பிலிம்பேர் விருது விழாவில்.. தனுஷிடம் மன்னிப்புக் கேட்ட நயன்தாரா!
சென்னை: நடந்து முடிந்த பிலிம்பேர் விருது விழாவில் நடிகர் தனுஷிடம், நயன்தாரா மன்னிப்புக் கேட்டது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சமீபத்தில் நடந்து முடிந்த பிலிம்பேர் விருதுகள் விழாவில் தனுஷ் தயாரிப்பில் வெளியான காக்கா முட்டை, நானும் ரவுடிதான் என 2 படங்களுமே விருதுகளை வென்றன.
இதில் காக்கா முட்டை படத்திற்காக விருது வாங்க மேடை ஏறிய தனுஷ், அப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பைப் புகழ்ந்து பேசினார்.

ஆனால் நானும் ரவுடிதான் படத்தைப் பற்றியோ அப்படத்திற்காக சிறந்த நடிகை விருது வென்ற நயன்தாரா குறித்தோ, அவர் எதுவும் பகிர்ந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் அடுத்ததாக சிறந்த நடிகைக்கான விருதை வாங்க மேடையேறிய நயன்தாரா ''நான் தனுஷிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும்.
நானும் ரவுடிதான் படத்தில் என்னுடைய நடிப்பு அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் இன்னும் சிறப்பாக நடித்து அவரைக் கவர வேண்டும் என விரும்புகிறேன்.
இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறினார். நானும் ரவுடிதான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நயன்தாராவை, தனுஷ் பாராட்டவில்லை என்பதால் தான் இவ்வாறு அவர் மன்னிப்பு கேட்டதாகக் கூறுகின்றனர்.
நானும் ரவுடிதான் படப்பிடிப்பு சமயத்தில் விக்னேஷ் சிவன்-நயன்தாரா காதலால் படத்தின் பட்ஜெட் அதிகமானதாகவும் அதனால் தான் தனுஷ், நயன்தாராவைப் பாராட்டவில்லை என்று இன்னொரு தரப்பு கூறுகிறது.
எது எப்படியோ மன்னிப்பு கேட்பதுபோல நயன்தாரா, தனுஷை நன்றாக காயப்படுத்தி விட்டார் என்பது மட்டும் உண்மை..


Click it and Unblock the Notifications











