Don't Miss!
- News திடீரென "ஆரஞ்சு" நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் மாறிய ஏதென்ஸ் நகரம்.. மக்கள் பீதி.. நாசா விளக்கம்!
- Sports IPL 2024 DC vs GT: நாடி நரம்பு எல்லாம் தோனி.. உண்மையை போட்டு உடைத்த ரிஷப் பண்ட்
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
டெய்ஸி-டென்ஷனில் சக்கரவியூகம்!
நாளை என்ற வித்தியாசமான படத்தை இயக்கியவர் உதயபானு மகேஷ்வரன். இப்போது சக்கரவியூகம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நாயகியாக நடிப்பவர் டெய்ஸி போபண்ணா. டெய்ஸியால் தனக்கு ஏகப்பட்ட லட்சங்கள் இழப்பு ஏற்பட்டு விட்டதாக தற்போது மகேஷ்வரன் புகார் கூறியுள்ளார்.
ஏற்கனவே கரம் மசாலா என்ற இந்திப் படத்தில் டெய்ஸி நடித்தபோது, அவராலும், அவரது காதலராலும் பெரும் பிரச்சினை ஏற்பட்டதாக அப்படத்தை இயக்கிய பிரியதர்ஷன் புகார் கூறியிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந் நிலையில் சக்கரவியூகம் படத்திலும் டெய்ஸியால் பிரச்சினை எழுந்துள்ளது. இப்படத்தை மும்பையைச் சேர்ந்த அஷ்டவிநாயக் என்ற நிறுவனம் தயாரித்து வருகிறது. நாளை படத்தில் நட்டு என்கிற வித்தியாசமான கேரக்டரில் நடித்த நடராஜ்தான் இப்படத்தில் நாயகன். கேமராமேனாக இருந்து நாயகனாக மாறியவர் நடராஜ்.
நாளை படத்தில் மகேஷ்வரனுடன் ஏற்பட்ட நட்பால், அதில் 2வது நாயகனாக நடித்த நடராஜ், சக்கரவியூகத்தில் நாயகனாகியுள்ளார்.
டெய்ஸியால் ஏற்பட்ட குழப்பங்கள் குறித்து மகேஷ்வரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொடுத்த கால்ஷீட் படி ஒரு நாள் கூட டெய்ஸி ஷூட்டிங்குக்கு வந்ததில்லை. மேலும் கொல்கத்தாவின் ஹௌரா பாலத்தில் கிளைமேக்ஸ் காட்சியைப் படம் பிடித்தபோது, ஷூட்டிங்கிலிருந்து திடீரென காணாமல் போய் விட்டார் டெய்ஸி. இதனால் ஷூட்டிங்கைத் தள்ளிப் போட வேண்டியதாயிற்று.
மேலும், டார்ஜிலிங்கில் எடுக்கப்படவிருந்த ஒரு பாடல் காட்சியையும், டெய்ஸியின் சொதப்பலால் தள்ளிப் போட நேரிட்டது. அவருக்காக ஒரு நாள் முழுவதும் யூனிட்டார் காத்திருந்து பின்னர் திரும்ப நேரிட்டது.
ஒவ்வொரு நாள் ஷூட்டிங்கின்போதும் ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி ஷூட்டிங் முறையாக நடக்க விடாமல் குழப்பிக் கொண்டே இருந்தார் டெய்ஸி.
உடை மாற்றச் சென்றால் பல மணி நேரம் வெளியே வரவே மாட்டார். அவருக்காக அனைவரும் காத்திருந்து காத்திருந்து வெறுத்துப் போகும் நிலை ஏற்பட்டது.
ஷூட்டிங்குக்கு வருவதாக இருந்தால் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் தான் கூறும் விமானத்தில்தான் டிக்கெட் போட வேண்டும். அதிலும், பிசினஸ் கிளாஸ் டிக்கெட்தான் போட வேண்டும் என்று வற்புறுத்துவார் டெய்ஸி.
தீபாவளிக்கே இந்தப் படத்தை திரையிட தீர்மானித்திருந்தேன். ஆனால் டெய்ஸியால் அது முடியாமல் போய் விட்டது. அவரால் எங்களுக்கு பல லட்சம் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
இது ஒரு மீடியம் பட்ஜெட் படம். ஆனால் பெரிய பட்ஜெட் படமாக மாறி விட்டது. டெய்ஸி குறித்து தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில், நடிகர் சங்கத்தில் புகார் கொடுக்கவுள்ளோம் என்றார் மகேஷ்வரன்.
டெய்ஸி மறுப்பு:
ஆனால் இந்தப் புகார்களை டெய்ஸி போபண்ணா மறுத்துள்ளார். அவர் கூறுகையில், எனக்கு இந்தப் படத்தில் நடிக்க ரூ. 5 லட்சம் சம்பளம் பேசினர். அட்வான்ஸாக ரூ. 50,000 கொடுத்தனர்.
படப்பிடிப்பு முடிவதற்குள் கலைஞர்களுக்கு சம்பளப் பணத்தைக் கொடுத்து விட வேண்டும் என்பது விதி. ஆனால் எனக்குப் பேசியபடி சம்பளத்தைக் கொடுக்கவில்லை. இழுத்தடித்துக் கொண்டே வந்தனர். கடைசிக் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் நடந்தபோது நான் அங்கு வந்தேன்.
ஆனால் என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு யாரும் வரவில்லை. ஒரு கார் கூட அனுப்பவில்லை.
மிகுந்த சிரமத்திற்கிடையே படப்பிடிப்பு நடந்த இடத்திற்குச் சென்றேன். ஷூட்டிங்கின் கடைசி நாளின்போது சம்பளப் பாக்கியைக் கேட்டபோது 3 வாரத்தில் தந்து விடுவதாக கூறினார்கள். ஆனால் சொன்னபடி தரவில்லை. எனது தாயார்தான் பணம் போனால் போகிறது விட்டு விடு, சண்டை போட வேண்டாம் என்று கூறி விட்டார். இதுதான் நடந்தது.
ஹௌரா பாலத்தில் நடந்த ஷூட்டிங்கின்போது எனக்கு முறையான வசதிகள் செய்து தரவில்லை. அந்த யூனிட்டில் இருந்த அனைவருமே ஆண்கள்.
நான் மட்டும்தான் பெண். எனக்கு சரியான டாய்லெட் வசதி கூட இல்லை. கேரவன் தரப்படவில்லை. குறைந்தபட்சம், டாய்லெட் வசதியாவது செய்ய வேண்டாமா என்று கெஞ்சிக் கேட்டேன். ஆனால் அதை அவர்கள் கண்டு கொள்ளவே இல்லை.
நான் ஒன்றும் கோடீஸ்வரப் பெண் அல்ல. சாதாரண நடுத்தர வர்க்கத்துப் பெண்தான். பணத்துக்காகத்தான் நடிக்க வந்தேன். ஆனால் பேசியபடி சம்பளத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். இது எப்படி நியாயமாகும்?.
இதற்கு முன்பு பிரியதர்ஷன், ஏ.எம்.ரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோரது படங்களில் நடித்துள்ளேன். அவர்கள் யாருமே இப்படி என்னை ஏமாற்றியதில்லை. ஆனால் உதயபானு மகேஷ்வரன் என் மீது அவதூறாக பொய்யான புகார்களைக் கூறியுள்ளார் என்று கூறியுள்ளார் டெய்ஸி.
யார் பக்கம் உண்மை இருக்கிறதோ?