மை டியர் பூதம் தொடங்கி வள்ளி வரை வியட்நாம் வீடு சுந்தரத்தின் சீரியல் பயணம்
சென்னை: வள்ளி டிவி சீரியலில் லேடிடான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்து வந்த வியட்நாம் வீடு சுந்தரம் உடல்நலக்குறைவினால் இன்று மரணமடைந்தார். 86 வயதாகும் வியட்நாம் வீடு சுந்தரம், சினிமா இயக்குநராகவும், திரைக்கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் அறியப்பட்டவர்.
வியட்நாம் வீடு சுந்தரம் மிகச்சிறந்த டிவி சீரியல் நடிகர் என்பது சின்னத்திரை ரசிகர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை. கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாக சீரியலில் நடித்து வந்த வியட்நாம் வீடு சுந்தரம் டப்பிங் கலைஞராகவும் பணிபுரிந்துள்ளார்.
சன் டிவியில் மை டியர் பூதம் என்ற சீரியலில் அறிமுகமான வியட்நாம் வீடு சுந்தரம் மெட்டி ஒலியில் சின்னத்திரை ரசிகர்களிடையே நன்கு அறிமுகமானார். இப்போது வள்ளி தொடரில் டான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்துள்ளார்.

வியட்நாம் வீடு சுந்தரம்
நடிப்புத்துறைக்கு வருமுன் ஒய்.ஜி.பார்த்தசாரதி, அவரது மனைவி மற்றும் பட்டு ஆகியோரால் நடத்தப்பட்ட அமெச்சூர் நாடகக்குழுவில் சர்வீஸ் பாயாக நுழைந்து தனது ஆர்வத்தால் எழுத்தாளர் ஆனார்.

வியட்நாம் வீடு
இவர் சிவாஜிகணேசனுக்காக 1970 ஆம் ஆண்டு கதை, வசனம் எழுதி இயக்கிய வியட்நாம் வீடு படம் இவருக்குப் பெரும் பெயரைப் பெற்றுக் கொடுத்தது. அதன்பின் சுந்தரம் என்ற இயற்பெயருடன் வியட்நாம் வீடு இணைந்துகொண்டது.
தேவி ஸ்ரீ கருமாரியம்மன் (1974), வியட்நாம் வீடு(1970), கௌரவம் (1973) போன்றவை இவர் இயக்கியவை. கௌரவம் படத்தை சொந்தமாக தயாரித்தவர். ஞான ஒளி, ஞானப்பறவை, உள்ளிட்ட பல படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

மை டியர் பூதம்
தொலைக்காட்சி சேனல்களின் வருகைக்குப் பின்னர் டிவி சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். மை டியர் பூதம் டிவி சீரியல்களில் பூதமாக நடித்து குட்டிக்குழந்தைகளுக்கு அறிமுகமானார்.

சன் டிவி சீரியல்கள்
சன் தொலைக்காட்சியில் ஒலிபரப்பான மெட்டி ஒலி, இராஜ இராஜேஸ்வரி, பொண்டாட்டித் தேவை, பைரவி, அத்திப்பூக்கள் பிள்ளை நிலா, வள்ளி என 18 டிவி சீரியல்களில் நடித்துள்ளார்.

வள்ளி சீரியல்
வள்ளி டிவி சீரியலில் லேடி டான் இந்திரசேனாவின் மாமாவாக நடித்துள்ள வியட்நாம் வீடு சுந்தரம், எளிமையான பேச்சு, நடிப்பினால் ரசிகர்களைக் கவர்ந்தார். வயதானாலும் அவரது நடிப்பு, வசன உச்சரிப்புக்கு ஏற்ற குரல்வளம் மாறவில்லை.

பின்னணி குரல்
கதை, வசனம், இயக்கம், நடிப்பு பின்னணிக் குரல் கலைஞராகவும் தனது பன்முகத்தன்மையை பதிவு செய்தவர் வியட்நாம் வீடு சுந்தரம். இவர், கடந்த சில நாட்களாகவே, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இன்று காலை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு, சக கலைஞர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











