அப்பா பெற்றிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பார்... பத்ம விபூஷன் விருது குறித்து எஸ்பிபி சரண் உருக்கம்!
சென்னை: பத்ம விபூஷன் விருதை அப்பா பெற்றிருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என பாடகர் எஸ்பிபி சரண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
சாதனை படைத்தவர்களுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் பத்மவிபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ போன்ற விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2020-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
மொத்தம் 119 பேர் விருதுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருந்தனர்.இதில் 7 பேருக்கு பத்ம விபூஷன் விருதும், 10 பேருக்கு பத்மபூஷன் விருதும், 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

எஸ்பிபிக்கு பத்மவிபூஷன் விருது
இந்நிலையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இதில் பல்வேறு சினிமா பிரபலங்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன. அந்த வகையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணித்திற்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷண் விருதை அவரது மகன் எஸ்பிபி சரண் பெற்றுக் கொண்டார்.

எஸ்பிபி சரண் உருக்கம்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அதில் இருந்து மீண்டு வந்த நிலையில் அதனால் ஏற்பட்ட பின் விளைவுகளால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காலமானார். இந்நிலையில் அவருக்கு வழங்கப்பட்ட பத்ம விபூஷன் விருதை பெற்றுக் கொண்ட அவரது மகனும் பாடகருமான எஸ்பிபி சரண், அப்பா இருந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பார் என உருக்கமாக கூறியுள்ளார்.

அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சி
இதுதொடர்பாக ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ள அவர், "நிறைய கலவையான உணர்வுகள் இருந்தன. அப்பாவின் சாதனைகளைப் பற்றி நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோமோ, அவ்வளவு துரதிர்ஷ்டவசமாக, அவர் அத்தகைய மரியாதையைப் பெறுவதற்கு முன்பே இறந்துவிட்டார். ஆனால் அவரும் அவரது சாதனைகளும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என கூறியுள்ளார்.

நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருப்பார்
மேலும் "சங்கராபரணம் படத்துக்கான முதல் தேசிய விருது முதல் பத்ம பூஷன் வரை அரசாங்கத்திடம் இருந்து பெரும்பாலான விருதுகளைப் பெற்றவர் அப்பா. அவர் அவைகளை வேண்டாம் என்று சொல்லவே இல்லை. அவர் தனது சாதனைகளைப் பற்றி பெருமிதம் கொண்டிருந்தார். எந்தவொரு கலைஞருக்கும், அவர்களை சிறப்பாகச் செய்ய ஊக்குவிக்க அங்கீகாரம் தேவை. தேசத்திலேயே மிக உயர்ந்த அங்கீகாரம் ஒன்றைக் காட்டிலும் சிறந்த கௌரவம் என்ன இருக்க முடியும்! இதைப் பெற்றிருந்தால் அப்பா நிச்சயமாக மகிழ்ச்சியடைந்திருப்பார் என உருக்கமாக கூறியுள்ளார் எஸ்பிபி சரண்.


Click it and Unblock the Notifications











