வீணாய் போன பிரார்த்தனைகள்... அக்ஷய் குமாரின் தாயார் காலமானார்
மும்பை : உடல் நலக்குறைவு காரணமாக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரின் தாயார் அருணா பாட்டியா இன்று, சிகிச்சை பலனின்றி காலமானார்.
அக்ஷய் குமாரின் தாயார் அருணா, மும்பையில் உள்ள ஹிராநந்தனி மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு ஐசியு.,வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. தொடர்ந்து உடல்நிலை மோசமடைந்தது.
இதனால் லண்டனில் ஷுட்டிங்கில் இருந்த அக்ஷய் குமார் 2 நாட்களுக்கு முன் அவசரமாக மும்பை திரும்பினார். தனது தாயின் மீது அதிக பாசம் கொண்ட அக்ஷய் குமார் ட்விட்டரில் தனது ரசிகர்களிடம், இது எனக்கும், எனது குடும்பத்திற்கும் கடினமான தருணம். உங்களின் ஒவ்வொருவரின் பிரார்த்தனையும் எனது அம்மாவின் உடல்நிலை சீராக உதவும். அனைவரும் எனது அம்மாவிற்காக பிரார்த்தனை செய்யுங்கள் என கேட்டுக் கொண்டார்.

அக்ஷய் குமாரின் இந்த கோரிக்கையை ஏற்று, ஏராளமான ரசிகர்கள், நண்பர்கள் உள்ளிட்டோர் அக்ஷய்யின் தாயார் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். இருந்தும் சிகிச்சை பலனளிக்காமல் அருணா இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கேட்ட அக்ஷய் குமார் கதறி அழுதுள்ளார்.
அக்ஷய் குமார் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பெல்பாட்டம் படத்தை முடித்த கையோடு ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் சாரா அலி கான், தனுஷ் நடிக்கும் Atrange Re படத்தில் நடித்தார். இதற்கிடையில், பூமி பட்நேகர் இயக்கும் ரக்ஷா பந்தன், ப்ருத்விராஜ் சவுகானின் வாழ்க்கை படமான ப்ருத்விராஜ், பச்சன் பாண்டே உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது சிண்டிரில்லா படத்தின் ஷுட்டிங்கிற்காக லண்டன் சென்றிருந்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் தாயாருடன் இருக்க வேண்டும் என்பதற்காக அவசரமாக கிளம்பி இந்தியா வந்து விட்டார்.

இருந்தாலும் இந்தியா கிளம்பும் முன், தனக்காக படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் என படக்குழுவினரிடம் கூறி விட்டு வந்துள்ளார் அக்ஷய். தான் இல்லாமல் எடுக்கப்பட வேண்டிய காட்சிகளை தொடர்ந்து எடுக்கும் படி அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற படங்களின் வேலைகளையும் தொடரவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் அக்ஷய் குமாரின் தாயார் உயிரிழந்ததால் அவரது மறைவிற்கு பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் தனிப்பட்ட முறையில் அக்ஷய் குமாரை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











