ரூ. 400 கோடிக்கு 4 படங்களை கேட்ட ஓடிடி தளம்.. ஒரே வார்த்தையில் விரட்டியடித்த பிரபல தயாரிப்பாளர்!
மும்பை: முன்னணி ஓடிடி தளமான அமேஸான் பிரைம்மின் பல்க் ஆஃபரை பிரபல தயாரிப்பாளர் தூக்கியெறிந்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நாடு முழுவதும் திரையரங்குகளில் படங்கள் சரிவர ரிலீஸ் ஆகவில்லை.
பாலிவுட், கோலிவுட், டோலிவுட், மல்லுவுட் என பல மொழிகளிலும் டாப் ஹீரோக்களின் படங்கள் கூட ஓடிடி தளத்தில்தான் ரிலீஸ் செய்யப்பட்டு வந்தன.

50 சதவீத இருக்கைகள்
தற்போது கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் குறைந்துள்ள போதும் கூட பல படங்கள் ஓடிடி தளங்களுக்கே படையெடுக்கின்றன. காரணம் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா தொற்றுக்கு அஞ்சி, தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகள் மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி தளங்களில் ரிலீஸ் செய்ய
இதனால் படங்களை தியேட்டர்களில் ரிலீஸ் செய்தால் எந்த அளவுக்கு கூட்டம் வரும் எவ்வளவு வசூல் வரும் என்பதையெல்லாம் யோசித்து தயாரிப்பாளர்கள் படங்களை ஓடிடி தளங்களிலேயே ரிலீஸ் செய்ய முடிவு செய்து வருகின்றனர்.

பிரபல தயாரிப்பாளர் மறுப்பு
ஆனால் பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான ஆதித்ய சோப்ரா தனது நிறுவனம் தயாரித்த 4 படங்களுக்கு வந்த பல்க் ஆஃபரை வேண்டாம் என மறுத்துள்ளார். ஆதித்யாவின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்த, 'பன்டி அவுர் பாப்லி 2', 'ஷம்ஷேரா', 'பிருத்விராஜ்', 'ஜெயேஷ்பாய் ஜோர்டார்' உள்ளிட்ட பல படங்கள் வெளியீட்டிற்கு காத்திருக்கின்றன.

18 மாதங்களாக வெய்ட்டிங்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 18 மாதங்களாக இந்த படங்கள் ரிலீஸ் செய்யப்பட முடியாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் ஆதித்யாவின் தயாரிப்பு நிறுவனத்தை பல OTT தளங்கள் அணுகியதாகவும் ஆனால் ஆதித்யா தனது திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும் தகவல் வெளியானது.

அமேஸான் நிறுவனத்தின் ஆஃபர்
இந்நிலையில் இரண்டாவது அலை தொற்றுநோய்க்குப் பிறகு மற்றும் மகாராஷ்டிராவில் தியேட்டர்களை மீண்டும் திறப்பதற்கான அறிகுறி இல்லாததால், OTT நிறுவனமான அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் மீண்டும் ஆதித்ய சோப்ராவை அணுகியது. 4 படங்களை 400 கோடி ரூபாய்க்கு பெற்று கொள்வதாக கூறி பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது அமேஸான் நிறுவனம்.

விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
ஆனால் தனது முடிவில் உறுதியாக உள்ள ஆதித்யா சோப்ரா, வாய்ப்பே இல்லை, தியேட்டரில்தான் தனது படங்கள் ரிலீஸ் செய்யப்படும் என பட்டென கூறிவிட்டார். ஆதித்யா சோப்ராவின் நிறுவனம் தயாரித்த படங்களின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்ககப்படும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











