ஓவர் வன்முறை.. படங்களைப்போல சீரியல்களுக்கும் தணிக்கைமுறையைக் கொண்டுவர கேரள அரசு தீவிரம்!
திருவனந்தபுரம்: படங்களைப் போல சீரியல்களுக்கும் தணிக்கை முறையைக் கொண்டுவர, கேரளா அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திரைப்படங்களுக்கு இணையாக சீரியல்களும் பொது மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்தந்த மொழிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களைப் போலவே மொழிமாற்றம் செய்யப்படும் சீரியல்களும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
எனினும் சமீப காலமாக சீரியல்களில் ஆணவக் கொலை, கள்ளத் தொடர்பு, கொலை போன்ற காட்சிகளுக்கு இயக்குநர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

24 மணி நேரம்
எல்லா வீடுகளிலும் வரவேற்பறையில் இருக்கும் டிவி 24 மணி நேரமும் ஓடிக் கொண்டேயிருக்கிறது. விருந்தினர்கள், உறவினர்கள் யாராவது வீட்டிற்கு வந்தால் கூட டிவியில் ஒரு கண்ணை வைத்தபடி தான் அவர்களிடம் நலம் விசாரிக்கின்றனர்.

குடும்பத்தை
பெரும்பாலான சீரியல்களில் அடுத்தவர் கணவன்/மனைவியை எப்படி அதிகரிப்பது, கள்ளத் தொடர்பு, கொலை போன்றவற்றை விலாவரியாக காட்சிகள் வைத்து விளக்குகின்றனர். அதிலும் குடும்பத்தைப் பிரிப்பது, கெடுப்பது போன்றவைதான் அதிகம். இதன் மூலம் இவற்றைப் பார்ப்பவர்களின் மனதில் இவை கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சைக் கலந்து விடுகின்றன.

கேரளா
இந்நிலையில் சீரியல்களுக்கு தணிக்கை வேண்டும் என்று கேரளாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பலவும் அரசிடம் புகார் அளித்தது. மேலும் இது தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் சீரியல்களுக்கும் தணிக்கை வேண்டும் என்று நீதிபதிகள் வலியுறுத்தினர்.

தணிக்கை
இதற்கு கேரளா அரசும் சம்மதித்து திரைப்படங்களுக்கு இருப்பது போல சீரியல்களுக்கும் தணிக்கையைக் கொண்டுவர முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும், விரைவில் சீரியல்களுக்கு தணிக்கைக் குழுவினர் நியமிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சீரியல்களுக்கும் இதுபோல தணிக்கை முறை வந்தால் நன்றாக இருக்கும்...சம்பந்தப்பட்டவர்கள் செய்வார்களா?


Click it and Unblock the Notifications











