தேசிய விருது அறிவிக்க நீதிமன்றம் தடை
தேசிய திரைப்பட விருது முடிவுகளை அறிவிக்க டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.கடந்த 2005ம் ஆண்டுக்கான தேசிய அளவில் சிறந்த திரைப்படங்கள், கலைஞர்களுக்கான விருதுகளைத் தேர்வு செய்ய தேர்வுக் குழு அமைக்கப்பட்டது. விருதுகள் முடிவு செய்யப்பட்டு கடந்த 12ம் தேதி அறிவிக்கப்படுவதாக இருந்தது.
இந்நிலையில் விருதுகளை அறிவிப்பதற்கு தடை கோரி தேர்வு குழு உறுப்பினர்களில் ஒருவரான ஷியாமலி பானர்ஜி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
அந்த மனுவில், பிற மொழிப் படங்களின் கருத்தை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட இந்தியப் படங்களுக்கு விருது வழங்கக் கூடாது என்பது விதி.
இந்தியில் தயாரிக்கப்பட்ட பிளாக் படம், தி மிராக்கிள் ஆப் ஒர்க்கர் என்ற ஆங்கில படத்தின் கதையை சார்ந்தது. எனவே இந்த படத்திற்கு விருது அளிக்க கூடாது.
மேலும் சிறந்த சிறப்பு எபெக்ட்டுக்காக அன்னியன் படத்தையும், சிறந்த திரைக் கதைக்காக அபஹரன் படத்தையும், சிறந்த இயக்குநராக பர்சானியா படத்தின் இயக்குனரையும் தேர்வு செய்திரப்பதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கைலாஷ் காம்பீர், நீதிமன்ற உத்தரவின்றி 2005ம் ஆண்டு தேசிய சினிமா பட விருதுகளை அறிவிக்கக்கூடாது என உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை அமைச்சகம், வருகிற ஜூலை 26ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு ஜூலை 26ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











