நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை.. கண்ணதாசன் பிறந்தநாள் இன்று!
சென்னை: நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை என பாடிய கவிஞர் கண்ணதசன், இன்றும் அழியாமல் நம் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
Recommended Video
முத்தையாவாக பிறந்து முத்து முத்தான கவிதைகளை எழுதி கண்ணதாசனாக காலத்தை வென்ற காவியத் தாயின் இளைய மகனுக்கு இன்று 93வது பிறந்தநாள்.
திரை இசை பாடல்களில் தனது கில்லாடி தனத்தைக் காட்டிய காவியக் கலைஞர் வடித்த சில அற்புதமான பாடல்கள் பற்றி இங்கே காண்போம்.

93வது பிறந்தநாள்
காரைக்குடி அருகே உள்ள சிறுகூடல்பட்டியில் 1927ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி சாத்தப்ப செட்டியாருக்கும் விசாலாட்சி அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். முத்தையா என்ற அவரது பெயர் அவர் சுவீகரம் கொடுக்கப்பட்ட போது நாராயணன் ஆக மாறியது. பின்னர், சென்னைக்கு வேலை தேடி வந்த அவர், நேரலையில், உங்கள் பெயர் என்ன என கேட்டபோது, சட்டென கண்ணதாசன் என கூறினார். அன்று முதல் கண்ணதாசனாகவே மாறினார்.

5000 பாடல்கள்
தமிழ் சினிமாவில் 5000 பாடல்களுக்கு மேல் எழுதி சாதனை புரிந்தவர் கவிஞர் கண்ணதாசன். தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக, சினிமா பாடல்கள் தவிர்த்து 6000 கவிதைகளையும் 232 புத்தகங்களையும் எழுதியுள்ளார் இந்த எட்டாம் வகுப்பு வரை படித்த மேதை. மூன்று மனைவிகள், 15 குழந்தைகள் என வாழ்ந்த ஒருவரால், இப்படி சரளாமாக கவிதைகள் வந்து விழுந்தது காவியத்தாய் கொடுத்த வரம் என்று தான் சொல்ல வேண்டும்.

தேசிய விருது
எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், கமல்ஹாசன், ரஜினி என எத்தனையோ திரை நட்சத்திரங்களுக்கு எண்ணில் அடங்க அருமையான பாடல்களை எழுதியுள்ள கண்ணதாசனுக்கு, "குழந்தைக்காக" திரைப்படத்தில் எழுதிய பாடல்களுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இப்போதெல்லாம் அவர் இருந்திருந்தால், அவர் எழுதிய 5000 திரைப் பாடல்களுக்கும் தேசிய விருது கிடைத்திருக்கும்.

முதல் படம்
1949ம் ஆண்டு கே. ராம்நாத் இயக்கத்தில் வெளியான கன்னியின் காதலி படத்தில் பாடலாசிரியராக அறிமுகமானார் கண்ணதாசன். "கலங்காதிரு மனமே" என அப்போதே தனது தத்துவ வரிகளை திரை இசை பாடலாக கொடுக்க ஆரம்பித்து விட்டார். சுப்பையா நாயுடு இசையில் உருவான அந்த படத்தின் அத்தனை பாடல்களுக்கும் இவரே பாடல் எழுதியிருந்தார்.

அச்சம் என்பது மடமையடா
1960ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் மன்னாதி மன்னன் படத்தில் கண்ணதாசன் எழுதிய "அச்சம் என்பது மடமையடா" என்ற பாடல், இன்னமும் திராவிட இயக்கங்களின் தேசிய கீதமாக ஒலித்து வருகிறது. எம்.ஜி.ஆருக்கு இவர் எழுதிய பல பாடல்கள், அவரது திரை வாழ்க்கைக்கும், அரசியல் வாழ்க்கைக்கும் வலிமை சேர்த்தது.

மாலைப் பொழுதின் மயக்கத்திலே
காவியத்தாயின் மூத்த மகன் கம்பருக்கு பிறகு காதல் கவிதைகளை படைப்பதில் வல்லவர் என்பதாலே காவியத்தாயின் இளைய மகனாக மாறினார் கண்ணதாசன். தத்துவ பாடல்களில் தைரியம் பொங்கினால், காதல் பாடல்களில் காதல் ரசம் பொங்கி வழியும். பாக்யலக்ஷ்மி படத்தில் இடம்பெற்ற மாலை பொழுதின் மயக்கத்திலே பாடல் இன்றும், என்றும் எவர்க்ரீன் ஹிட் தான்.

எங்களுக்கும் காலம் வரும்
எம்.ஜி.ஆரை போலவே நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கும் எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார் காவிய கலைஞர் கண்ணதாசன். பாவ மன்னிப்பு, பாசமலர், பலே பாண்டியா என அந்த பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். அண்ணன் தங்கை பாசத்தை எடுத்துக் காட்டிய பாசமலர் படத்தில் இடம்பெற்ர "எங்களுக்கும் காலம் வரும்" பாடல், இப்போதும், பல வெற்றியாளர்களின் வாய்கள் முணுமுணுக்கும் பாடலாக அமைந்து வருகிறது.

கண்ணதாசன் நடிப்பில்
கண்ணதாசன் கதையில் வெளியான கருப்புப் பணம் படத்தில் தணிகாசலம் எனும் கருப்பு பண முதலையாக நடித்து கலக்கி இருப்பார் கண்ணதாசன். பாடலாசிரியரை தாண்டி நடிகராகவும் தன்னால் நிரூபிக்க முடியும் என நிரூபித்து இருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற "எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும்" என்ற பாடல் சரிசம தத்துவத்தை வலியுறுத்தி இருக்கும்.

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை
1981ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி இந்த உலகத்தை விட்டு அவரது உடல் மட்டுமே மறைந்தது. ஆனால், ரத்த திலகம் படத்தில் அவர் எழுதி டி.எம்.எஸ் குரலுக்கு திரையில் தோன்றி, "ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு" பாடலில், "நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என பாடிய கண்ணதாசன், இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், தமிழ் மக்கள் மனங்களில் நிறைந்து இருப்பார்.


Click it and Unblock the Notifications











