முதல் படத்திலேயே ரசிகர்களை ‘மதி’ கெட்டு திரிய விட்ட ரித்திகா.. தேசிய விருதும் தப்பவில்லை!
சென்னை: வா மச்சானே, மச்சானே என முதல் படத்திலேயே ரசிகர்களை மதி கெட்டு திரிய வைத்த ரித்திகா சிங், இறுதி சுற்று படத்திற்காக தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நாயகனாக நடித்திருந்த படம் இறுதிச்சுற்று. வசூல்ரீதியாக மட்டுமின்றி, நல்ல விமர்சனத்தையும் பெற்றது இப்படம்.
இப்படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங்.

மிரட்டல் நடிப்பு...
முதல் படத்திலேயே, ‘யார்ரா இந்தப் பொண்ணு... ப்பா...' என நடிப்பில் மிரள வைத்தார் ரித்திகா. படப்பிடிப்பின் போதே நாசர், மாதவன் உள்ளிட்ட சக நடிகர்கள் ரித்திகாவின் நடிப்புத் திறமையைப் பாராட்டினார்களாம்.

வா மச்சானே...
மீனவப் பகுதி பெண்ணாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் தமிழில் அறிமுகமான ரித்திகா, ‘வா மச்சானே...' பாடலில் ஆடிய குத்தாட்டம் மூலம் இளசுகளின் மனதில் சுலபமாக இடம் பிடித்தார்.

குத்துச்சண்டை வீராங்கனை...
நிஜத்தில் குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங், இறுதிச் சுற்று படத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ‘உனக்கு என்ன வேணும் மாஸ்டர்?' எனக் கேட்கும் காட்சியில் மக்களின் கைதட்டல்களை அள்ளினார்.

தேசிய விருது...
இந்நிலையில், இப்படத்தில் ரித்திகாவின் சிறப்பான நடிப்பிற்கு பரிசாக தற்போது தேசிய விருதை அவர் பெற்றுள்ளார். நடுவர்களின் சிறப்பு விருது அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் முதல் படத்திலேயே தேசிய விருது பெற்ற நடிகைகள் பட்டியலில் இணைந்துள்ளார் ரித்திகா.

ஆண்டவன் கட்டளை...
இறுதிச்சுற்று பட வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ரித்திகா, காக்கா முட்டை படத்தை இயக்கிய மணிகண்டனின் இயக்கத்தில் ஆண்டவன் கட்டளை என்ற படத்தில் நடிக்கிறார். விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கும் இப்படத்தை விநியோகஸ்தர் அன்பு செழியனின் கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது.


Click it and Unblock the Notifications











