கிராமி விருதுகள் விழாவில் அஞ்சலி செலுத்தப்படாத லதா மங்கேஷ்கர்... ரசிகர்கள் கோபம்!
லாஸ் வேகாஸ் : இசைக் கலைஞர்களை கௌரவிக்கும்வகையில் ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டும் இந்த விழா லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய மகனுடன் கலந்து கொண்டார்.

கிராமி விருதுகள் 2022
இசைக் கலைஞர்கள், இசையமைப்பாளர்கள் மற்றும் ஆல்பம் இசைப் பாடகர்கள் உள்ளிட்டவர்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு ஆண்டுதோறும் கிராமி விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகள் 86 பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான கலைஞர்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இசைப்புயல்
இந்த நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் வேகாசில் நடைபெற்றது. இதில் இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தனது மகன் அமீன் ரஹ்மானுடன் கலந்து கொண்டார். அவர் வெளியிட்ட செல்பிக்கள் வைரலாகின. இவர் முன்னதாக 2 முறை இந்த விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஞ்சலி செலுத்தப்படாத லதா மங்கேஷ்கர்
இந்நிலையில் சமீபத்தில் மறைந்த இந்திய நைட்டிங்கேல் லதா மங்கேஷ்கருக்கு இந்த விருது வழங்கும் விழாவில் அஞ்சலி செலுத்தப்படாதது இந்திய ரசிகர்களை கோபம் கொள்ள செய்துள்ளது. முன்னதாக ஆஸ்கர் விருது வழங்கும் விழாவிலும் இவருக்கு அஞ்சலி செலுத்தப்படாத நிலையில் தற்போது கிராமி விருதுகள் விழாவிலும் அவருக்கு அஞ்சலி செலுத்தப்படவில்லை.

கிராமி வெப்சைட்டில் லதா மங்கேஷ்கர்
பப்பி லகரி மற்றும் லதா மங்கேஷ்கரின் பெயர்கள் கிராமி வெப்சைட்டில் பதிவிடப்பட்டுள்ளது. ஆனால் நிகழ்ச்சியில் அவர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. ஆனால் மறைந்த பிராட்வே இசையமைப்பாளர் ஸ்டீபன் சொன்தேய்ம், டெய்லர் ஹாக்கின்ஸ் மற்றும் டாம் பார்க்கர் ஆகியோரின் பெயர்கள் நிகழ்ச்சியில் குறிப்பிடப்பட்டது.

ரசிகர்கள் ஆத்திரம்
முன்னதாக இர்பான் கான், பானு ஆதயா, சுஷாந்த் சிங் ராஜ்புத் மற்றும் ரிஷி கபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆனால் இசையுலகில் நீண்ட காலங்கள் சிறப்பாக பணியாற்றிய லதா மங்கேஷ்கர் மற்றும் பப்பி லஹரி ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











