மகளே போனபிறகு வாழ விருப்பமில்லை… கதறிய வினோதினியின் பெற்றோர்
சட்டங்களும், தண்டனைகளும் அதிகமானால் குற்றங்கள் குறையும் என்பார்கள். ஆனால் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.
மருத்துவ மாணவி பாலியல் சம்பவத்திற்குப் பின்னர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான வன்முறை புகார்கள் அதிகமாகத்தான் பதிவாகியுள்ளது. இதேபோல் காதலிக்க மறுத்த குற்றத்திற்காக தமிழ்நாட்டில் இரண்டு இளம் பெண்கள் ஆசிட் வீச்சுக்கு பலியாகி உயிரிழந்துள்ளனர்.
பெண்கள் தொடர்பான பாதுகாப்பு குறித்தும், ஆசிட் வீச்சுக்கு ஆளான குடும்பங்களைப் பற்றியும் விஜய் டிவியின் என் தேசம் என் மக்கள் நிகழ்ச்சியில் பேசப்பட்டது.

வினோதினியின் வாழ்க்கை
காதலிக்க மறுத்த குற்றத்திற்காக அழகான முகத்தில் ஆசிட் வீசப்பட்டு முகம் சிதைந்து, பார்வையிழந்து, கடைசியில் வேதனையோடு உயிரைவிட்ட இளம்பெண் காரைக்கால் வினோதினி. அந்தப் பெண்ணின் பெற்றோர் தங்கள் மகள் பட்ட துயரங்களை வேதனையோடு பதிவு செய்தனர்.

வித்யாவின் சோகக்கதை
வினோதினி விசயம் முடியும் முன்பாக சென்னையில் வித்யாவிற்கு இதுபோல ஒரு கொடூரம் நேர்ந்தது. வித்யாவின் தாயார் பெயரும் சரஸ்வதிதான். வித்யா நன்றாக படிக்கக் கூடிய பெண். ப்ளஸ் 2 வில் ஆயிரத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தும் மேற்கொண்டு படிக்காமல் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு போனாள். அங்கே காதலித்த ஒருவனின் தொந்தரவு தாங்காமல் தவிர்க்கவே ஆசிட் வீச்சுக்கு ஆளாகி இறந்து போனாள்.

கதறிய அண்ணன்…
பிறந்தது முதலே வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் தந்தையை இழந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த வித்யா செய்த பாவம் என்ன என்பதுதான் தெரியவில்லை. காதலித்தவனை திருமணம் செய்ய நிச்சயம் செய்த பின்னர் ஆசிட் வீசியிருக்கிறான். ஆசிட் வீச்சில் உடல் முழுவதும் கருகிவிட்டது... முகம் மட்டும்தான் பாதிக்கவில்லை. ஆனாலும் ரணப்பட்டுதான் உயிரை விட்டுள்ளாள். அந்த சூழ்நிலையிலும் வித்யாவின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.

பெண்கள் வாழ அச்சப்படும் நாடு
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான இந்த ஆசிட் வீச்சு சம்பவங்கள் ஆங்காங்கே நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. உலகில் பெண்கள் வாழ அச்சப்படும் நாடுகள் இந்தியாவிற்கு 4 வது இடம் என்கிறது ஒரு புள்ளிவிபரம்.

தினசரி ஒரு சம்பவம்
ஆசிட் வீச்சுக்கு ஆளாகும் சம்பவங்கள் இப்போது அதிகரித்து வருகிறது என்கின்றனர் சிகிச்சை அளித்த மருத்துவர்கள். மாதம் ஒரு ஆசிட் வீச்சு சம்பவம் வருகிறது என்று கூறி அதிர்ச்சியளித்தனர். மருத்துவர்கள் முடிந்தவரை நன்றாக செய்கிறோம். ஆனாலும் சிலரை மட்டுமே காப்பாற்ற முடிகிறது என்றனர்.

அவசர உதவி எண் அவசியம்
எங்களுக்கு உள்ள பிரச்சினைகளை வீட்டில் சொன்னாலே பயப்படும் பெற்றோர் பிரச்சினையின் தீவிரத்தை கண்டு கொள்வதில்லை என்று ஆதங்கப்பட்டனர் நிகழ்ச்சியில் பேசிய பெண்கள். பெண்களின் பாதுகாப்பிற்காக தொடங்கப்பட்டுள்ள அவசர உதவி எண் 1098ற்கு அழைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினர் சமூக ஆர்வலர்கள்.

கட்டிய கணவனே ஆசிட் வீசிய சாந்தி.
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிட் வீச்சின் கொடுமையை அனுபவித்து வரும் சாந்தியும், அவரது மகள் காயத்ரியும் தங்களின் வேதனைகளை பகிர்ந்து கொண்டனர். எத்தனையோ கொடுமைகளை செய்தும் கடைசியில் சந்தேகப்பட்டு ஆசிட் ஊற்றி முகத்தை சிதைத்துள்ளான் சாந்தியின் கணவன். மூன்றரை வயது குழந்தை காயத்ரியும் இதில் பாதிக்கப்பட்டு இப்போதுதான் மீண்டிருக்கின்றனர்.

சட்டம் கடமையை செய்கிறதா?
குற்றவாளிகளுக்கு ஆசிட் எளிதாக கிடைப்பதை தடை செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர் சமூக ஆர்வலர்கள். 30 பேருக்குதான் தண்டனை கிடைக்கிறது. 70 சதவிகிதம் பேர் தப்பிவிடுகின்றனர் என்று கூறி அதிர்ச்சியளித்தார் ஒரு ஆய்வாளர்.
சட்டம் போட்டால் மட்டும் இந்த சம்பவங்கள் குறைந்து விடாது. ஒரு சமூக மாற்றம் நிகழவேண்டும். என்றார் இயக்குநர் பாலாஜி சக்திவேல் போலீசார் அதை சரியாக கண்டு கொள்வதில்லை. தன்னுடைய வழக்கு எண் படத்திலும் ஆசிட் வீச்சு சம்பவத்தை காவல்துறை அதிகாரி எப்படி அதை கையாண்டார் என்பதைத்தான் பதிவு செய்ததாக கூறினார்.

ஆசிட் வீச்சு அதிகம்
2002 பங்களாதேஷ் உலக அளவில் 500 பெண்கள் மீது ஆசிட் வீசப்பட்டது. அங்கு சட்டம் தண்டனை அதிகமாக்கப்பட்டது. 2011ல் 92 ஆக குறைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி வலி நிறைந்தது. பாரத்தை ஏற்படுத்திவிட்டது. சிலரையாவது மாற்றவேண்டும் என்று கூறி நிறைவு செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications











