ஊடகங்கள் மனசாட்சியோடு இருங்கள்… பிரபல பாலிவுட் நடிகை ஆவேசம்!
மும்பை: பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், சித்தார்த் சுக்லாவின் மறைவுக்குப் பிறகு வெளியான புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து மனம் மிகவும் காயமடைந்ததாக கூறியுள்ளார்.
சுக்லாவின் குடும்பத்தினர் சோகத்தில் கண்ணீர் மல்க இருந்த புகைப்படத்தை மீடியாக்கள் வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது வருத்தம் அளிக்கிறது.
மீடியாக்கள் உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். மனசாட்சியோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.

சித்தார்த் சுக்லா மறைவு
பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் சித்தார்த் சுக்லா. 40 வயதே ஆன இவர் கடந்த வாரம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். அதே சீசனில் சக போட்டியாளராக பங்கேற்ற ஷேனாஸ் கில்லை, நடிகர் சித்தார்த் காதலித்து வந்துள்ளார்.

ஏராளமானோர் அஞ்சலி
சித்தார்த் சுக்லாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சல்மான் கான், அக்ஷய் குமார் என ஏராளமான பாலிவுட் திரைப்பிரபலங்களும் வந்தனர். இவர்களை பல மீடியாக்கள் மாறிமாறி புகைப்படங்களையும் வீடியோக்களையும் எடுத்தனர். இதில் சித்தார்த் சுக்லாவின் குடும்பத்தினர் சோகத்தில் கண்ணீர் மல்க இருந்த பல புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி மனதை காயப்படுத்தின.

மனசாட்சியோடு இருங்கள்
இந்நிலையில், சித்தார்த் சுக்லாவின் மறைவுக்குப் பிறகு வெளியான புகைப்படங்கள், வீடியோக்கள் பகிர்வுக்கு மீடியாவை குறை கூறியுள்ளார் கீர்த்தி சனோன். இது தொடர்பாக தனது ட்விட்டர் பதிவில் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நம் ஊடகங்கள், புகைப்படக்காரர்கள், இணையதளங்கள் ஆகியோர் இப்படி உணர்வுக்கு மதிப்பளிக்காமல் நடந்து கொள்வதை பார்க்கும் போது மனம் நொந்துபோகிறது. இது செய்தி அல்ல, இது பொழுதுபோக்கும் அல்ல. உங்களுக்கான எல்லைகளை வகுத்துக் கொள்ளுங்கள். மனசாட்சியோடு இருங்கள் என்று கூறியுள்ளார்.

உணர்வுக்கு மதிப்பளிகள்
இறுதிச் சடங்குகளுக்கு மீடியாகளின் வெளிச்சம் வேண்டாம், தனிப்பட்ட முறையில் இழப்பைச் சந்தித்து, சோர்வடைந்திருக்கும் மனிதர்கள் முகத்தை கேமரா முன் வெளிச்சம் போட்டு காட்டுகிறீர்கள். அவர்களைத் துன்புறுத்துவதை நிறுத்துங்கள். இதெல்லாம் எதற்காக? சில பதிவுகளுக்காகவா? இணையதள ஊடகங்களும், சேனல்களும் கூட இந்தத் தவறைச் செய்கின்றனர். ஒரு முடிவெடுத்துக் கொள்ளுங்கள். அந்தப் புகைப்படங்களை, வீடியோக்களைப் பதிவேற்றாதீர்கள். இது போன்ற உணர்ச்சியற்ற பதிவுகளில், ஆழ்ந்த இரங்கள், மனம் நொந்தோம் என்று எழுதிவிட்டு உங்களின் வேலைகளை நீங்கள் செய்கிறீர்கள் என்று பதிவிட்டுள்ளார். கீர்த்தி சனோன் இந்த பதிவுக்கு பலரும் தங்கள் ஆதரவை தெரிவிப்பது மட்டும் இல்லாமல் பலரும் தங்களது கருத்துக்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

கீர்த்தி சனோன்
பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் தெலுங்கில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர் ஷாருக்கானுடன் தில்வாலே, அர்ஜூன் பாட்டியாவுடன் ஹவுஸ்புல் மற்றும் ஹீரோபண்டி, பனிபட் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.

மிமி படத்தில்
லட்சுமண் உடேகர் இயக்கத்தில் மிமி திரைப்படத்தில் கர்ப்பிணியாக நடித்திருந்தார் கீர்த்தி சனோன். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்தப் படத்துக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து, தென்னிந்திய மொழிகளில் ரீமேக் உரிமையை முன்னணி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதன் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











