எஸ்பிபி.,க்கு பத்மவிபூஷன், சித்ராவிற்கு பத்மபூஷன் விருது...கெளரவித்த மத்திய அரசு
டெல்லி : ஒவ்வொரு துறையிலும் சிறப்பான பங்களிப்பை அளித்தவர்களை தேர்வு செய்து, அவர்களின் சேவையை பாராட்டி குடிமக்களுக்கான உயரிய விருதான பத்ம விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் வழங்கி மத்திய அரசு கெளரவித்த வருகிறது. கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பத்ம விருதுகள் வழங்கும் விழா நடத்தப்படவில்லை.
இதனால் 2020 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கும் விழா கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதில் 29 பெண்கள், திருநங்கை உள்ளிட்ட மொத்தம் 119 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. 7 பேருக்கு பத்ம விபூஷன், 10 பேருக்கு பத்ம பூஷன், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டன.

எஸ்பிபி.,க்கு பத்மவிபூஷன்
இந்த விழாவில் மறைந்த பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியத்திற்கு பத்மவிபூஷன் விருது வழங்கப்பட்டது. 2020 ம் செப்டம்பர் மாதம் கொரோனா அறிகுறிகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எஸ்பிபி, கொரோனாவில் இருந்து மீண்ட நிலையில், 74 வது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிறகு இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் 2011 ல் பத்ம விபூஷன் மற்றும் 2001 ல் பத்மஸ்ரீ விருதுகள் எஸ்பிபி.,க்கு வழங்கப்பட்டன.

விருதை பெற்ற எஸ்பிபி.சரண்
கிட்டதட்ட 50 ஆண்டுகளாக 16 மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி உள்ளார். ரஜினிகாந்த், கமலஹாசன், சல்மான் கான் உள்ளிட்ட டாப் ஹீரோக்களுக்கு பல படங்களில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். எஸ்பிபி.,க்கு பதிலாக அவரது மகன் எஸ்பிபி சரண், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம் இருந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

சித்ராவிற்கு பத்மபூஷன்
பின்னணி பாடகிகள் கே.எஸ்.சித்ரா, பாம்பே ஜெயஸ்ரீ ராம்நாத், சாலமன் பாப்பைய்யா ஆகியோருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. சித்ராவிற்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது. சித்ரா, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, உருது, மலாய், லத்தின், அரபிக் உள்ளிட்ட மொழிகளில் 25,000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார்.

ஹிட் பாடல்கள் பாடியவர்
எஸ்பிபி உள்ளிட்ட முன்னணி பாடகர்களுடன் இணைந்து, இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரின் இசையில் பாடி உள்ளார் சித்ரா. இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகி உள்ளன.

இவர்களுக்கும் விருது
பாம்பே ஜெயஸ்ரீ, மலையாள பாடலாசிரியர் கைதரபரம் தாமோதரன் நம்பூதிரி ஆகியோருக்கும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டன. பாடலாசிரியராக சினிமா உலகிற்கு அறிமுகமான தாமோதரன் நம்பூதிரி பிறகு நடிகர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர் உள்ளிட்ட பல அவதாரங்களை எடுத்தார்.


Click it and Unblock the Notifications











