மாற்றுத்திறனாளிகள் நலனுக்கு இளைஞன் படத்துக்குக் கிடைத்த ரூ. 45 லட்சத்தை வழங்கினார் கருணாநிதி
இளைஞன் திரைப்படத்திற்கு திரைக்கதை, வசனம் எழுதியதற்காக கிடைத்த ரூ.45 லட்சம் பணத்தை மாற்றுத் திறனாளிகள் நலனுக்கு வழங்குவதாக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
பா.விஜய் நடிக்கும் இளைஞன் என்னும் படத்திற்கு முதல்வர் கருணாநிதி திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார். இதற்காக அவருக்கு வழங்கப்பட்ட ஊதியத்தை மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக செலவிட, அதற்கான நலவாரியத்தில் ஒப்படைத்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:
2004-2005-ம் ஆண்டில் மண்ணின் மைந்தன்' படத்திற்கு நான் திரைக்கதை, வசனம் எழுதியதன் மூலம் கிடைத்த ஊதியம் 11 லட்சம் ரூபாய் - கண்ணம்மா' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் 10 லட்சம் ரூபாய் ஆக 21 லட்சம் ரூபாயை சுனாமி நிவாரணத்திற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதாவிடம் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று வழங்கும்படி செய்தேன்.
அது போலவே 9-7-2008 அன்று உளியின் ஓசை' படத்தின் மூலம் கிடைத்த ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமான வரி போக மீதி 18 லட்சம் ரூபாயை திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நானே நேரடியாக வழங்கினேன்.
அந்த வரிசையில் தற்போது தயாரிக்கப்படும் "பெண் சிங்கம்'' திரைப்படத்திற்காக எனக்கு கிடைத்த 50 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதியிலே சேர்ப்பதற்காக 14-9-2009 அன்று ஒப்படைத்து - தமிழகத்திலே உள்ள அருந்ததிய சமுதாய மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளிலும், பொறியியல் கல்லூரிகளிலும் சேர்ந்து படிக்க அரசு முதல்-அமைச்சர் நிவாரண நிதியில் இருந்து உதவிட வேண்டும் என்று என்னிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, முதல்வர் நிவாரண நிதியிலே நான் ஒப்படைத்த தொகை 50 லட்சம் ரூபாயை தூய்மைப் பணி புரிவோர் (அருந்ததியர்) நல வாரியத்தின் மூலமாக அருந்ததிய மாணவர்களின் உயர்கல்விக்காக வழங்கப்பட்டது.
அது போலவே தற்போது தயாரிக்கப்படும் "இளைஞன்'' திரைப்படத்திற்காக இன்று (24-4-2010) எனக்கு அளிக்கப்பட்ட 45 லட்சம் ரூபாயை தமிழக அரசின் முதல்வர் நிவாரண நிதியிலே சேர்ப்பதற்காக ஒப்படைக்கின்றேன்.
இந்த தொகையினை - தமிழகத்திலே உள்ள மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்திலே ஒப்படைத்து அதன் மூலமாக இந்த தொகை மாற்றுத்திறனாளிகளின் நலன்களுக்காக செலவிடப்படும் என்பதையும் அறிவிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன் என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











