நயன்தாராவைப் போல ஒரு சிறந்த மனுஷியை நான் பார்த்ததில்லை - விக்னேஷ் சிவன்
சென்னை: நயன்தாரா போல மிகச்சிறந்த ஒருவரை தான் பார்த்ததில்லை என இயக்குநர் விக்னேஷ் சிவன் கூறியிருக்கிறார்.
2016 ம் ஆண்டிற்கான சைமா விருதுகள் விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. இதில் தென்னிந்திய நட்சத்திரங்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
விழாவில் விக்னேஷ் சிவனின் 'நானும் ரவுடிதான்' திரைப்படம் 5 விருதுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தது.கடந்த ஆண்டிற்கான சிறந்த நடிகர் விருதை விக்ரமும், சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவும் வென்றனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்
சைமா விருதுகள் விழாவில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் மீண்டும் ஒருமுறை தங்கள் காதலை உலகிற்கு எடுத்துக்காட்டியதாக கூறப்படுகிறது. 'நானும் ரவுடிதான்' படப்பிடிப்பு சமயத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இது வளர்ந்து இருவரும் ரகசியத் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

பிலிம்பேர்
சமீபத்தில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் காதல் முடிவுக்கு வந்து இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் பிலிம்பேர் விருதுகள் விழாவில் சிறந்த நடிகைக்கான விருதை வென்ற கையோடு சேர்ந்து செல்பி எடுத்து, தங்கள் காதல் வதந்தி குறித்த செய்திகளுக்கு இருவரும் முற்றுப்புள்ளி வைத்தனர்.

சிங்கப்பூர்
இந்த ஆண்டிற்கான சைமா விருதுகள் விழாவில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் சேர்ந்தே காணப்பட்டனர். சிங்கப்பூர் ஏர்போர்ட்டுக்கு வந்திறங்கியதில் இருந்து விழா முடியும் வரை இருவரையும் சேர்த்தே பார்க்க முடிந்தது. விருதுகள் விழாவிலும் இருவரும் அருகருகே அமர்ந்து சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். மீடியா, கேமராக்கள் என இரண்டையும் அவர்கள் கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.

விக்னேஷ் சிவன்
'நானும் ரவுடிதான்' படத்திற்காக சிறந்த இயக்குநர் விருதை வென்ற விக்னேஷ் சிவன் ''நயன்தாரா போல ஒரு சிறந்த நபரை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. இப்படம் குறித்து எழுந்த அனைத்து வதந்திகளுக்கும் அவர் தன்னுடைய நடிப்பின் மூலம் முற்றுப்புள்ளி வைத்து விட்டார்'' என்று நயன்தாராவைப் புகழ்ந்தார்.

நயன்தாரா
'நானும் ரவுடிதான்' படத்தில் நடித்த நயன்தாரா இந்த ஆண்டின் சிறந்த நடிகையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த விருதை வாங்க மேடையேறிய நயன்தாரா '' இந்தப் படத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேனா? என்று பயந்தேன். ஆனால் விக்னேஷ் தான் இந்த வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று கூறி நம்பிக்கையூட்டினார். மேலும் இந்த மாதிரியான வித்தியாசமான வேடங்களில் நடிக்க இதுதான் சிறந்த நேரம் என்று என்னை உற்சாகமூட்டினார்'' என விக்னேஷ் சிவனை வார்த்தைக்கு வார்த்தை புகழ்ந்து தள்ளினார்.

சிறந்த நடிகை
முடிவில் விருதை அளிக்க வந்த சிறப்பு விருந்தினர்களிடம் இயக்குநர் விக்னேஷ் சிவன் கையால் இந்த விருதை வாங்க விரும்புவதாக, நயன்தாரா தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் மேடையேறி சிறந்த நடிகைக்கான விருதை நயன்தாராவுக்கு தனது கையால் வழங்கினார்.
இதனைக் கண்ட பார்வையாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் கரகோஷம் எழுப்பி ஆரவாரம் செய்தனர். விரைவில் இருவரின் திருமண அறிவிப்பு குறித்த செய்திகள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











