே ஜனநாயகம். அதுவும் இந்தப் படம் மக்களுக்கானது. மக்கள் பிரச்சினையைப் பேசுவது. அதில் அரசுகள் செய்த தவறை ஆதாரத்துடன் சுட்டிக் காட்டியுள்ளோம். இதிலிருந்து நான் பின்வாங்க முடியாது.
தணிக்கைக் குழுவினர் இலங்கை அரசை விமர்சிக்கவே கூடாது என்கிறார்கள். இலங்கைத் தமிழரும், இந்திய தமிழ் மீனவர்களும் இன்று படும் துன்பங்களுக்கு யார் காரணம்... இலங்கை அரசை விட்டுவிட்டு யாரை காரணம் என்று காட்ட முடியும்? இந்தக் கொடுமைகளுக்குத் துணை நின்றவர்களைக் கொண்டாட வேண்டுமா?
விடுதலைப் புலிகள் பற்றி விமர்சனங்கள் இந்தப் படத்தில் உள்ளதா...?
இந்தப் படம், யுத்தம் நடந்த அந்த காலகட்டத்தில் மக்கள் பட்ட வேதனைகள், அதன் பாதிப்புகளைச் சொல்லும் படம். அன்றைக்கு என்னென்ன நிகழ்வுகள் அரங்கேறினவோ அவற்றை அப்படியே பதிவு செய்துள்ளோம். 100 சதவீதம் நடந்தவற்றை மட்டுமே பதிவு செய்திருக்கிறேன். படம் பார்க்கும் முன்பே, இது புலிகளுக்கு எதிரான படம் என்ற தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம். இனவழிப்புக்கு துணை நின்றவர்களை விமர்சித்துள்ளோம். மக்கள் படும் துன்பங்ளை படம் பிடித்துள்ளோம்... அவ்வளவுதான்.
தமிழக அரசியல்வாதிகளின் பங்கு குறித்த விமர்சனமும் உண்டா....?
நிச்சயமாக. இதில் அவர்களுக்கும் பங்கில்லாமலா இருக்கிறது. படம் பார்த்துவிட்டு அதிலுள்ள நியாயங்களைச் சொல்லுங்கள்", என்றார் லீனா.
விரைவில் டெல்லி நடுவர் தீர்ப்பாயத்தில் செங்கடலுக்கு அனுமதி வாங்கும் முயற்சியில் உள்ள லீனா, இன்று படத்தை பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டுக் காட்டுகிறார்.


Click it and Unblock the Notifications











