மன்னா டேக்கு தாதா சாகேப் பால்கே விருது!

ஐந்து நீதிபதிகள் கொண்ட சிறப்பு கமிட்டி மன்னா டேவின் பெயரை இந்த விருதுக்கு இறுதி செய்ததாக
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் இன்று அறிவித்தது.
90 வயதாகும் மன்னா டேயின் இயற்பெயர் பிரபோத் சந்திர டே. முகமத் ரஃபி, கிஷோர் குமார் மற்றும் முகேஷ் போன்ற காலத்தால் அழியாத இசை மேதைகளின் வரிசையில் வைத்துப் பார்க்கப்படுபவர்.
நாற்பதுகளில் பிரபல இசை மேதை எஸ்.டி. பர்மனின் உதவியாளராக வாழ்க்கையைத் துவக்கியவர் மன்னா. 1943ல் 'தமன்னா' எனும் படத்தில் சுரையாவுடன் பாடிய டூயட்தான் இவரது முதல்பாடல்.
தொடர்ந்து கால் நூற்றாண்டுகளுக்கும் மேல் பாலிவுட்டில் கோலோச்சினார். இதுவரை 3,500 பாடல்களுக்கும் மேல் பாடியுள்ளார்.
1969 மற்றும் 1971ம் ஆண்டுகளில் இந்திய அரசின் சிறந்த பின்னணிப் பாடகர் விருது பெற்றவர் மன்னா டே. வங்காள மொழியிலும் பல புகழ்பெற்ற பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்தியாவின் எவர்கிரீன் ஆக்ஷன் படமான ஷோலேயில் 'ஏ தோஸ்தி...' பாடலை கிஷோர் குமாருடன் இணைந்து பாடியவர் மன்னாடே தான்.
'படோஸான்' படத்தில் ஆர்.டி. பர்மன் இசையில் இவர் பாடிய 'ஏக் சதுர் நார்...' மிகப் புகழ்பெற்ற ஒன்று.
சீதா அவுர் கீதா, சத்யம் சிவம் சுந்தரம், மேரா நாம் ஜோக்கர், அமர் அக்பர் ஆண்டனி, லாவாரிஸ் போன்ற ஹிட் படங்களிலெல்லாம் இடம் பெற்றது இவர் குரல்.
மலையாளப் பெண்ணான சுலோச்சனாவை திருமணம் செய்து கொண்டார். செம்மீன் என்ற மலையாளப் படத்திலும் பாடியுள்ளார்.
50 ஆண்டுகளை பாலிவுட்டில் கழித்த இந்த இசை மேதை, இப்போது மிச்சமிருக்கும் நாட்களை அமைதியான சூழலில் கழிக்க பெங்களூரில் குடியேறிவிட்டவர். அங்கு கல்யாண் நகரில் அமைதியான சூழலில் வசிக்கிறார்.
அடுத்த மாதம் 21ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் அவருக்கு இந்த விருதை வழங்குவார்.
மன்னா டேக்கு நமது மனமார்ந்த வாழ்த்துக்கள்!


Click it and Unblock the Notifications











