இறுதிச் சுற்றின் மூலம் முதல் தேசிய விருதைப் பெற்ற ரித்திகா!
சென்னை: 'இறுதிச்சுற்று' படத்திற்காக சிறப்பு தேசிய விருதினை ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி கையால், நடிகை ரித்திகா சிங் பெற்றிருக்கிறார்.
கடந்த ஜனவரி மாதம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படம் 'இறுதிச்சுற்று'. செண்டிமெண்ட் பார்க்கும் தமிழ் சினிமாவில் இப்படியொரு தலைப்பா? என்று இப்படத்தின் தலைப்பைக் கேட்ட எல்லோருமே ஆச்சரியப்பட்டனர்.

ஆனாலும் நம்பிக்கை தளராமல் இப்படத்தை எடுத்து இயக்குநராக அதில் வெற்றியும் கண்டார் சுதா. பல உண்மைச்சம்பவங்களின் தொகுப்பான இறுதிச்சுற்றில் மாதவனுடன் இணைந்து அறிமுக நடிகையான ரித்திகா சிங் நடித்திருந்தார்.
ரித்திகா சிங் நடித்திருந்தார் என்று சொல்வதைவிட அந்தக் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார் என்று கூறலாம். முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டார்.
இந்நிலையில் மலர் டீச்சரை மறக்க வைத்து தமிழ்நாட்டில் பலரையும் 'மதி'கெட்டுத் திரிய வைத்த ரித்திகா சிங், தனது அசத்தலான நடிப்பிற்காக முதல் தேசிய விருதை நேற்று ஜனாதிபதி கையால் வாங்கியிருக்கிறார்.
இதன்மூலம் முதல் படத்திலேயே தேசிய விருதை வாங்கிய நடிகை என்ற பெருமை தற்போது ரித்திகாவிற்கு கிடைத்துள்ளது.இது ரித்திகா சிங்கின் கடின உழைப்புக்கும், திறமைக்கும் கிடைத்த பரிசு என சக நட்சத்திரங்களும், ரசிகர்களும் அவரைப் பாராட்டி வருகின்றனர்.
இதுபோல மேலும் பல விருதுகளை ரித்திகா சிங் வெல்ல வேண்டும் என ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்...


Click it and Unblock the Notifications











