தென்னிந்தியத் திரைப்படங்களால் பாலிவுட்டுக்கு ஆபத்தா?: இதுதான் உண்மையான நிலவரம்ன்னு தெரியுமா?
சென்னை: கடந்த இரு வருடங்களாக இந்தியத் திரையுலகில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
கொரோனா ஊரடங்கு, ஓடிடி தளங்களின் வருகை திரைத்துறையில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தி வருகின்றன.
இதுபோன்ற காரணங்களால் தென்னிந்திய படங்களுக்கு வரவேற்பு கிடைப்பதாகவும், இந்திப் படங்கள் தோல்வியடைவதாகவும் சொல்லப்படுகிறது.

கொரோனா ஊரடங்கும் ஓடிடி தளங்களின் வருகையும்
நல்ல திரைப்படங்களாக இருந்தால் அது மொழிகளைக் கடந்தும் வெற்றியடையும் என்பதற்கு பல உதாரணங்கள் உள்ளன. இது எல்லா காலங்களுக்கும் பொருந்தக் கூடிய ஒன்றே. ஆனால், கொரோனா பொதுமுடக்கத்தால் திரையரங்குகள் மூடப்பட்ட போது, அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற முன்னணி ஓடிடி தளங்கள் இந்திய ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால், எந்த மொழிப் படங்களாக இருந்தாலும், அவைகளை நினைத்த நேரத்தில் பார்க்க முடிந்தது.

பாகுபலி தொடங்கி வைத்த பான் இந்தியா காலாச்சாரம்
முன்னதாக ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் இரண்டு பாகங்களாக வெளியான 'பாகுபலி' திரைப்படம், பான் இந்தியா என்ற சொல்வழக்கை முதன்முறையாக அறிமுகப்படுத்தியது. அதாவது ஒரு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளிலும் ஒரேநேரத்தில் எடுத்தால்,. அது பான் இந்தியா படம் என சொல்லப்பட்டது. அதற்கு முன்பெல்லாம் ரீமேக் செய்யும் வழக்கமே அதிகமாக இருந்தது.

பான் இந்தியா படங்களால் ரசிகர்களின் மனமாற்றம்
பான் இந்தியா என்ற சொல்லாடல், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, பாகுபலி போன்ற படங்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாகின. அதேபோல், அதில் நடித்த பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர் ராஜமெளலி போன்றவர்களும் பான் இந்தியா நட்சத்திரங்களாக கொண்டாடப்பட்டனர். இது ஆரோக்கியமானதா இல்லையா என்பதை, இன்னும் திரைத்துறை வல்லுநர்களால் இன்னும் உறுதிசெய்ய முடியவில்லை என்பது வேறு கதை.

புஷ்பா படம் போட்டுவைத்த புது ரூட்டு
'பாகுபலி', 'கேஜிஎஃப் முதல் பாகம்' ஆகிய படங்களுக்குப் பின்னர் வேறு எந்தப் படங்களுக்கும், பான் இந்தியா மார்க்கெட் எடுபடவில்லை. அதற்குள் கொரோனா ஊரடங்கும் வந்தது. ஆனால், 2021ம் ஆண்டு இறுதியில் வெளியான அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' புதிய ரூட்டைப் போட்டுக் காட்டியது. அதேநேரம், நேரடியாக ஓடிடிகளில் வெளியான 'சூரரைப் போற்று', 'சார்பட்டா பரம்பரை', 'ஜெய்பீம்' படங்களும் இந்தியாவை கடந்து சர்வதேச அளவில் கவனத்தைப் பெற்றன.

பாலிவுட்டை அதகளம் செய்த தென்னிந்தியப் படங்கள்
2022 தொடக்கத்தில் இருந்தே தென்னிந்தியத் திரைப்படங்களுக்கான வரவேற்பு இந்தியளவில் அதிகரிக்கத் தொடங்கியது. தெலுங்கில் இருந்து ஆர்.ஆர்.ஆர், கன்னடத்தில் கேஜிஎஃப் 2, தமிழில் இருந்து சமீபத்தில் வெளியான விக்ரம் என, இந்த மூன்று படங்களும் பிரமாண்ட ஹிட் கொடுத்தன. இந்தப் படங்களுடன் வெளியான இந்திப் படங்களின் நிலைமை மிகவும் மோசமாகியது. அதுவும் மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் கூட இந்திப் படங்களுக்கு பெருத்த அடி கிடைத்தன.


Click it and Unblock the Notifications











