ஆஸ்கரே கமலின் காலுக்கு கீழே வந்து நில்.. ரோபோ சங்கர் போட்ட அலப்பறைகள் தெரியுமா?.. வேற லெவல்
சென்னை: நடிகை ரோபோ சங்கர் சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உயிரிழப்புக்கு கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், தனுஷ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நேரில் வந்து அஞ்சலி செலுத்தியது. ரோபோ சங்கர் அடிப்படையில் கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகர் என்பது அனைவருமே அறிந்ததுதான். இந்நிலையில் கமலுக்காக அவர் செய்தது குறித்து பார்க்கலாம்
ரோபோ சங்கர் ஆரம்ப காலத்தில் மேடை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி அனைவரிடமும் பெயர் பெற்றவர். தொடர்ந்து சினிமாவில் நடிக்கும் ஆசை அவருக்கு இருந்தது. அதன் அடிப்படையில் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்த ஜூட் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் தோன்றியிருந்தார். அதற்குப் பிறகு அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. அவ்வப்போது ஸ்கிரீனில் தலை காண்பித்து வந்தார். இது ஒரு பக்கம் இருக்க சின்னத்திரையில் அவருக்கான வாய்ப்பு கிடைத்தது
சின்னத்திரையில் கலக்கிய ரோபோ சங்கர்: சின்னதத்திரையில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட ரோபோ சங்கர் தனது மிமிக்ரி, டைமிங் காமெடிகள் போன்றவற்றால் மேற்கொண்டு பிரபலமடைந்தார். ஒரு கட்டத்தில் விஜய் டிவியின் அசைக்க முடியாத தூணாகவே விளங்க ஆரம்பித்தார் ரோபோ சங்கர். அதனால் அவரை தேடி பல நிகழ்ச்சிகளும் வர தொடங்கின. அதுமட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் சென்று கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை வழக்கமாக வைத்திருந்தார்.

சினிமாவில் ஜொலித்த ரோபோ: நிலைமை இவ்வாறு இருக்க நடிகர் தனுஷ் மாரி படத்தில் முழுநேர நடிகராக ரோபோ சங்கரை அறிமுகப்படுத்தினார். அதனையடுத்து தொடர்ந்து சினிமாக்களில் பிஸியாக நடித்துவந்தார். விஸ்வாசம், வாயை மூடி பேசவும் என பல படங்களில் அவர் தனது திறமையை நிரூபித்து பிஸியான ஆர்ட்டிஸ்டாக விளங்க தொடங்கினார். சினிமாவில் பிஸியாக இருந்தாலும் சின்னத்திரையிலும் தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உயிரிழந்த ரோபோ சங்கர்: நிலைமை இப்படி இருக்க சில வருடங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டவர் சில நாட்களுக்கு முன்பு மீண்டும் உடல் நல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனளிக்காததால் பரிதாபமாக உயிரிழக்கவும் செய்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த தமிழ் திரைத்துறையையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோரெல்லாம் நேரில் வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
கமலின் தீவிர ரசிகர்: கமல்ஹாசனின் தீவிர ரசிகர் ரோபோ சங்கர். ஆரம்ப காலத்தில் இருந்தே கமலின் படங்களை ஒன்று விடாமல் முதல் நாள் முதல் காட்சியை பார்க்கும் வழக்கத்தை வைத்திருந்தவர். ஆளவந்தான் படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அதே போன்ற கெட்டப் போட்டு மதுரையில் அதகளப்படுத்தி பத்திரிகைகளில் இடம் பிடித்தார் ரோபோ சங்கர். அதேபோல் இன்னொரு படம் ரிலீஸின்போது, 'ஆஸ்கரே கமலின் காலுக்கு கீழே வந்து நில்' என்று போஸ்டர் அடித்து கவனம் ஈர்த்தவர்.
அதுமட்டுமின்றி திரைத்துறைக்கு வந்த பிறகு இந்தியன் 2 ரிலீஸ் ஆன சமயத்தில் கத்தாரில் ஒட்டுமொத்தமாக திரையரங்கில் இருக்கும் டிக்கெடுக்களை எடுத்து முதல் நாள் முதல் காட்சி பார்த்து தனது வெறித்தனமான அன்பை வெளிப்படுத்தியதை அனைவருமே ஆச்சரியமாக பார்த்தார்கள். அதிலும், புகையை தியேட்டர் முழுக்க உருவாக்கவும் செய்தாராம். முக்கியமாக கமலேகூட அந்த சம்பவத்துக்கு பிறகு சமீபத்தில் ரோபோ சங்கரின் முதுகில் அடித்து ஏன் இப்படி செய்தாய் என கேட்க; அதற்கு சங்கரோ நாங்கள் அப்படித்தான் செய்வோம் நீங்கள் ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.
நீங்கள் வேண்டுமென்றால் உலக நாயகன் என அழைக்க வேண்டாம் என சொல்லிக்கொள்ளுங்கள் நாங்கள் உங்களை விண்வெளி நாயகன் என்று கூறுவோம். உங்கள் படம் ஏதேனும் ரிலீஸ் ஆனால் இப்படித்தான் முதல் நாள் முதல் காட்சியை செய்வோம் என்று கமலிடமே கூறினாராம். இப்படி வெறித்தனமான அன்பை கமல் மீது வைத்திருந்தவர் ரோபோ சங்கர். இதனை அவரே ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











