பாலு மகேந்திரா... விருதுகளின் நாயகன்
சென்னை: தனது திரையுலகப் பயணத்தை ஒரு ஒளிப்பதிவாளராக 1972-ம் ஆண்டு ஆரம்பித்த பாலு மகேந்திரா, 42 ஆண்டு காலம் திரைத்துறையில் பணியாற்றியுள்ளார்.
இந்த காலகட்டத்தில் அவர் பெற்ற விருதுகளும் பாராட்டுகளும் ஏராளம். அவை அனைத்துமே தமிழ் சினிமாவுக்கு மகுடம் சூட்டுபவையாக அமைந்தன.
அவர் இதுவரை மத்திய, மாநில அரசுகள் மற்றும் பிலிம்பேர் விருதுகளை 13 முறை வென்றிருக்கிறார்.

தேசிய விருதுகள்
முதல் படமான கோகிலா படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை (கறுப்பு வெள்ளை) 1978-ல் வென்றார். பின்னர் 1980-ல் தனது மூன்றாம் பிறை படத்துக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான (வண்ணம்) தேசிய விருதினை வென்றார்.

மூன்று சிறந்த படத்துக்கான விருதுகள்
சிறந்த பிராந்திய மொழி படங்களுக்கான விருதுகளை மூன்று முறை வென்றுள்ளார் பாலு மகேந்திரா. 1988-ம் ஆண்டு வீடு படத்துக்காகவும், 1990-ல் சந்தியா ராகம் படத்துக்காகவும், 1992-ல் வண்ண வண்ணப் பூக்களுக்காகவும் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பிலிம்பேர் விருதுகள்
மூன்று முறை அவர் பிலிம்பேர் தெற்கு விருதுகளைப் பெற்றுள்ளார். மூன்றாம் பிறை, வீடு, மலையாளத்தில் வெளியான ஓளங்கள் போன்ற படங்களுக்காக அவர் சிறந்த இயக்குநருக்கான பிலிம்பேர் விருதுகளை வென்றுள்ளார்.

கர்நாடக அரசு விருது
1977-ம் ஆண்டு கோகிலா படத்துக்காக சிறந்த திரைக்கதைக்கான கர்நாடக அரசின் விருது பாலு மகேந்திராவுக்கு வழங்கப்பட்டது.

கேரள விருதுகள்
நெல்லு என்ற படத்துக்கு ஒளிப்பதிவு செய்ததற்காக 1974-ம் ஆண்டு கேரள அரசின் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதினை வென்றார் பாலு மகேந்திரா. 1975-ம் ஆண்டு சுவண்ண சந்தியாக்கள், பிரயாணம் ஆகிய படங்களுக்காக சிறந்த ஒளிப்பதிவாளர் விருதுகளை வென்றார்.

நந்தி விருதுகள்
ஆந்திர அரசின் நந்தி விருதுகளை இரு முறை வென்றுள்ளார் பாலு மகேந்திரா. 1978-ல் வெளியான மணவூரி பாண்டவலு படத்துக்காகவும், 1982-ல் வெளியான நிரீக்ஷனா படத்துக்காகவும் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்றார்.

தமிழக அரசு விருதுகள்
தமிழக அரசின் மூன்று விருதுகளை அவரது மூன்றாம் பிறை படம் வென்றது. சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த பாடகர், சிறந்த நடிகை ஆகிய 5 பிரிவுகளில் அந்தப் படம் விருதுகளை வென்றது.


Click it and Unblock the Notifications











