Actor Ramki: மாசாணி அம்மன் படம் பார்க்க போனால்.. அடடே.. நம்ம ராம்கி!
சென்னை: சன் டிவியில் தினம் மதிய நேர படத்தில் இன்று மாசாணி அம்மன் படம் ஒளிபரப்பாகியது. அது பழைய படம்... புதுசா சொல்ல வந்துட்டீங்கன்னு கேட்க வரீங்களா? அட அதுல நம்மைக் கவர்ந்தவர் ராம்கிப்பா.. ராம்கியை பார்த்துட்டு அவர் பற்றி பேசலேன்னா எப்படி?
சின்ன பூவே மெல்ல பேசு படத்தின் மூலம் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமான ராம்கி, அந்த படம் ரிலீஸானாவுடன் இளசுகளை அட போட வைத்தார். என்னடா கார்த்திக் மாதிரி படு ஸ்மார்ட்டா மறுபடியும் ஒரு பையன் தமிழ் சினிமாவுக்கு வந்திருக்கான் என்று.
சின்ன பூவே மெல்ல பேசு படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் இளைய திலகம் பிரபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

எஸ்.ஏ.ராஜ்குமார் இசை
ராபர்ட் ராஜசேகர் இயக்கத்தில், எஸ்.ஏ.ராஜ்குமார் முதல் முதலாக இசை அமைப்பாளராக அறிமுகமான படம். சின்னப்பூவே மெல்லப்பேசு, செந்தூரப்பூவே இங்கு தேன் சிந்த வாவா..ஏ புள்ள கருப்பாயி உள்ள வந்து படு தாயின்னு அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட்.. இந்த படம் இசை அமைப்பாளருக்கு மட்டுமல்ல, ராமகிருஷ்ணன் என்கிற பெயரை ராம்கியாக சுருக்கி நடித்த ராம்கிக்கும் பெரும் புகழ் கிடைத்தது.

ராம்கி அழகன்
ராம்கி அழகன் என்று அனைவராலும் புகழப்பட்டார். இவரின் தலை முடி ஸ்டைல் இளம் பெண்களையும், ஆண்களையும் கூட கவர்ந்து ரசிக்க வைத்தது. ஆனால், அதே மாதிரி ஹேர்ஸ்டைலுக்கு எவ்வளவுதான் முயற்சித்தாலும் முடியாதபடி, தலை முடியும் ராம்கிக்கு மட்டுமே உரித்தானதாக இருந்தது. இவருடன் இணைந்து பிரபு நடித்ததும் இவருக்கு பிளஸாக அமைந்தது என்று சொல்லலாம்.

இணைந்த கைகள் செந்தூர பூவே
அடுத்தடுத்து ராம்கி பல படங்களில் நடிக்க ஆரம்பித்து இருந்தார்.நடிகை நிரோஷாவுடன் செந்தூரப்பூவே படத்தில் ஜோடி சேர்ந்து நடித்ததில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக ஒர்கவுட் ஆனதில்,இருவரும் அடுத்தடுத்து படங்களில் சேர்ந்து நடித்தனர். அப்போதே இருவரும் காதலில் விழுந்து, அதை சொல்லாமலே மறைத்து அவரவர் வேலையை பார்த்து வந்தனர். ராம்கிக்கு பெண் ரசிகைகள் இருந்தாலும், ஏனோ அதைத் தக்க வைத்துக் கொள்ள எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

நிரோஷா ராம்கி
திரை உலகம், பத்திரிகை உலகம் என்று எல்லாரும் இவர்கள் தங்களது திருமண நாளை எப்போது அறிவிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பில் இருக்க, இருவரும் அதற்குள் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்து இருந்தனர். அதனால், இவர்களைப் பற்றிய கிசுகிசுக்கள் எதுவும் வெளியில் வர முடியாதபடி நிலைமை மாறிப்போனது. சத்தம் இல்லாமல் வாழ்ந்த இந்த தம்பதியர் அதே மாதிரியே சினிமாவிலிருந்து ஒதுங்கிக் கொண்டனர்.

மீண்டும் நிரோஷா
மனைவி நிரோஷா மட்டும் அக்காவின் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வந்தவர், பெரிய திரையிலும் நடிக்க ஆரம்பித்தார். குடும்பமாக செட்டிலாகிவிட்ட ராம்கியின் தோற்றம் அப்படியே இருக்க, மீண்டும் ராம்கி என்கிற டைட்டிலுடன் பல வருடங்களுக்குப் பிறகு மாசாணி அம்மன் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்தார்.எதிர்ப்பார்த்த அளவு படம் பெரிதாக ஓடவில்லை. என்றாலும்,வெங்கட் பிரபுவின் பிரியாணி உள்ளிட்ட சில படங்களில் நடித்த ராம்கிக்கு அப்படி சொல்லிக்கொள்ளும்படி வாய்ப்பு எதுவும் இல்லை.
என்ன சொன்னாலும், அஜீத் ஷாலினி, சூர்யா ஜோதிகா மாதிரி, சினிமா உலகத்துக்கு ஒரு உதாரண தம்பதியாக இன்று வரை நிரோஷாவும், ராம்கியும் வாழ்ந்து வருகிறார்கள். இதை நினைவு கூறலாமே!


Click it and Unblock the Notifications











