ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் வெற்றிமாறன் இயக்கிய விசாரணை!
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான விசாரணை திரைப்படம் ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
தனுஷ் - வெற்றிமாறன் இணைந்து தயாரித்த படம் விசாரணை. இதில் சமுத்திரக்கனி, தினேஷ் நடித்திருந்தனர். இப்படத்தை லைக்கா நிறுவனம் வெளியிட்டது.

3 தேசிய விருதுகள்
பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் 3 தேசிய விருதுகளையும் கைப்பற்றியுள்ளது. சிறந்த தமிழ் படம், சிறந்த எடிட்டிங் மற்றும் சிறந்த உறுதுணை நடிகர் என 3 தேசிய விருதுகளை இப்படம் கைப்பற்றியது.

ஆஸ்கர் விருதுக்கு
இந்தியத் திரைப்பட கூட்டமைப்பின் தலைவர் கேத்தன் மேத்தா, இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது பிரிவு போட்டிக்கு, இந்தியாவில் இருந்து 'விசாரணை' தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்திய மொழிகளில் வெளியான 29 படங்கள் அடங்கிய தேர்வு பட்டியலில் இருந்து 'விசாரணை' படம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகத் திரைப்பட விழாக்களில்
'லாக்கப்' என்ற நாவலை மையமாக வைத்து இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான 'விசாரணை'. இப்படத்தின் பணிகளை முடித்து பல்வேறு உலகத் திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினார்கள். முதலில் வெனிஸ் திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அவ்விழாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ் படம் 'விசாரணை'.
அதனைத் தொடர்ந்து பல்வேறு திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட இப்படம் தணிக்கை அதிகாரிகளால் 'யு/ஏ' சான்றிதழுடன் பிப்ரவரி 5ம் தேதி வெளியானது. ரஜினி, கமல் உள்ளிட்ட தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் இப்படத்தைப் பாராட்டினார்கள். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

16 ஆண்டுகளுக்குப் பிறகு
தற்போது இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பாக தமிழ் படங்களில் இருந்து 'ஹேராம்' திரைப்படம், ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 16 வருடங்கள் கழித்து ஒரு தமிழ் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











