காத்தாடி ராமமூர்த்தி, காக்கா முட்டை மணிகண்டனுக்கு பாலச்சந்தர் விருது!
புதிதாக ஆரம்பிக்கவிருக்கும் கே பாலச்சந்தர் நினைவு அறக்கட்டளை வழங்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் மூத்த கலைஞர் காத்தாடி ராமமூர்த்தி, காக்கா முட்டை இயக்குநர் மணிகண்டன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

நாடகம், வெள்ளித்திரை, சின்னத்திரை ஆகிய மூன்று துறைகளிலும் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் இனி பாலச்சந்தர் விருது வழங்கப்படும்.
இந்த முதலாண்டு விருதுகளை நாடகத்துறையில் சாதனைப் படைத்த காத்தாடி ராமமூர்த்தி, திரைத் துறையில் முதல் படத்திலேயே கலக்கிய இயக்குநர் மணிகண்டன், சின்னத்திரையில் சாதனை செய்த திருமுருகன், எழுத்துத் துறையில் சிறந்து விளங்கும் எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோருக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விருதுக்கான சாதனையாளர்களை இயக்குநர் எஸ்பி முத்துராமன் தலைமையிலான குழு தேர்வு செய்தது.
வியாழக்கிழமை பாலச்சந்தர் பிறந்த நாளன்று நடக்கும் அறக்கட்டளை துவக்க விழா நிகழ்ச்சியில் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. நடிகர் கமல் ஹாஸன், நடிகர், சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சரத்குமார் மற்றும் திரையுலக பிரமுகர்கள் முன்னிலையில் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
இந்த விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முத்தமிழ்ப் பேரவை திருவாவடுதுறை டிஎன் ராஜரத்தினம் கலையரங்கில் நடக்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











