கொட்டும் மழையில் ரஹ்மானின் இசை மழை... உற்சாகமாக ரசித்த ரசிகர்கள்
பொங்கல் பண்டிகை விடுமுறை நாளில் மூன்று நாட்களும் இசை இரவாக கழிந்தது. ஏ. ஆர். ரஹ்மானில் இன்னிசை விருந்தை நேரடியாக ரசிக்க முடியாதவர்களுக்காக ஜெயா டிவி மூன்று நாட்களும் ஒளிபரப்பி அந்த குறையை தீர்த்து வைத்தது.
உலகத்தரத்திலான ஒலி ஒளி அமைப்பு.... பிரம்மாண்டமான மேடை... கலர்ஃபுல்லான பாடகர்கள் என களை கட்டியது எ.ஆர். ரஹ்மானின் லைவ் கான்செர்ட்.
பத்தாண்டுகளுக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் சொந்த மண்ணில் நிகழ்த்தப்போகும் இசைக் கச்சேரி என்பதால் ரசிகர்களுக்கு ஒரு வித ஆர்வமும் எதிர்பார்ப்பும் இருந்தது என்றே சொல்லலாம்.

வரவேற்ற மழை
‘தாய் மண்ணே வணக்கம்' என்று தனது கான்செர்ட்டிற்கு பெயர் வைத்திருந்தார் ஏ.ஆர். ரஹ்மான். அவரது அதிரடி இசை மழையை ரசிக்க வான் மழையே இறங்கிவந்து ரசிகர்களை நனைத்தது. ஆனாலும் அசரவில்லை. குடை பிடித்தாவது இசையைக் கேட்போம் என்று கொஞ்சம் கூட நகராமல் ரசித்தனர் ரசிகர்கள்.

வல்லினமும்…. மெல்லினமும்…
ரஹ்மானின் இசையில் இரைச்சல் அதிகம் என்பார்கள். டேக் இட் ஈஸி ஊர்வசி என தன்னால் அதிரடியாக அடிக்கவும் முடியும்... நிலா காய்கிறது நேரம் தேய்கிறது என மென்மையாக கொடுக்கவும் முடியும் என்று ரசிகர்களுக்கு உணர்த்தினார் ரஹ்மான்.

உற்சாக குரல் எழுப்பிய ரசிகர்கள்
ரஹ்மானின் இசைக்கு சாமான்யர்கள் முதல் பிரபலங்கள் வரை பெருவாரியான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதை இந்த இசை நிகழ்ச்சியில் காண முடிந்தது. ஒவ்வொரு பாடலுக்கும் எல்லோருமே உற்சாக குரல் எழுப்பினர்.

லேசர் காட்சிக்கு வரவேற்பு
பாடலுக்கு ஏற்ப நடனம் அமைந்திருந்தது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றது. எந்திரன் பாடலுக்கு அமைத்திருந்த லேசர் நடனம்... நெஞ்சினிலே பாடலுக்கு கதகளி கலைஞர்களின் நடனம் என ரசிகர்களின் செவிகளுக்கு மட்டுமல்லாது கண்களுக்கும் தனி விருந்து படைத்துவிட்டார் ரஹ்மான்.

கவர்ச்சி கொஞ்சம் அதிகமோ?....
சென்னை லைவ் கான்செர்ட்களில் எப்போதுமே கவர்ச்சியான உடைகளை அணிந்து நடனமாடுவதில்லை. ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் கொஞ்சம் அதிகமாக இருந்தது. சித்ரா தவிர சின்மயி உள்ளிட்ட பாடகிகளும் கூட கிளாமரான உடையில் வந்து பாடினார்கள். இதை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.

உயிரை உருக்கிய ரஹ்மான்
ரஹ்மானின் இசைக்கு மட்டுமல்ல அவரது குரலுக்கும் தனி சக்தி உண்டு. ஊர்வசி ஊர்வசி தொடங்கி, முஸ்தபா முஸ்தாபா..., அரபிக்கடலோரம், ஜெய்ஹோ...., வந்தேமாதரம்.... என ஒவ்வொன்றாக பாட பாட உற்சாகத்தில் மிதந்தனர் ரசிகர்கள். மூன்று நாட்களும் இரவு நேரத்தில் இன்னிசை விருந்து உண்ட மகிழ்ச்சி ஏற்பட்டது. மிஸ் பண்ணினவங்க கண்டிப்பா மறு ஒளிபரப்பு போடுவாங்க அப்ப தவறாம பாருங்களேன்.


Click it and Unblock the Notifications











