5 வது முறை தேசிய விருது வென்றார் இளையராஜா... தாரை தப்பட்டைக்காக விருது!
இசைஞானி இளையராஜா 5வது முறையாக தேசிய விருதினைப் பெருகிறார்.
தாரை தப்பட்டை படத்தின் சிறந்த பின்னணி இசைக்காக அவருக்கு இந்த முறை தேசியவிருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தாரை தப்பட்டை படம் இளையராஜாவின் ஆயிரமாவது படமாகும். திரையுலக வரலாற்றில் ஒரு தனி மனிதன் இத்தனைப் படங்களுக்கு இதுவரை இசையமைத்ததில்லை. அந்த சாதனையை இளையராஜா நிகழ்த்தியிருக்கிறார்.

தாரை தப்பட்டை படம் வணிக ரீதியில் எப்படி ஓடியிருந்தாலும் அந்தப் படத்தின் சிறப்பு அம்சமாக இருந்தது இளையராஜாவின் இசைதான்.
பின்னணி இசையும் பாடல்களும் மெய்சிலிர்க்க வைத்தன. அதிலும் அந்த க்ளைமாக்ஸ் இசையில் ருத்ர தாண்டவத்தை கண்முன் காட்டும் ராஜாவின் இசை.
இந்த இசைக்குத்தான் இந்த முறை சிறந்த பின்னணி இசைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே நான்கு முறை தேசிய விருதுகளை வென்றவர் இளையராஜா.
சலங்கை ஒலி, சிந்து பைரவி, ருத்ர வீணை படங்களுக்காக சிறந்த இசையமைப்பாளர் விருதினை அவர் பெற்றார். பழஸிராஜா படத்துக்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றார்.
இப்போது 5வது முறையாக தாரை தப்பட்டை படத்துக்கு சிறந்த பின்னணி இசைக்கான விருதினைப் பெற்றுள்ளார்.


Click it and Unblock the Notifications











