குழந்தை யாருக்கு?: வனிதா, ஆகாஷ் மோதல்-பரஸ்பரம் புகார்

இது முழுக்க முழுக்க தனது மனைவி போட்ட திட்டமிட்ட நாடகம் என்று ஆகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.
நடிகர் விஜயக்குமாரின் மகள் வனிதா விஜயக்குமார். இவர் மாணிக்கம் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். அதன் பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகள் சரிவர அமையவில்லை. இடையில் சன் டிவியில் சமையல் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார்.
இவரது கணவர் ஆகாஷ். இவரும் ஒரு நடிகர். டிவி தொடர்களில் நடித்து வந்த ஆகாஷ், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் காதலித்து மணம் புரிந்தனர். அதன் பின்னர் தொடர்ந்து ஆகாஷ் நடித்து வந்தார். இவர்களுக்கு ஜோவில்கா, ஹரி என இரு குழந்தைகள் உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர் விவாகரத்து பெற்றனர். தற்போது இருவரும் பிரிந்தே வாழ்ந்து வருகின்றனர். ஆகாஷுடன் அவரது மகனும், வனிதாவுடன் மகளும் உள்ளனர்.
இந் நிலையில், நேற்று முன்தினம் திடீரென ஆகாஷுக்கும், வனிதாவுக்கும் மோதல் ஏற்பட்டது. இருவரும் தங்களது பிள்ளைகளைப் பார்க்க தனித் தனியாக பள்ளிக்குச் சென்றுள்ளனர்.
அங்கு ஹரியின் படிப்பு தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கே.கே.நகர் போலீஸில், ஆகாஷ் தன்னை அடித்து உதைத்ததாக போலீஸில் புகார் கொடுத்தார் வனிதா. இதையடுத்து போலீஸார் ஆகாஷைக் கைது செய்தனர். பின்னர் சொந்த ஜாமீனில் அவரை விடுவித்தனர்.
வனிதாவின் நாடகம் - ஆகாஷ் புகார்:
இந் நிலையில் இதெல்லாம் தனது மகனைப் பறிக்க வனிதா போட்ட நாடகம் என்று கூறியுள்ளார் ஆகாஷ்.
இதுகுறித்து அவர் கூறுகையில், நானும், வனிதாவும் விவாகரத்து பெற்று பிரிந்தோம். கோர்ட் தீர்ப்புப்படி மகன் ஹரி என்னிடமும், மகள் ஜோவில்கா வனிதாவிடமும் உள்ளனர்.
மகனை கே.கே.நகர் பள்ளியில் படிக்க வைத்தேன். இந்த 2 வருட காலமாக குழந்தையை பார்க்க அவர் (வனிதா) வந்ததே இல்லை. இந்த நிலையில், திடீரென்று பள்ளியைத் தொடர்பு கொண்டு குழந்தையின் 'புராக்ரஸ் கார்டை' தன்னிடம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், நேரடியாகவும் வந்து குழந்தையை தன்னோடு அனுப்புமாறு அடம் பிடித்தார். நான் மறுத்தேன். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் நான் அடிக்கவில்லை. இருப்பினும் வனிதா கே.கே.நகர் போலீசில் அடித்து விட்டதாக பொய் புகார் அளித்தார்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் என்னிடம் விசாரணை நடத்தினார். நான் அடிக்கவில்லை என்றேன், கோர்ட் தீர்ப்புப்படி எனது மகன் என்னுடன்தான் இருக்க வேண்டும் என்ற உத்தரவையும் காட்டினேன். ஆனால் என்னைக் கைது செய்து விட்டனர். குழந்தையையும் வனிதாவுடன் அனுப்பி வைத்து விட்டனர்.
மகனை என்னிடமிருந்து பறிக்க வேண்டும் என்று பல நாட்கள் திட்டமிட்டு இந்த நாடகத்தை ஆடியுள்ளார். என் குழந்தையை கடத்தி மறைத்து வைத்துள்ளனர்.
எனது மகனை நான் நன்றாகத்தான் படிக்க வைத்து வருகிறேன். எனது தாயார் தனது பேரனை சிறப்பாக பார்த்துக் கொள்கிறார். இதற்காக அவன் படிக்கும் பள்ளி நிர்வாகம், சிறந்த பாட்டி என்று சர்டிபிகேட் கூட கொடுத்துள்ளது.
இத்தனை காலமாக வராதவர் இப்போது திடீரென்று சொந்தம் கொண்டாடுகிறார். எனது பக்க நியாயத்தை விளக்கி போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். நியாயம் கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறினார் ஆகாஷ்.


Click it and Unblock the Notifications











