மன அழுத்தம்..பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்றேன்..தீபிகா படுகோனே பகீர் தகவல்!
மும்பை : மன அழுத்தத்தால் பலமுறை தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே கூறியுள்ளார்.
ஓம் சாந்தி ஓம்' படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து, இந்தி திரையுலகில் அறிமுகமானவர் தீபிகா படுகோனே. முதல் படத்திலேயே ரசிகர்களின் தூக்கத்தை களவாடிய தீபிகா படுகோனே, குறுகிய காலத்தில் பாலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டாராக உச்சம் தொட்டார்.
ஆக்டிங், டான்ஸ், ரொமான்ஸ் என தீபிகாவின் நடிப்பையும் அவரது அழகையும் கண்டு சொக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இந்தி டாப் ஸ்டார்கள் அனைவருடனும் ஜோடி போட்டு ரவுண்டு கட்டி நடித்து வருகிறார்.

நடிகை தீபிகா படுகோனே
மும்பையில் நடைபெற்ற மனநலம் குறித்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட தீபிகா, மன அழுத்தத்தில் இருந்து எவ்வாறு மீண்டார் என்பது குறித்து பேசினார். அதில், பல நாட்கள் காலையில் எழுந்திருக்கவே மனம் வராது தூங்கிக்கொண்டே இருப்பேன். ஏன் என்றால் இரவு முழுவதும் ஏதோ ஒரு மனஅழுத்தம் என்னை ஆட்கொண்டு இருக்கும் அதனால்,பல நாள் நான் விடியும் போதுதான் தூங்கி இருக்கிறேன்.

பதில் இல்லை
என்னுடைய பெற்றோர் என்னை சந்திக்க வரும் போது என்னிடம் நலம் விசாரிப்பார்கள் அவர்களிடம், நான் நன்றாக இருப்பதாக கூறி அவர்களை அனுப்பிவிடுவேன். அப்படி ஒரு நாள் என்னை சந்திக்க வந்த என் அம்மா, உனக்கு ஏதாவது பிரச்சனை இருக்கா, வேலை இடத்தில் பிரச்சனையா? எந்த பிரச்சினையாக இருந்தாலும் சொல்லுமாறு கேட்டார். ஆனால் அந்த கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை.

தற்கொலை எண்ணம்
ஆனால், என் அம்மா என் பிரச்சினையை புரிந்து கொண்டு, என்னுடன் சேர்ந்து என் பிரச்சனைக்கு தீர்வு காண வைத்தார். நான் சினிமாவில் பிஸியாக இருந்தேன். எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனாலும், திடீரென்று காரணமே இல்லாமல் உடைந்து விடுவேன். சில நேரங்களில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எனக்கு தோன்றும். ஆனால் அவற்றை எல்லாம் நான் கடந்து வந்து விட்டேன். அதற்காக என்னுடைய அம்மாவுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும்.

மீண்டு வந்தேன்
அளவுக்கு அதிகமான மன அழுத்தத்தால், வெறுமையாக உணர்ந்தேன், காரணமே இல்லாமல் அழ ஆரம்பித்தேன். ஒரு மனநல மருத்துவரிடம் சென்று மருத்துவ ஆலோசனைகளை முறையாக பெற்று வந்தேன். பல மாதங்கள் அவ்வாறு சென்றன. முதலில் மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற தயக்கமாக இருந்தது. ஆனால் நான் மனப்போராட்டங்களை கடந்து சிகிச்சை பெற்று மீண்டு வந்தேன் என்றார் தீபிகா படுகோனே.


Click it and Unblock the Notifications











