உயரத்துக்கு வந்த பிறகும் ரசிகர்களை மறக்காத விஜய்! ரசிகர்களுக்காக மாதம் ஒருநாள் அர்ப்பணிப்பு
சென்னை: விஜய் என்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால் உடல், பொருள் அனைத்தையும் ஒப்படைத்து ஓடுகிறார்கள் அவரது ரசிகர்கள். வெற்றி பெற்றபோது கொண்டாடுவோர்களாக மட்டும் இல்லாமல், தோல்வியின்போது பக்கபலமாக இருந்து அடுத்த வெற்றிக்காக உழைக்கிறார்கள் ரசிகர்கள்.
படம் ரிலீசாகும் முந்தைய நாள் இரவு முதலே தியேட்டர் வாசலில் காத்து கிடந்து, கட்-அவுட், பூமாலை என தடபுடல் ஏற்பாடுகளை செய்து, பட்டாசு வெடித்து படத்தை வரவேற்கிறார்கள்.
விஜய் திரைப்படங்கள் ரிலீசாவது என்பது, ரசிகர்களுக்கு தீபாவளி, பொங்கல் போல ஒரு திருநாள். விஜய் கெட்டப் போலவே ஆடை வாங்கி அணிவது, முடியை வெட்டிக்கொள்வது என அவர்கள் ஆரவாரத்திற்கு ஒரு அளவே இல்லை.

உதவி கரம்
தனக்காக இத்தனை மெனக்கெட்டு உழைக்கும் ரசிகர்களை உதறி தள்ளிவிடவில்லை விஜய். தனது மன்றம் வாயிலாக தேவைப்படும் உதவிகளை சத்தம் இல்லாமல் செய்து கொண்டிருக்கிறார் அவர்.

ரசிகர்கள் முக்கியம்
தனது அன்பு சாம்ராஜ்யத்தின் அடித்தளம் ரசிகர்கள் மட்டுமே என்பதை உணர்ந்துள்ள விஜய், அவர்களை மகிழ்ச்சிப்படுத்த தயங்குவது இல்லை.

போட்டோவுக்கு அனுமதி
எந்த நடிகரின் ரசிகராக இருந்தாலும் அந்த ஹீரோவோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது அடங்காத ஆசையாக இருக்கும். இந்த ஆசையை நிறைவேற்ற ஒரு வாய்ப்பை விஜய் மாதாமாதம் விரும்பி கொடுத்துக்கொண்டுள்ளார்.

மாதம் ஆயிரம் பேர்
குடும்பம், சூட்டிங் என எத்தனையோ வேலைகள் இருந்தாலும், மாதத்தில் ஒருநாளை தனது ரசிகர்களுக்காக முழுக்க அர்ப்பணித்துவிடுகிறார் விஜய். அந்த நாளில் 10 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்றங்களிலிருந்து ஒரு ரசிகர் மன்றத்துக்குத் தலா 100 ரசிகர்கள் வீதம் 1000 பேரை அழைத்து வரச் சொல்லுவார் விஜய். அனைவருடனும் பொறுமையாக சிரித்த முகத்தோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார்.

அறிவுரை உண்டு
போட்டோ எடுத்ததும், கையாட்டி வழியனுப்புவதும் கிடையாது. தன்னை பார்த்த மகிழ்ச்சியில், ரசிகர்கள் கொஞ்சம் ஓவராக திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பித்துவிட கூடாது என்பதற்காக, அவர்களுக்கு அறிவுரைகளையும் சொல்லியே அனுப்புவாராம்.

விஜய் செலவு
"நீங்கள் கண்டிப்பாக உங்களது குடும்பத்தினர் பெருமைப்படும் அளவுக்கு வளர வேண்டும். உங்களுடைய வளர்ச்சிதான் எப்போதுமே எனக்குச் சந்தோஷம் தரும்" என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பிவைப்பது விஜய் வழக்கம். மேலும், தன்னை சந்திக்க வரும் ரசிகர்கள் தங்க ஏற்பாடு, உணவு ஏற்பாடு, போக்குவரத்துச் செலவு என அனைத்துமே விஜய்யின் செலவாம்.

கேலி பற்றி கவலையில்லை
தன்னை கிண்டல் செய்பவர்களால் மட்டுமே தான் இன்னும் வளர முடிகிறது என்று ரசிகர்களுடன் கலந்துரையாடும்போது தெரிவித்திருக்கிறார் விஜய். தன்னைப் பற்றி யார் எந்த விமர்சனத்தை முன்வைத்தாலும் அவர் அதுகுறித்து பதில் சொல்லுவது இல்லை. விமர்சனம் செய்வோர் வாய் வலித்து திரும்புவதுதான் மிச்சம்.


Click it and Unblock the Notifications











