குடும்பத்திற்காக மெழுகாய் உருகும் பெண்கள்… 'நீயா நானாவில்' உருக்கம்!
ஒரு சில பெண்களுக்குத்தான் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி சலுகைகளும், சந்தோசங்களும் கிடைக்கும். பெற்றோர்களை இழந்த பெண்குழந்தைகள் உடன் பிறந்தவர்களை காக்க உழைக்கத் தொடங்கிவிடுவார்கள்.
அவர்களின் எண்ணங்களை, ஆசைகளை உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு குடும்பத்தைக்காக்க மெழுகாய் உருகி, சந்தனமாய் கரைந்து மணம் கொடுக்கும் மகளிரும் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர்.
பல 'அவள் ஒரு தொடர்கதை' கவிதாக்கள் இன்னமும் காலை நேரத்தில் அலுவலகத்திற்கு செல்லும் அவசரத்திலும், பனியன் தொழிற்சாலையில் பணிபுரிந்து கொண்டும் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டும் விடியலுக்காக காத்திருக்கின்றனர். அவர்களைப் பற்றியே இந்த வாரம் விஜய் டிவியின் நீயா? நானா? வில் விவாதிக்கப்பட்டது.

தலையில் விழுந்த குடும்ப பாரம்
ஒரு சில குடும்பங்களில் குடும்பத்தலைவரான அப்பா இறந்து போனதால் உடன் பிறந்தவர்களுக்காக வேலைக்கு போன சகோதரிகள் தங்களின் சோகத்தை, துயரங்களை தெரிவித்தனர்.

அம்மாவின் மரணம்
பெற்றோர்கள் இடையே ஏற்பட்ட சண்டையால் அம்மா விஷம் குடுத்து மனநலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்த கதையை சொன்னார் ஒரு இளம் பெண். அன்று முதல் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறினார். சகோதரியின் திருமணக் கடனை அடைக்க படிப்பை நிறுத்திவிட்டு வேலைக்கு போய்க் கொண்டிருப்பதை சொன்னார் மற்றொரு பெண்.

பூட்டி வைத்த ஆசைகள்
சாக்லேட் சாப்பிட வேண்டும், அழகான புடவைகளை உடுத்த வேண்டும், சினிமாவிற்குப் போகவேண்டும் என்ற சின்னச் சின்ன ஆசைகளைக் கூட மனதிற்குள் போட்டு பூட்டி வைத்துவிட்டு குடும்பத்திற்காக உழைக்கும் சகோதரிகளும் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர்.

கணவரின் சுமையை சுமந்தவர்கள்
பிறந்த வீட்டில்தான் சோகம் என்றால் ஒரு சில பெண்களுக்கு திருமணமாகிப் போன வீட்டிலும் சோகமே தொடர்கதையாகிப் போனது. மணமாகி கணவர் உடல்நலமில்லாமல் போகவே அவரையும், அவரது குடுத்பத்தினரையும் காக்க வேலைக்குப் போன கதையை சொன்னார்கள். அதேபோல் மூன்று குழந்தைகள் பிறந்த பின்னர் மாரடைப்பு நோயினால் கணவர் மரணிக்கவே குடும்பத்திற்காகவும், பிள்ளைகளுக்காகவும் போராடிவருவதைச் சொன்னார் ஒரு தாய்.

நீயா நானா இருக்கிறது
இந்த விவாத நிகழ்ச்சியில் சோகமான பேச்சுக்களுக்கு இடையே மனதை நெகிழச் செய்யும் நிகழ்வுகளும் நடந்தேறின. திருமணம் செய்துக் கொள்ளப்போவதில்லை என்று கூறிய இளம் பெண்ணிற்கு தன்னுடைய நகை, பொருட்களைக் கொடுத்து திருமணம் நடத்தி வைப்பதாக கூறினார் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண். அந்தப் பெண் திருமணத்திற்கு சம்மதம் சொன்னால் நீயா நானா குழு திருமணத்தினை முன்நின்று நடத்தும் என்று உறுதியளித்தார் ஒருங்கிணைப்பாளர் கோபிநாத்.

50 சதவிகித பெண்கள்
இன்றைக்கும் இந்தியாவில் 50 சதவிகிதப் பெண்கள் குடும்ப பாரத்தை சுமப்பவர்களாகத்தான் இருக்கின்றனர் என்றார் நிகழ்ச்சிக்கு வந்த சிறப்பு விருந்தினர். அவர்கள் கண்ணீரோடு பாரத்தை சுமக்காமல், உற்சாகத்தோடு, எதற்கும் கலங்காமல் பொறுப்பினை சுமக்கவேண்டும் என்றனர் சிறப்பு விருந்தினர்கள்.

சுயநலமும் அவசியம்
நிகழ்ச்சியில் பேசிய 20 பெண்கள் மட்டுமல்ல பல பெண்கள் வெளி உலகத்திற்குத் தெரியாமல் திருமணம் செய்வதைக்கூட மறுத்துவிட்டு குடும்பத்திற்காக உழைக்கின்றனர். அவர்கள் தங்களுக்கு என்று 10 சதவிகிதம் சுயநலத்தோடு வாழப் பழகவேண்டும். இல்லாவிட்டால் கோபமும், வெறுமையும்தான் மிஞ்சும் என்று அறிவுறுத்தினார் ஒரு சிறப்பு விருந்தினர்.

பெண்கள் மட்டுமல்ல
அவள் ஒரு தொடர்களை கவிதாக்கள் மட்டுமல்ல ஆண்கள் பலரும் திருமண வயதைத் தாண்டியும் மணம் செய்து கொள்ளாமல் குடும்பத்திற்காக உழைப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். சென்னை திருவல்லிக்கேணி மேன்சனில் பலரது கதைகள் இன்றைக்கும் புதைந்து போய் உள்ளது அவர்களையும் கொஞ்சம் பேச வைக்கலாமே மிஸ்டர் கோபிநாத்.


Click it and Unblock the Notifications











