இசைஞானிக்கு என்டிஆர் விருது
இசைஞானி இளையராஜாவுக்கு, ஆந்திர மாநில அரசு வழங்கும் சிறந்த சாதனை படைத்தோருக்கான என்.டி.ஆர். விருது கிடைத்துள்ளது.
ஆந்திர மாநில அரசு சிறந்த திரை சாதனையாளர்ளுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கெளரவித்து வருகிறது. கடந்த 1996ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.ஆனால் இந்த விருது கடந்த 2002ம் ஆண்டு திடீரென நிறுத்தப்பட்டது. நிதிப் பற்றாக்குறைதான் இதற்குக் காரணம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து என்.டிஆர். விருதினை வழங்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்தன.
இதையடுத்து தற்போது மீண்டும் இந்த விருது வழங்கப்படவுள்ளது. இதற்காக 3 பேர் கொண்ட கமிட்டி அறிவிக்கப்பட்டது. இந்த கமிட்டி கடந்த 2003, 2004 மற்றும் 2005ம் ஆண்டுக்கான விருது பெறுவோரைத் தேர்வு செய்துள்ளது.
பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவுக்கு 2003ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது. இவர் 333 படங்களில் ஹீரோவாக நடித்து (இன்னும் கூட நடித்து வருகிறார்) சாதனை படைத்தவர்.
2004ம் ஆண்டுக்கான விருதினை நமது இசைஞானி இளையராஜா பெறுகிறார். கன்னட நடிகர் அம்பரீஷுக்கு 2005ம் ஆண்டுக்கான விருது கிடைத்துள்ளது.
இன்னொரு திரைப்பட விருதான நந்தி விருதுகள் வழங்கப்படும் நிகழ்ச்சியின்போது என்.டி.ஆர். விருதும் வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான நந்தி விருதை நம்ம ஊர் திரிஷா பெற்றிருக்கிறார் என்பது தெரியும்தானே!


Click it and Unblock the Notifications











