சூர்யா- ஸ்ருதி ஹாசன்- முருகதாஸ் இணையும் 7ஆம் அறிவு

உதயநிதி ஸ்டாலின் தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் தயாராகிறது.
இந்தப்படத்தின் அறிமுக விழா நேற்று சனிக்கிழமை சென்னை கிரீன் பார்க்கில் நடந்தது.
விழாவில் பங்கேற்ற இயக்குநர் முருகதாஸ் கூறுகையில், "நான் கடைசியாக தமிழில் செய்த படம் கஜினி. அதே டீம் இப்போது இணைந்துள்ளது. நானும் சூர்யாவும் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்கிறோம்.
இந்தப்படம் குறித்து தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலினிடம் விவாதித்த போது அவர் சொன்னது, "கஜினிக்குப் பிறகு மீண்டும் அதே டீம் சேர்கிறது. எதிர்பார்ப்பு எக்கச்சக்மாக இருக்குமே என்ன செய்யப் போகிறீர்கள்?" என்றார். ஒரு கணம் திகைத்துவிட்டேன்.
இந்த எதி்ர்ப்பார்ப்பை ஈடுகட்டும் விதத்தில் திரைக்கதையை உருவாக்க 10 மாதங்கள் வேறு சிந்தனை நினைப்பு எதுவும் இன்றி உழைத்தேன்.
இந்த ஏழாம் அறிவு திரைப்படம், உலக சினிமாவுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கும். அதே நேரம், இதுவரை யாரும் யோசிக்காத ஒரு புதிய விஷயத்தை இந்தப் படத்தின் கருவாக வைத்திருக்கிறோம். நிச்சயம் இந்தப் படத்தைப் பார்க்கும் வெளிநாட்டுப் படைப்பாளிகள், அட இந்த விஷயத்தை நாம் யோசிக்கவில்லையே என்று வாய்விட்டுச் சொல்வார்கள். அந்த அளவு வித்தியாசமாக முயற்சித்துள்ளோம்.
இன்னொரு விஷயம், இதே சூர்யா- ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் இந்திப் படம் செய்யவும் ஆர்வமாக உள்ளேன்.." என்றார் முருகதாஸ்.
வழக்கமாக இரண்டு வரிகள் பேசவே யோசிக்கும் முருகதாஸ் இந்த நிகழ்வில் மிகவும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசியது குறிப்பிடத்தக்கது.
சூர்யா பேசுகையில், "அடுத்த பத்தாண்டுகளுக்கு பேசப்படும் படமாக இந்த ஏழாம் அறிவு அமையும். நான் இந்த அளவு வளரக் காரணம் நிச்சயம் பத்திரிகைகள்தான். அவர்களின் விமர்சனங்கள்தான் என்னை திருத்திக் கொண்டு, இந்த நிலைக்கு உயர உதவின (அட!) என்றார்.
நாயகி ஸ்ருதி, எடிட்டர் ஆண்டனி ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சியை கவிதை நடையில் தொகுத்து வழங்கி அசத்தினார் மக்கள் தொடர்பாளர் நிகில்.


Click it and Unblock the Notifications











