தேசிய விருதுகள் குவித்த தமிழ்ப் படங்கள்... ஒரு பார்வை!
இந்த ஆண்டு அதிக தேசிய விருதுகளை அள்ளியவை, தென் இந்திய மொழிப் படங்கள்தான். குறிப்பாக தமிழ்.
இந்த ஆண்டு மூன்று தமிழ்ப் படங்கள், ஐந்து விருதுகளைக் குவித்துள்ளன. இந்தப் படங்கள் தமிழ் உணர்வாளர்களால் உருவாக்கப்பட்டவை என்பது ஒரு கூடுதல் பெருமை.

தலைமுறைகள்
அமரர் பாலு மகேந்திராவின் கடைசிப் படம். தமிழையும் இந்தத் தாத்தாவையும் மறந்துடாதப்பா... என்று தழுதழுத்தபடி பேரனிடம் சொல்லும் பாலு மகேந்திரா குரல் இன்னும் காதுகளை விட்டு நீங்கவில்லை. சின்ன பட்ஜெட்டில், ஆனால் பெரிய விஷயத்தை எளிமையாய்ச் சொன்ன படம் தலைமுறைகள்.

கவுரவம்
தமிழ் தெரியாத தன் பேரனுக்கு தாத்தா எளிமையாக தமிழ் கற்றுத் தந்ததும், பதிலுக்கு தாத்தாவுக்கு பேரன் ஆங்கிலம் கற்றுத் தருவதுமான காட்சிகள் இந்தத் தலைமுறை அவசியம் பார்க்க வேண்டியவை. அடுத்த தலைமுறையில் எந்த தமிழ்க் குழந்தையும் தமிழ் தெரியாது என்று சொல்லும் அவலமே இருக்கக் கூடாது என்ற பாலு மகேந்திராவின் ஆதங்கத்துக்கு வெள்ளி ரஜத் கமல் வழங்கி கவுரவித்திருக்கிறது மத்திய அரசு!
வெள்ளித் தாமரைப் பதக்கம், ரூ 1.5 லட்சம் ரொக்கம் மற்றும் ஒரு சான்றிதழ் இந்தப் படத்துக்கு வழங்கப்படும்.

தங்க மீன்கள்
சில சர்ச்சைகளைச் சந்தித்த படம் தங்க மீன்கள். இது நல்ல படமா என்பது இப்போதும் விவாதத்துக்குரியதே. இந்தப் படத்துக்கு சிறந்த மாநில மொழிப் படம், சிறந்த பாடலாசிரியர் (நா முத்துக்குமார்), சிறந்த குழந்தை நட்சத்திரம் (பேபி சாதனா) விருதுகள் கிடைத்துள்ளன. படத்தில் ஏகத்துக்கும் மிகைத்தனம், தவறான பரப்புரைகள் இடம்பெற்றிருந்தாலும், ஒரு குழந்தையின் குழந்தைத் தனங்களை மதிக்க வேண்டும் என்ற அடிநாதம்தான் இந்தப் படத்தின் ப்ளஸ்.
சிறந்த மாநில மொழிப் படம் என்ற பரிசுபெற்றுள்ள இந்தப் படத்துக்கு ரூ 1 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். உடன் பதக்கமும் சான்றிதழும் தரப்படும்.

நா முத்துக்குமார்
படத்தின் இன்னொரு சிறப்பு யுவன் சங்கர் ராஜாவின் இசையும் அதற்கு நா முத்துக்குமார் தந்த வரிகளும். ஆனந்த யாழை மீட்டுகிறாய்... பரவசமான பாடல். அந்த இசைக்கும் கூட விருது கொடுத்திருக்கலாம். நா முத்துக்குமாருக்கு பதக்கமும், ரூ 50000 ரொக்கமும் சான்றிதழும் வழங்கப்படும்.
இந்தப் படத்தில் நடித்த பேபி சாதனா சிறந்த நடிகைக்கான விருதினைப் பெற்றுள்ளார். இவருக்கு பதக்கமும் ரூ 50000 பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.

வல்லினம்
கூடைப் பந்தாட்டத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் வல்லினம். மிகப் பிரமாதமான படம் என்று சொல்ல முடியாவிட்டாலும், அந்த விளையாட்டு குறித்து சிரத்தையெடுத்து அறிவழகன் இயக்கிருந்ததார். நகுல் - மிருதுளா நடித்த இந்தப் படத்தில் முதல் பாதியைவிட, பின் பாதியில் எடிட்டருக்கு சவால் இருந்தது. அதற்காகவே சிறந்த எடிட்டருக்கான விருது சாபு ஜோசப்புக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐந்தில் நான்கு பாலு மகேந்திராவுக்குதான்..
இந்த ஆண்டு கிடைத்துள்ள 5 விருதுகளில் நான்கு பாலு மகேந்திராவுக்கும் அவரது சீடர்களுக்கும் கிடைத்திருக்கிறது என்பதுதான் சிறப்பு.


Click it and Unblock the Notifications











