இரண்டாவது கணவரைப் பிரிந்தார்... மீண்டும் முதல் கணவர் ஆகாஷுடன் சேர்கிறார் வனிதா!

நடிகை வனிதா முதல் கணவர் ஆகாஷை விவாகரத்து செய்து பிரிந்து ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆகாஷுடன் வளரும் மகன் ஸ்ரீஹரியை தன்னிடம் ஒப்படைக்கவேண்டும் என்று வனிதா போராடினார். போலீசிலும் புகார் அளித்தார். ஆனால் ஸ்ரீஹரி வனிதாவுடன் செல்ல மறுத்து விட்டான்.
தன் குழந்தை ஸ்ரீஹரியை தன்னிடமிருந்து பிரிக்கிறார்கள் என்று அப்பா விஜயகுமார் மீதும், அம்மா மஞ்சுளா மீதும் கடுமையாக கோபபப்பட்டு, சண்டை போட்டார் வனிதா. ஒவ்வொரு முறை நீதிமன்றத்துக்கு வரும்போதும் இவருடன் அப்பாவியாக வந்து கொண்டிருந்த இரண்டாவது கணவர் ராஜன், இப்போது வனிதாவிடமிருந்து விலகிவிட்டாராம்.
இதையடுத்து, மகனுக்காக இரண்டாவது கணவர் ராஜனை விட்டு விலகி விட்டதாக நடிகை வனிதா கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி:
என் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கருதிதான் இரண்டாம் திருமணம் செய்தேன். ஆனால் என் மகன் ஸ்ரீஹரி அப்பா ஆகாஷ் இன்னும் தனியாக தானே இருக்கிறார். நீ எப்படி இன்னொரு திருமணம் செய்து கொள்ளலாம் என்று கண்டித்தான். அதற்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை.
அவசரப்பட்டு தவறு செய்து விட்டதை உணர்ந்தேன். அவன் அம்மாவை இன்னொருத்தருடன் பார்க்க விரும்பவில்லை என்று புரிந்தது. மகன் எனக்கு முக்கியம். அவனுக்கு விருப்பம் இல்லாத எதையும் இனி செய்வதில்லை என்று முடிவு செய்து விட்டேன்.
ராஜனுக்கும் சமீபத்திய பிரச்சினைகள் மன உளைச்சலை ஏற்படுத்தின. இருவரும் உட்கார்ந்து பேசி பிரிவது என முடிவு எடுத்து விலகி விட்டோம். இப்போது என் மகன் ஸ்ரீஹரி என்னுடன் நன்றாக பேசுகிறேன். நானும் ஆகாஷு ம் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்குள் பல தடவை சண்டைகள் வந்துள்ளன. அவரை அவமானப்படுத்தி பேசி இருக்கிறேன்.
ஆனாலும் இன்று வரை அவர் இன்னொரு திருமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் அவர் மேல் எனக்கு மரியாதை ஏற்பட்டு உள்ளது. நாங்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்.
எங்கள் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்னுடன் பேச வேண்டும். அதுதான் முக்கியம். ஆகாஷ் மேல் நான் வைத்திருந்த காதல் உண்மையானது. அதனால் அவருடன் மீண்டும் என்னால் பேச முடிகிறது. அவரும் என்னுடன் நன்றாக பேசுகிறார். இருவரும் சேர்ந்து என் குழந்தையை வளர்க்க விரும்புகிறோம்.
என் அப்பா விஜயகுமார் மீது நான் மரியாதை வைத்துள்ளேன். அவருடன் பேச ஆர்வமாக இருக்கிறேன். ஆனால் அவரை நேரில் சந்திக்க விடாமல் சிலர் தடுக்கின்றனர். அண்ணனும் சகோதரிகளும் மீண்டும் நான் குடும்பத்தோடு சேரக்கூடாது என்று நினைக்கிறார்கள்," என்றார்.
மேலும், இதுவரை வனிதா ராஜன் என்று இருந்த தன் பெயரை இப்போது, வனிதா விஜயகுமார் என்றே மாற்றிக் கொண்டுள்ளார் வனிதா.


Click it and Unblock the Notifications











