ஜீவா உடல் நாளை அடக்கம்
ரஷ்யாவில் மாரடைப்பால் மரணமடைந்த பிரபல இயக்குநர், கேமராமேன் ஜீவாவின் உடல் நாளை சென்னையில் அடக்கம் செய்யப்படுகிறது.
இயக்குநர் ஜீவா, தாம் தூம் படத்தை இயக்கி வந்தார். இப்படத்தின் ஷூட்டிங் ரஷ்யாவில் நடந்து வந்தது. இதற்காக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் முகாமிட்டிருந்தார் ஜீவா.செவ்வாய்க்கிழமை படப்பிடிப்பு முடிந்து ஊருக்குக் கிளம்புவதற்குத் தயாராக இருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. உடனியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் ஜீவா. ஆனால் வழியிலேயே உயிர் பிரிந்தது.
இதையடுத்து அவரது உடல், புதன்கிழமையன்று பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் தாம் தூம் படக்குழுவினரிடம் ஜீவாவின் உடலை ரஷ்ய அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
இதைத் தொடர்ந்து ஜீவாவின் உடலை சென்னைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடங்கின. அன்றைய தினமே உடலைக் கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் அது முடியவில்லை.
இதையடுத்து வருகிற வெள்ளிக்கிழமை ஜீவாவின் உடலை கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஜீவாவின் உடல் ஃபின் ஏர் விமானம் மூலம் சென்னைக்குப் பயணிக்கிறது. வெள்ளிக்கிழமை காலை உடல் மும்பை வந்து சேரும்.
மும்பை விமான நிலையத்தில், ஜீவாவின் உடலை அவரது மைத்துனரும், இயக்குநருமான வசந்த் பெற்றுக் கொள்வார் (ஜீவாவின் மூத்த சகோதரியைத்தான் வசந்த் திருமணம் செய்து கொண்டுள்ளார்)
பின்னர் ஜீவாவின் உடலுடன் வசந்த் காலை 10.45 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னைக்கு வருகிறார். அன்று மாலை 4 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன. ஜீவாவின் உடல் ராயப்பேட்டை மசூதி வளாகத்தில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஜீவா இந்து மதத்தைச் சேர்ந்தவர். ஆனால் தனது மனைவி அனீஷாவைத் திருமணம் செய்து கொள்வதற்காக முஸ்லீம் மதத்திற்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











