சங்கர் தயாரிப்பில் சூர்யா, கார்த்தி நடிக்க வேண்டிய ஹிட் படத்தில் பின்னர் யார் நடித்தார்கள் தெரியுமா?
சென்னை: இயக்குநர் சங்கரிடம் துணை இயக்குநராக பணிபுரிந்து அங்காடித் தெரு, வெயில் போன்ற வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் இயக்குநர் வசந்தபாலன்.
கடைசியாக ஜெயில் திரைப்படத்தை இயக்கியவர் தற்சமயம் அநீதி என்கிற திரைப்படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிரார்.
இந்நிலையில் சமீபத்தில் வசந்தபாலன் கொடுத்திருக்கும் ஒரு பேட்டியில் பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

ஆல்பம்
வசந்தபாலன் முதன்முதலாக இயக்கியிருந்த திரைப்படம் ஆல்பம். அந்தப் படத்திற்கு முகவரியாக அமைந்திருந்தது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாவின் இசை. குறிப்பாக செல்லமே செல்லம் என்றாயடி பாடல் மிகப் பெரிய ஹிட்டானது. இப்போது முன்னணி பாடகியாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் அந்தத் திரைப்படத்தில்தான் அறிமுகமானார். இயக்குநர் பாலச்சந்தர் தயாரித்திருந்த அந்தத் திரைப்படம் தோல்வியை சந்தித்தது. இதனால் பல அவமானங்களை சந்தித்த வசந்தபாலன் நான்கு வருடங்கள் மெனக்கெட்டு தன்னுடைய சொந்த அனுபவங்களை ஒரு கதையாக எழுதினார்.

வெயில்
முதல் படத்தில் கோட்டை விட்டதுபோல் இரண்டாவது படத்தில் விடக்கூடாது என்ற உறுதியில் சர்வதேச திரைப்படங்கள் பார்ப்பது, ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களுக்கு ஒன் லைன் எழுதுவது போன்ற பயிற்சிகளை நான்கு வருடங்கள் மேற்கொண்டு அதன் பின்னர் வெயில் திரைப்படத்தின் கதையை எழுதினாராம். தமிழ் சினிமாவில் முதன் முதலில் ஒரு மனிதனின் தோல்வியை பற்றி கூறிய படம். அதுமட்டுமின்றி பெரும்பாலும் சினிமாவில் இயற்கை சார்ந்த விஷயங்கள் கொண்டாடப்பட்டது என்றால் அது மழை மட்டும்தான் முதன் முதலில் வெயிலை கொண்டாடியது இந்தத் திரைப்படம்தான்.

சங்கர் தயாரிப்பு
முதல் படம் தோல்வி அடைந்துவிட்டது. இரண்டாம் படத்திற்கு கதை தயார், ஆனால் எந்த தயாரிப்பாளரை அணுகுவது என்று புரியாமல் இருந்த வசந்த பாலனுக்கு தன்னுடைய குருநாதர் சங்கர் மூலமாகவே அந்தக் கதவு திறந்தது. எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி காதல் திரைப்படத்தை தயாரித்து வெற்றியும் பெற்றார் சங்கர். அதனால் அவரிடம் கதையை கூறியிருக்கிறார். கதையைக் கேட்டு முடித்த பின்னர் சங்கரின் கண்களில் கண்ணீர் மட்டுமே இருந்ததாம். மறுநாள் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை முன் பணமாக கொடுத்தாராம்.

சூர்யா கார்த்தி
கதாநாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேச்சுவார்த்தை நடந்தபோது பசுபதியை தேர்வு செய்து வைத்திருந்தாராம் வசந்தபாலன். காரணம் அப்போது வெளியான நடிகர் கமல்ஹாசனின் மும்பை எக்ஸ்பிரஸ் படத்தில் அவரை பார்த்தபோது ஒரு தெற்கத்தி ஊர்காரர்போல் பசுபதி இருந்ததால் தன்னுடைய கதைக்கு சரியாக இருப்பார் என்று சங்கரிடம் கூறியிருக்கிறார். ஆனால் அவர் ஒரு வில்லன் நடிகர் அவர் எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார் என்று சங்கர் முதலில் தயங்கினாராம். அவர் தரப்பில் நடிகர்கள் சூர்யா ,முரளி, சேரன், எஸ்.ஜே.சூர்யா போன்றவர்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினாராம்.

பசுபதி பரத்
ஆனால் பசுபதிதான் வேண்டும் என்று வசந்தபாலன் விடாப்பிடியாக இருந்துள்ளார். அதேபோல தம்பி கதாபாத்திரத்திற்கு முதலில் கார்த்தியை தேர்வு செய்தார்களாம். ஆனால் அப்போது பருத்திவீரன் திரைப்படம் வெளியாகவில்லை. அந்தப் படம் வெளியான பின்னர்தான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்ததால் கார்த்தி அதில் நடிக்க முடியாமல் போய்விட்டது. பின்னர் பரத்தை இயக்குநர் சங்கர்தான் முடிவு செய்தாராம். சூர்யாவையும் கார்த்தியையும் நடிக்க வைக்கலாம் என்ற அந்தக் கதாபாத்திரங்களில் பசுபதியும் பரத்தும் நடித்து மிகப் பெரிய வெற்றிப் படமானது வெயில்.


Click it and Unblock the Notifications











