ஜெயாவுக்கு தாவும் சுஹாசினி
சன் டிவி, ராஜ் டிவியில் ஒரு ரவுண்டு அடித்து முடித்து விட்ட சுஹாசினி இப்போது ஜெயா டிவிக்குத் தாவுகிறார்.
சன் டிவியில் முன்பு சுஹாசினி சில தொடர்களைத் தயாரித்து நடித்தும் வந்தார். பின்னர் சன் டிவியில் அவரது தொடர்கள் எதுவும் இடம் பெறவில்லை. மாறாக ராஜ் டிவிக்குத் தாவினார்.அதில் மகளிர் மட்டும் என்ற டாக் ஷோவை அவர் தொகுத்து வழங்கினர். கிராமம் கிராமமாக சென்று அவர் பெண்களை சந்தித்துப் பேசிய அந்த வித்தியாசமான நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றது.
ஆனால் இந்த நிகழ்ச்சி, சுஹாசினியின் நீள வாயால் முடிவுக்கு வந்தது. கற்பு குறித்து குஷ்பு கருத்து தெரிவிக்கப் போக அவருக்கு ஆதரவாக படு ஆவேசமாக கருத்து தெரிவித்தார் சுஹாசினி. உலகத் தமிழர்கள் சார்பாக குஷ்புவிடம் தான் மன்னிப்பு கேட்பதாக சுஹாசினி கூற அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் ராஜ் டிவியில் சுஹாசினி நடத்தி வந்த டாக் ஷோவை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டனர். இதையடுத்து எந்த டிவியிலும் சுஹாசினியைப் பார்க்க முடியவில்லை.
இடையில் விஜய் டிவியில் காபி வித் அனு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க அவரை அழைத்தனர். ஆனால் அவர் தயங்கவே, சுஹாசினியின் சித்தப்பா மகளான அனு தற்போது அதை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பிறகு ஜெயா டிவியில் ஒரு டாக் ஷோவை நடத்த சுஹாசினி முடிவு செய்துள்ளார். விரைவில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளதாம்.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அரட்டை அரங்கத்திற்குப் போட்டியாக ஜெயா டிவியில் ஏற்கனவே விசு மக்கள் அரங்கம் என்ற டாக் ஷோவை நடத்தி வருகிறார். இந்த வரிசையில் தற்போது சுஹாசினியும் இணைகிறார்.
பேசுங்க, நல்லா பேசுங்க!


Click it and Unblock the Notifications











