நாற்காலி இல்லாமல் காற்றில் அமர்ந்து காட்டுவார் நாகேஷ்... கே.எஸ்.ரவிக்குமார் சுவாரசிய தகவல்
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான கமல், ரஜினி, அஜித், விஜய் என்று நான்கு நடிகர்களையும் இயக்கிய ஒரே இயக்குநர் என்ற பெருமை கே.எஸ்.ரவிக்குமார் அவர்களைத்தான் சேரும்.
அவர்கள் மட்டுமின்றி நடிகர்கள் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், நாகேஷ், கே.ஆர்.விஜயா, மனோரமா உள்ளிட்ட மூத்த கலைஞர்களையும் அவர் தன் படங்களில் இயக்கி இருக்கிறார்.
இதில் நடிகர் நாகேஷ் பற்றி தனது 45 ஆண்டுகால நட்பை சிலாகித்து பேசியுள்ளார் ரவிக்குமார்.

45 ஆண்டுகள் நட்பு
கே.எஸ்.ரவிக்குமார் பள்ளியில் படிக்கும்போதே அவருடைய நண்பர் நாராயணன் என்பவரின் தந்தை ஒரு பட தயாரிப்பாளராம். அவர் நாகேஷை வைத்து ஒரு படம் தயாரித்துக் கொண்டிருந்தபோதுதான் அந்த ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு தனது நண்பருடன் சென்று முதல் முறையாக பார்த்திருக்கிறார். அதன் பின்னர் நாராயணன் மூலம் அடிக்கடி நாகேஷ் வீட்டிற்கு செல்லும் வாய்ப்பு கே.எஸ்.ரவிக்குமாருக்கு அமைந்திருக்கிறது. வெளியூர்களுக்கு ஷூட்டிங் செல்லும்போது எப்போதும் யாராவது ஒருவரை அழைத்துக் கொண்டு செல்வாராம். அப்போது நாராயணன் இல்லாத பட்சத்தில் கே.எஸ்.ரவிக்குமாரைத்தான் சில படங்களுக்கு நாகேஷ் அழைத்துச் சென்றுள்ளார்.

அசிஸ்ட்டண்ட் டைரக்டர்
இவ்வாறு சினிமாவிற்கு வருவதற்கு முன்னதாகவே நாகேஷிற்கு நன்கு பரிட்சையமானவராக ரவிக்குமார் இருந்திருக்கிறார். அதன் பின்னர் துணை இயக்குநராக வேலை பார்த்தபோது அவருக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் தருணங்களில் ஒரு சில வசனங்களை தானே சேர்த்து கூறுவாராம். அப்பொழுது டைரக்டரிடம் கூறி விடவா என்று விளையாட்டாக மிரட்டுவாராம் நாகேஷ். அதேபோல ரஜினிகாந்தின் படங்கள் வெளிவரும் சமயத்தில் நாகேஷ் வீட்டிற்கு ப்ரிவ்யூ ஷோவிற்கான டிக்கெட்டுகள் வந்துவிடுமாம். அவர் குடும்பத்தோடு சேர்ந்து ரவிக்குமாரும் அந்த ப்ரிவ்யூ ஷோக்களை பார்த்துவிடுவாராம். இவை அனைத்தும் அவர் இயக்குநர் ஆவதற்கு முன்பு நடந்துள்ள சம்பவங்கள்

கடைசி படம்
தான் இயக்கிய இரண்டாவது படமான சேரன் பாண்டியன் திரைப்படத்தில் நாகேஷிற்கு வில்லத்தனம் கலந்த நகைச்சுவை கதாபாத்திரம் கொடுத்திருப்பார். நாகேஷ் நடித்த கடைசி படமான தசாவதாரம் படத்தை இயக்கியவரும் ரவிக்குமார்தான். அது மட்டுமின்றி அவர் இறந்த பின்பும் கோச்சடையான் திரைப்படத்தில் நாகேஷ் கதாபாத்திரத்தை அனிமேஷனில் உருவாக்கி இருப்பார்.

அனுபவி ராஜா அனுபவி
அனுபவி ராஜா அனுபவி திரைப்படத்தில் ஒரு காட்சியில் நாகேஷ் கார் மீது அமர்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருப்பாராம் அப்போது திடீரென்று அவர் அமர்ந்திருந்த கார் ரிவர்ஸ் எடுத்துச் செல்ல, அவர் கீழே விழாமல் அப்படியே காற்றில் எல் ஷேப்பில் அமர்ந்திருப்பாராம். அதன் பின்னர் எதேச்சையாக திரும்பி பார்ப்பது போல் காரைப் பார்க்க, கார் சென்றுவிட்டது போல என்று நகைச்சுவையாக ஒரு ரியாக்ஷன் கொடுத்துவிட்டு எழுந்து செல்வாராம். கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில் அவர் உண்மையாகவே அப்படி நடித்துள்ளார் என்றும் அதன் பின்னர் தான் கேட்டுக் கொண்டபோது தனக்காக அப்படி அமர்ந்து காட்டுவார் என்றும் கே.எஸ்.ரவிக்குமார் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











