கவனம் இந்தியா! இளையதலைமுறை கவனிக்கிறது!!- 2012 விளம்பரங்கள் ஓர் பார்வை
முழுபக்க கவிதை படிப்பதை விட இரண்டு வரியில் ஹைகூ படிப்பது தனி சுகம். அதுபோலத்தான் விளம்பரங்களும் ஒரு அலாதியான மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியவை.
தொலைக்காட்சிகளில் 30 செகண்டுகள் முதல் 60 செகண்டுகள் வரை மட்டுமே வந்தாலும் அது சொல்லும் கதை, கவிதையாய் அமைந்துவிடும். சில விளம்பரங்கள் ரசிகர்களை கவர்ந்து விடுவதோடு பரபரப்பை ஏற்படுத்திவிடும். இந்த பரபரப்புதான் விளம்பரத்திற்கே விளம்பரத்தை கொடுக்கும்.
சில விளம்பரங்கள் சிறுவர்களை கவரும். சில விளம்பரங்கள் இளசுகளை கவரும். சில பெண்களைக் கவரும். ஆனால் சில விளம்பரங்கள் மட்டுமே அனைத்து தரப்பினரையும் கவரும். 2012ம் ஆண்டில் சில விளம்பரங்கள் அட நல்லா இருக்கே என்று பேச வைத்திருக்கும். சான்ஸே இல்லை சூப்பர்ப்பா என்று ரசிக்க வைத்திருக்கும். இது விளம்பரமா? அல்லது விழிப்புணர்வு படமா என்று பேசவைத்தவையும் இருக்கின்றன. அதுபோன்ற சில விளம்பரங்கள் இந்த ஆண்டு சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தின. அவைகளில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம்.

சூர்யா ஜோதிகா காபி குடிப்பாங்களே?!
சினிமாவில் சூப்பர் ஜோடி என்று பேசப்பட்ட சூர்யா - ஜோதிகா நிஜவாழ்க்கையில் தம்பதியராக இணைந்த பின்னர் சேர்ந்து நடித்த விளம்பரம் சன்ரைஸ் காபி. இது குடும்பத்தில் அதிகாலை நடக்கும் செல்லச் சண்டையை எடுத்துக்காட்டியிருக்கும். காபி குடிக்கிறோமோ இல்லையோ இந்த விளம்பரம் ஒரு நிமிடம் எல்லோரையும் பார்க்கத்தூண்டியது.

உங்க மனசுக்கு புடிச்சவங்களைப் பற்றி
சினிமாவில் பிரபலமான ஜோடியை விளம்பரங்களில் ஜோடி சேர்ப்பது இப்போது வியாபாரயுக்தியாகிவிட்டது. கார்த்தி - காஜல் அகர்வால் ஜோடிக்கு நான் மகான் அல்ல படத்தில் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகியிருந்ததாக ஒரு பேச்சு இருந்தது. அதே ஜோடியை ப்ரூ காபியில் போட்டு அசத்தலாக ஒரு கமர்சியல் செய்திருந்தார்கள். இந்த ஜோடியின் ரொமான்ஸ் ரிமோட்டை கையில் தொடவிடாமல் பார்க்க வைத்தது.

சினேகா - பிரசன்னா பிரிவுக்கு காரணம்?
சினிமாவில் ஒரு படத்தில் ஜோடி சேர்ந்த சினேகா-பிரசன்னா ஜோடி பின்னர் குடும்ப வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்தார்கள். அப்புறம் அவர்களின் காட்டில் விளம்பர அடைமழைதான். இவர்களின் திருமணத்திற்குப் பின் ஒரு மாதத்தில் பரபரப்பான ஒரு விளம்பரம் வெளியானது. சினேகா - பிரசன்னா பிரிவுக்கு என்ன காரணம்? என்ற அந்த விளம்பரத்தை ஆடி மாதத்தில் புதுமணத்தம்பதியருக்காக போட்டு பரபரப்பை ஏற்படுத்தியது செல்போன் நிறுவனம் ஒன்று.

என் தங்க மகன்
சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள்தான் விளம்பரத்தில் ஜோடி சேரவேண்டுமா? தாய்க்கும் மகனுக்கும் இடையே உள்ள உறவைக்கூட கவிதையாய் வெளிப்படுத்தலாமே என்று கூறியது நகை விளம்பரம் ஒன்று. அம்மாவின் மீதான பாசத்தை தங்கத்தோடு ஒப்பிட்டு பேசியது அந்த விளம்பரம். அதுவும் நடிகர் விஜய் அம்மா ஷோபாவின் மடியில் படுத்தவாறு பாசத்தோடு விவரிக்கும் காட்சி அனைவரையும் கவர்ந்த கமர்சியல்.

இளைய தலைமுறையினர் கவனிக்கிறார்கள்
நாளிதழ்கள் எல்லோரும் இப்போது விளம்பரம் போட ஆரம்பித்துவிட்டனர். இந்த ஆண்டு ஹிந்து நாளிதல் போட்ட நாடாளுமன்ற கூட்ட விளம்பரம் பரபரப்பாக பேசப்பட்டது. இளையதலைமுறையினர் கவனிக்கிறார்கள் கவனம் இந்தியா! என்ற வார்த்தை செம பஞ்ச்.

தங்க மங்கை ஐஸ்வர்யாராய்
ஐஸ்வர்யா ராய் குழந்தை பேற்றுக்குப்பின்னர் முதலில் நடித்த நகைக்கடை விளம்பரம் இது. தங்க நீரில் குதித்து எழும் அந்த அழகு நகையை விட ஐஸ்வர்யாவைத்தான் அதிகம் பார்க்க வைத்தது. தாய்மையின் பூரிப்பு முகத்தில் தெரிய தங்க நகைகளை அணிந்த ஐஸ்வர்யாவின் போஸ் அழகுக்கு அழகூட்டியது.

குழந்தைகளின் மீதான அக்கறை
இரண்டு குழந்தைகள் ஒரு வயதான கடைக்காரர் என குட்டிக் கதை சொன்ன ஐசிஐசிஐ விளம்பரம் ஒரு நிமிடம் அனைவரையும் நின்று பார்க்கத்தூண்டியது. மிட்டாய் வாங்க வைத்திருந்த பணத்தை தொலைத்துவிட்ட குழந்தைகளுக்கு பணமில்லாமல் அன்போடு இரண்டு மிட்டாய்களை வழங்குவார் கடைக்காரர். சிறுமிகளும், கடைக்காரராக நடித்திருந்த தாத்தாவும் அனைவரின் மனதிலும் பச்சக் என்று ஒட்டிக்கொண்டார்கள் என்றே கூறலாம்.

கவிதையாய் பேசும் வோடாபோன்
வோடாபோன் விளம்பரங்கள் எல்லாமே ஏதாவது ஒரு கதையை கூறும். அது பொம்மையோ, நாயோ ஏதாவது கணம் பார்க்கத்தூண்டும் வகையில் அமைந்திருக்கும். இந்த விளம்பரம் ஒரு சிறுவனுக்கும் சிறுமிக்கும் இடையே பூக்கும் நட்பு அதற்கு உதவி செய்யும் பக் நாய் என ஹைகூவாய் அமைந்திருக்கும். அநேக சிறுவர்களை கவர்ந்த விளம்பரம் இது.

யாராவது கட்டிப்புடிங்க பாஸ்
சர்ப் எக்ஸெல் விளம்பரத்தில் குட்டீஸ்கள் செய்யும் குறும்பு அப்படியே அள்ளிக்கொண்டு போகும். கிரிக்கெட் விளையாட்டில் சேர்த்துக்கொள்ளாமல் சேற்றில் தள்ளிவிடும் பையனைப்பார்த்து கட்டிப்புடிங்கப்பா! என்று கூப்பிட்டு எல்லோரையும் விரட்டி அடிப்பானே!, இந்த ஆண்டில் கண் இமைக்காமல் பார்க்கத்தூண்டிய விளம்பரம் அது.

அம்மாவின் கைப்பக்குவம் ஆசிர்வாத்!
திருமணத்திற்கு முன்பு வரை அம்மா பிள்ளைகளாக இருக்கும் கணவர்களை சட்டென்று மாற்றுவது மனைவியின் கைப்பக்குவம்தான். இதை உணர்த்தும் வகையில் புது தாலியோடு சினேகாவும், புது மாப்பிள்ளை ஜோரில் பிரசன்னாவும் நடித்த மசாலாப்பொடி விளம்பரம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.


Click it and Unblock the Notifications











